Advertisement

வேலங்குடி கருப்பர் கவசம்

விநாயகர் துதி

வேலங் குடிக்கருப்பர் வெற்றியினைத் தந்தருள
நூலால் கவிபாடி நோக்குகிறேன்! - வாழ்நாளில்
எல்லாப் பேறும் எனக்களிக்கும் கற்பகமே!
வல்லமையை நாளும் வழங்கு!

(குறள் வெண்பா)

பாம்பாய் விளையாடும் பாங்கான கருப்பரெனும்
சாம்பிராணி வாசா சரண்!

கவசம்

பூங்குன்ற நாட்டு வேலங் குடியில்
நாங்கள் வணங்கும் நல்லவன் வருக!
கருப்பர் என்னும் கண் கண்ட தெய்வமே!
விருப்புடன் எங்கள் வீட்டிற்கு வருக!
வெள்ளைக் குதிரையில் துள்ளி வருகின்ற
நல்லவன் வருக! நாயகன் வருக!
காலங் காலமாய்க் காக்கும் கடவுளாய்
வேலங் குடியில் வீற்றவன் வருக!
தேம்பி அழாமல் செயல்பட வைக்கும்
சாம்பிராணியின் வாசன் வருக!
தூங்காப் புளியில் துடிப்புடன் அமர்ந்து
தீங்கினை அகற்றும் தெய்வம் வருக!
மண்டபம் கட்டியும் சென்றடையாமல்
நின்ற இடத்தில் நிலைத்தவன் வருக!
கூரைக் குள்ளே குழையாய் இருந்து
சீரைப் பெருக்கும் தெய்வம் வருக!
பச்சை வாழையைப் பரப்பி வணங்குவோர்
இச்சைகள் தீர்க்கும் இனியவன் வருக!
காட்டுக் குள்ளே காவலாய் இருந்து
வீட்டுக் குள்ளே விளக்காய் எரியும்
பாட்டுத் தெய்வமே பாங்காய் வருக!
அழைத்ததும் வரம் தரும் ஐயா வருக!
நினைத்ததும் அருள்தரும் நிமலா வருக!
வேலைக் கொண்டே விளங்கு தெய்வமாய்
பால்அபி ஷேகம் பார்த்தவன் வருக!
காலை எழுந்ததும் கருப்பா உனது
நூலைப் படித்தேன் நொடியில் வருக!
பஞ்சாமிர்தப் பிரியன் வருக!
அஞ்சா தெதிர்வரும் அழகன் வருக!
தூங்காப் புளியைத் தொட்டவன் வருக!
அரிவாள் தன்னில் ஆடுவோன் வருக!
பெருகுமணியாய் ஒலிப்பவன் வருக!
பச்சை வாழையைப் பார்ப்பவன் வருக!
அச்சம் தீர்க்கும் அரசன் வருக!
துங்கன் தம்பியே துணைக்கு வருக!
சங்கடம் தீர்க்கச் சடுதியில் வருக!
கண்கண்ட தெய்வமாய் கலியுகம் தன்னில்
முன்னால் நிற்கும் முதல்வன் வருக!
சிக்கல்கள் நீக்கும் தெய்வம் வருக!
பக்கத் துணையாய் படித்தவன் வருக!
இருட்டில் விளக்காய் எதிரில் வந்திடும்
அருளே வருக! அரசே வருக!
பர்மா நகரில் நீதிமன்றத்தில்
சாட்சிகள் சொல்ல சாம்பிராணியாய்
வாசம் தந்த வல்லவன் வருக!
நேசம் காட்ட நெருங்கி வருக!
ஆசைப் பட்டதை அடைந்திட வைக்கும்
ஈசா வருக! எழிலே வருக!
பூஜைகள் செய்தோர் பொருள்குவித்திடவே
மாசியை வழங்கிய மன்னவன் வருக!
பலதெய் வங்கள் பாரில் இருந்தும்
குலதெய்வம் எனக் கும்பிட நாங்கள்
தேர்ந்தெடுத் திட்ட தெய்வம் வருக!
சொர்ணதானத்தில் சொக்கி நிற்காமல்
அன்னதானத்தில் அகத்தை வைத்தே
வாழவைக் கின்ற வல்லவன் வருக!
சூழநிற்கின்ற துயரை விரட்டும்
நீல மேகமே! நினைத்ததும் வருக!
எங்கள் கருப்பா இன்றே வருக!
தங்கக் கருப்பா தனியே வருக!
மங்களம் கொடுக்க மனைக்கு வருக!
காட்டு வழிக்குக்கருப்பா எனும் குரல்
