Advertisement

தேனுகாசுரன் வதம்

1. அதீத்ய பால்யம் ஜகதாம் பதே த்வம்
உபேத்ய பௌகண்ட வய: மநோஜ்ஞம்
உபேக்ஷ்ய வத்ஸ அவநம் உத்ஸவேந
ப்ரவர்த்ததா: தோ கண பாலநாயாம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உலகின் பதியே! நீ உனது ஐந்தாவது வயதைக் கடந்து, பௌகண்டம் என்னும் பருவத்தை அடைந்தாய் (6 முதல் 10 வயது). அப்போது கன்றுகளை மேய்ப்பதை விடுத்து, மாடுகளை மேய்த்து அவற்றைக் காக்கும் முயற்சியில் ஆவல் கொண்டாய்.

2. உபக்ரமஸ்ய அநுகுணா ஏவ ஸா இயம்
மருத் புராதீச தவ ப்ரவ்ருத்தி:
கோத்ரா பரித்ராணக்ருதே அவதீர்ண:
தத் ஏவ தேவ ஆரபதா: ததா யத்

பொருள்: குருவாயூரப்பனே! நீ இந்த கோத்ரத்தைக் காப்பதற்காகத் தோன்றினாய். (கோத்ரம் என்பதற்கு பூமி மற்றும் பசு என்று இரு பொருள் உண்டு.) உனது ஆறாவது வயதில் இந்தச் செயலைச் செய்யத் தொடங்கினாய். நீ இந்த வயதில் இதனைத் தொடங்குவது சரியே ஆகும்.

3. கதாபி ராமேண ஸமம் வந அந்தே
வந ச்ரியம் வீக்ஷ்ய சரந்ஸுகேந
ஸ்ரீதாம நாம்ந: ஸ்வ ஸகஸ்ய வாசா
மோதாத் அகா: தேநுக காநநம் த்வம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒரு நாள் நீ பலராமனுடன் சேர்ந்து காட்டினுள் அதன் அழகைக் கண்டு ரசித்தபடியே சுற்றி வந்தாய். அந்த நேரத்தில் ஸ்ரீதாமன் என்னும் உன் நண்பன் கூறியதைக் கேட்டு, தேனுகன் என்ற அசுரன் வசித்து வந்த காட்டிற்குச் சென்றாய் அல்லவா?

4. உத்கால தாலீ நிவஹே த்வத் உக்த்யா
பலேந தூதே அத பலேந தோர்ப்யாம்
ம்ருது: கர: ச அப்யபதத் புரஸ்தாத்
பல உத்கர: தேநுக தாநவ: அபி

பொருள்: குருவாயூரப்பா! உன்னுடைய சொற்களைக் கேட்ட பலராமன் தனது இரண்டு கைகளாலும் அங்கு இருந்த பனைமரங்களை உலுக்கத் தொடங்கினான். இதனால் பழுத்த மென்மையான பழங்களும், பழுக்காத கடினமான பழங்களும் கீழே விழுந்தன. அவற்றின் ஓசையைக் கேட்ட தேனுகன் ஓடி வந்தான் அல்லவா?

5. ஸமுத்யத: தேநுக பாலநே அஹம்
கதம் வதம் தைநுகம் அத்ய குர்வே
இதி இவ மத்வா த்ருவம் அக்ரஜேந
ஸுர ஓக யோத்தாரம் அஜீகத: த்வம்

பொருள்: குருவாயூரப்பனே! அப்போது நீ, நானே தேனுக கூட்டத்தை (பசுக்கள்) காப்பதற்காக உள்ளேன். பின் எப்படி நான் தேனுக வதம் ( தேனுகன் என்ற அசுரவதம்) செய்வது? என்று நினைத்தாய். இதனால் தானோ அந்த அசுரனை உனது அண்ணன் மூலம் வதம் செய்தாய்?

