Advertisement

ஜராஸந்த வதம் சிசுபால வதம்

1. ததா: மகத பூப்ருதா சிர நிரோத ஸங்க்லேசிதம்
சத அஷ்டக யுத அயுத விதயம் ஈச பூப்ருதாம்
அநாத சரணாயதே கம் அபி பூருஷம் ப்ராஹிணோத்
அயாசத ஸ மாகத க்ஷபணம் ஏவ கிம் பூயஸா

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மகத நாட்டின் மன்னனான ஜராஸந்தன் என்பவன் இருபதினாயிரத்து எண்ணூறு அரசர்களைத் தனது சிறையில் அடைத்து வைத்திருந்தான். அந்த அரசர்கள் பெரிதும் வருந்தினர். பின்னர் ஆதரவு இல்லாதவர்களுக்குப் புகலிடமாக விளங்கும் உன்னிடம் ஒரு தூதுவனை அனுப்பினர். இங்கு மேலும் கூறவேண்டியது என்ன? அவன் உன்னிடம் ஜராசந்தனை அழிக்கும்படி வேண்டினான்.

2. யியாஸு: அபிமாகதம் ததநு நாரத உதீரிதாத்
யுதிஷ்டிர மக உத்யமாத் உபய கார்ய பர்யாகுல:
விருத்த ஜயிந்: அத்வராத் உபயஸித்தி: இதி உத்தவே
சசம்ஸுஷி நிஜை: ஸமம் புரம் இயேத யௌதிஷ்டிரீம்

பொருள்: குருவாயூரப்பா! நீ ஜராஸந்தனுடன் யுத்தம் புரியக் கிளம்பினாய். அப்போது அங்கு வந்த நாரதர் உன்னிடம், தர்மர் ராஜஸுயயாகம் செய்யப்போவதைக் கூறினார். ஒரே நேரத்தில் இரண்டு அலுவல்கள் வந்ததை எண்ணி நீ வருத்தம் கொண்டாய் (எங்கு செல்வது என்று). இதனை உணர்ந்த உத்தவர் உன்னிடம், ராஜஸுய யாகம் என்பது பகைவர்களை வென்றபின் நடத்தப்பட வேண்டியது. ஆக இரண்டும் ஒன்றாகக் கைகூடுவது உறுதி என்றார். உடனே நீ உனது சேனைகளுடன் இந்த்ரப்ரஸ்தம் சென்றாய்.

3. அசேஷ தயிதா யுதே த்வயி ஸமாகதே தர்மஜ:
விஜித்ய ஸஹஜை: மஹீம் பவத் அபாங்க ஸம்வர்த்திதை:
ச்ரியம் நிருபமாம் வஹந் அஹ பக்த தாஸாயிதம்
பவந்தம் அபி மாகதே ப்ரஹிதவாந் ஸபீம அர்ஜுநம்

பொருள்: குருவாயூரப்பா! உனது மனைவியர்களை அழைத்துக் கொண்டு நீ இந்த்ரப்ரஸ்தம் வந்து சேர்ந்தாய். உனது அருள் பார்வை மூலம் தர்மர் தனது தம்பிகளுடன் சேர்ந்து பல தேசங்களை வென்றார். ஒப்புமை இல்லாத செல்வங்களையும் பெற்றார். பக்தர்களின் அடிமையான உன்னை பீமனோடும் அர்ஜுனனோடும் ஜராஸந்தனுடன் போர் புரிய அனுப்பினாராமே!

4. கிரிவ்ரஜ புரம் கதா: ததநு தேவ யூயம் த்ரய:
யயாச ஸமர உத்ஸவம் த்விஜ மிஷேண தம் மாகதம்
அபூர்ண ஸுக்ருதம் து அமும் பவநஜேந ஸங்க்ராமயந்
நிரீக்ஷ்ய ஸஹ ஜிஷ்ணுநா த்வம் அபி ராஜ யுத்வா ஸ்தித:

பொருள்: குருவாயூரப்பா! நீங்கள் மூவரும் அந்தணர்கள் போல் வேடம் பூண்டு மகத நாட்டின் தலைநகரமான கிரிவ்ரஜம் என்ற நகரத்தை அடைந்தீர்களாமே! அங்கு ஜராஸந்தனிடம் மற்போர் புரிய விண்ணப்பித்தீர்கள். புண்ணிய, செயல்கள் அதிகம் இல்லாத அந்த ஜராஸந்தனைப் பீமனுடன் மல்யுத்தம் செய்ய வைத்தாய். நீயும் அர்ஜுனனும் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தீர்களாமே!