கேட்டதும் வந்திடும் கிளையே வருக!
வள்ளிக் கிழவிக்கு வழியைக் காட்டிய
நல்ல தெய்வமே நாடி வருக!
உடம்பில் இருக்கிற ஒவ்வொரு அங்கமும்
கடமையாய் காக்கும் கடவுளே வருக!
ஆய கலைகள் அனைத்தையும் கற்றுத்
தூயவன் ஆகத் துடிப்புடன் காக்க!
போட்டியில் வெல்லும் புலமையை தருக!
ஆற்றல் அனைத்தும் அடியேன் பெற்று
நாட்டோர் மதிக்கும் நல்லவன் ஆக்கு!
நோய்கள் எதுவும் எனையணு காமல்
தாயாய் இருந்து சர்வமும் காக்க
இரவும் பகலும் எந்நேரத்திலும்
உறவாய் இருந்து உதவிட வருக!
என்னை மறந்து பிழைநான் செய்யினும்
முன்னால் சென்றே முதல்வன் காக்க!
பாசக் கயிற்றை வீசிடும் காலன்
ஈசா! கருப்பா! எனும் குரல் கேட்டதும்
ஓசை கண்டே ஓடிடச் செய்க!
எந்த எதிர்ப்பும் எனையணு காமல்
வந்த எதிரியும் வாகாய்த் திரும்ப
விலங்கும், பூச்சியும், விஷமும் என்னைக்
கலங்கவைக்காமல் காத்திட வருக!
மன்னரும் மனிதரும் மகிழ்வுடன் வந்தே
என்னை வணங்கி ஏற்றம் பெற்றிட
உன்னைத் துதித்தேன் ஓடிவா கருப்பா!
வாழ்வில் அனைத்து வளமும் பெருக்கு!
கஷ்டம் அனைத்தும் கனிவாய்ப் போக்கு!
இஷ்டம் அனைத்தும் இனிதே கூட்டு!
பொன்னும் பொருளும் போற்றுசெல் வாக்கும்
இன்னும் பெருக்கி என்னைக் காத்திடு!
சிவல்புரி வாழும் சிங்கா ரக்கவி
உவந்தே எழுதிய உன்னதக் கவியாம்
கருப்பண்ண சாமி கவசம் இதனை
பொருப்பாய் நாளும் துதித்தவர் தமக்குச்
சோதனை நீக்கிச் சுகங்கள் கிடைக்கும்!
சாதனை யாளர் ஆகத் திகழ்வார்!
வெள்ளிக் கிழமை விருப்புடன் படித்தால்
செல்வாக்கோடு செல்வம் சேரும்!
சொல்பவர்க் கெல்லாம் சுகங்கள் கிடைக்கும்!
பாம்பு வடிவமும் பாதச் சுவடும்
நாம்வழி படவே நல்லவர் கண்டார்!
ஊருணி நீற்றில் தூங்காப் புளிஇலை
உதிர்த்துப் போட்டே கர்ப்பகா லத்தில்
குடித்தவர் தமக்குக் குலவிளக் களிப்பாய்!
குறைகள் இருந்தால் பாம்பாய் வருவாய்!
நிறை இருந்தாலோ நிச்சயம் காப்பாய்!
உன்னைச் சுற்றிலும் ஒருசில தெய்வம்
பக்தர்க்கருளப் பக்கம் வைத்தாய்!
அங்கா ளம்மனும் அருகில் வைத்தே
எங்களுக் கெல்லாம் ஏற்றம் தந்தாய்!
பிள்ளைகள் பிறந்ததும் தொல்லைகள் அகல
காதுகள் குத்திக் கரும்புத் தொட்டிலைக்
கட்டி மகிழ்ந்தால் காப்பாற் றிடுவாய்
காட்டு வழிக்குக் கருப்பன் நீதுணை
மேட்டு வழிக்கு மேலோன் நீதுணை
கூட்டு வழிக்குக் கும்பிட்டேன் நான்!
பச்சை வாழையைப் பரப்பிய வுடனே!
இச்சைகள் தீர்க்க எழுந்து வருவாய்!
அரிவாள் உனக்கு ஆயுதம் ஆகும்!
ஆட்டம்பாட்டம் அதில்தான் அதிகம்!
வறுமை விலகி வளங்கள் குவிய
ஒருமனதாக உன்னைத் துதித்தேன்
சீரும் சிறப்பும் செல்வாக் கோடும்
பேறுபதினாறும் பெறவழி வகுப்பாய்!
எம்குலப் பெண்கள் கண்ணீர் துடைத்து
தம்கழுத் ததனில் மாலைகள் சேர்க்கவும்
மழலை பிறக்கவும் மனம்வைத் தருள்வாய்!

Advertisement
 
Advertisement