6. ததீய ப்ருத்யாந் அபி ஜம்புகத்வே ந
உபாகதா அக்ரஜ ஸம்யுத: த்வம்
ஜம்பூ பலாநி இவ ததா நிராஸ்த:
தாலேஷு கேலந் பகவந் நிராஸ்த:

பொருள்: பகவானே! குருவாயூரப்பா! அந்த சமயத்தில் தேனுகனின் அடியாட்கள் நரிகள் போன்று வேடம் பூண்டு உன்னிடம் வந்தனர். நீ எந்தவித களைப்பும் இன்றி, நாவற் பழங்களை எறிவது போல் அவர்களைப் பிடித்து பனை மரங்களின் மீது எறிந்தாய் அல்லவா?

7. விநிக்நதி த்வயி அத ஜம்புக ஓகம்
ஸ நாமதத்வாத் வருண: ததாநீம்:
பய ஆகுல: ஜம்புக நாமதேயம்
ச்ருதி ப்ரஸித்தம் வ்யதித இதி மன்யே

பொருள்: குருவாயூரப்பா! நீ அந்த நரிக்கூட்டத்தை (ஜம்புகம்) அழிக்கத் தொடங்கினாய். இதனைக் கண்ட ஜம்புகன் என்னும் அதே பெயரையுடைய வருணதேவன் பயந்து விட்டான். இதனால் தன்னுடைய அந்தப் பெயர் வெளியில் தெரியாவண்ணம் மறைத்து வேதங்களில் மட்டுமே இருக்கும்படிச் செய்தான். என்று நான் நினைக்கிறேன் இது சரியா?

8. தவ அவதாரஸ்ய பலம் முராரே
ஸஞ்ஜாதம் அத்ய இதி ஸுரை: நுத: த்வம்
ஸத்யம் பலம் ஜாதம் இஹ இதி ஹாஸீ
பாலை: ஸமம் தால பலாநி அபுங்க்தா:

பொருள்: குருவாயூரப்பா! முராசுரனை அழித்தவனே! தேவர்கள் உன்னை வணங்கி, க்ருஷ்ணா! உனது அவதாரத்திற்கு உரிய பலன் இப்போதுதான் ஏற்பட்டது என்றனர். நீயும் அதனைக் கேட்டு கிண்டலாகச் சிரித்து, ஆம், எனக்கு இப்போதுதான் பலன் (பழம்) கிடைத்தது. என்றாய். இப்படிக் கூறியபடி உன் நண்பர்களுடன் பழங்களை உண்டாய்.

9. மது ஸ்ரவ ஸ்ருந்தி ப்ருஹந்தி தாநி
பலாநி மேத: பரப்ருந்தி புக்த்வா
த்ருப்தை ச த்ருப்தை: பவநம் பல ஓகம்
வஹத்பி: ஆகா: பாலகை: த்வம்

பொருள்: குருவாயூரப்பனே! மிகுந்த பழச்சாறும், இனிப்பாகவும், பெரிதாகவும் உள்ள அந்தப் பனம் பழங்களை உண்ட மனநிறைவும் மகிழ்வும் அடைந்தாய். உனது நண்பர்கள் அங்கு இருந்த பழங்களை தங்கள் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு புறப்பட்டவர்கள் அல்லவா?

10. ஹத: ஹத: தேநுக: இதி உபேத்ய
பலாநி அதத்பி: மதுராணி லோகை:
ஜயஇதி ஜீவஇதி நுத: விபோ த்வம்
ம்ருத்புராதீச்வர பாஹி ரோகாத்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! ஆயர்கள் அனைவரும், தேனுகன் மடிந்தான்! மடிந்தான்! என்று கூறியபடி உன்னிடம் வந்தனர். நீ கொடுத்த சுவையான பழங்களை உண்டு மகிழ்ந்தனர். நீ எப்போதும் ஜெயத்துடன் வாழ வேண்டும் என்று உன்னை வாழ்த்தினர். இப்படிப்பட்ட நீ என்னை பிணிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

Advertisement
 
Advertisement