5. அசாந்த ஸமர உத்ததம் விடப் பாடநா ஸம்ஜ்ஞயா
நிபாத்ய ஜரஸ: ஸுதம் பவநஜேந நிஷ்பாடிதம்
விமுச்ய ந்ருபதீந் முதா ஸமநுக்ருஹ்ய பக்திம் பராம்
திதேசித கத ஸ்ப்ருஹாந் அபி ச தர்ம குப்த்யை புவ;

பொருள்: குருவாயூரப்பா! முடிவு என்பதே இல்லாத அந்த யுத்தத்தில் ஜராஸந்தன் கர்வத்துடன் நின்றான். அப்போது நீ மரக்குச்சி ஒன்றை எடுத்து இரண்டாகப் பிளந்து பீமனுக்கு ஒரு குறிப்புக் கொடுத்தாய். இதனைப் புரிந்து கொண்ட பீமன், ஜராஸந்தனை இரண்டாகப் பிளந்துக் கொன்றான். நீ ஜராஸந்தனால் சிறை வைக்கப்பட்டிருந்த அரசர்களை விடுவித்தாய். உன்னிடம் ஆழ்ந்த பக்தியையும் அவர்களுக்கு வழங்கினாய். இதனால் அவர்கள் உலக விஷயங்களில் பற்று நீங்கியவர்களாக ஆனார்கள். அவர்களை தர்ம நெறியில் ஆட்சி செய்யும்படி கூறினாயாமே!

6. ப்ரசக்ருஷி யுதிஷ்டிரே ததநு ராஜஸுய அத்வரம்
ப்ரஸந்த ப்ருதகீ பவத் ஸகல ராஜக வ்யாகுலம்
த்வம் அபி அயி ஜகத் பதே த்விஜ பத அவநேஜ ஆதிகம்
சகர்த்த கிமு சத்யதே ந்ருப வரஸ்ய பாக்ய உந்நதி:

பொருள்: குருவாயூரப்பா! அதன் பின்னர் தர்மர் மிகவும் மகிழ்ந்து, தனது கட்டுப்பாட்டில் உள்ள அரசர்கள் நிறைந்திருக்க ராஜஸுய யாகம் செய்தார். அப்போது அங்கு வந்த அந்தணர்களின் கால்களைக் கழுவுதல், பட்டாடையால் துடைத்து விடுதல் போன்றவற்றை நீ செய்தாயாமே! எங்கும் உள்ளவனே! தர்மரின் பெருமை எத்தன்மையது அன்றோ!

7. தத: ஸவந கர்மணி ப்ரவரம் அக்ர பூஜா விதிம்
விசார்ய ஸஹதேவ வாக் அநுகத: ஸ தர்ம ஆத்மஜ:
வ்யதத்த பவதே முதா ஸதஸி விச்வ பூத ஆத்மநே
ததா ஸஸுர மாநுஷம் புவநம் ஏவ த்ருப்திம் ததௌ

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ராஜஸுயயாகத்திற்கு வந்திருப்பவர்களில் மிகவும் சிறந்தவர் யாரோ அவருக்கு பூஜை செய்து மரியாதை தருவது வழக்கம் ஆகும். உடனே சகாதேவன் எழுந்து, நமது கடவுளாக இருக்கும் க்ருஷ்ணனையே பூஜிக்கலாம். என்று தர்மரிடம் கூறினான். இதனைக் கேட்டு மகிழ்ந்த தர்மர், அனைத்து உயிர்களின் ஆத்மாவாக உள்ள உனக்குப் பூஜை செய்தாராமே! இதனைக் கண்ட மனிதர்களும் தேவர்களும் மனம் நிறைவு அடைந்தனர்.

தத: ஸபதி சேதிப: முநி ந்ருபேஷு திஷ்டத்ஸு அஹோ
ஸபாஜயதி கோ ஜட: பசுப துர்துரூடம் வடும்
இதி த்வயி ஸ துர்வச: விததிம் உத்வமந் ஆஸநாத்
உதாபதத் உதாயுத: ஸம்பதந் அமும் பாண்டவா:

பொருள்: குருவாயூரப்பா! அனைத்து அரசர்களும் முனிவர்களும் உன்னைப் பூஜிப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது சேதி நாட்டு அரசனான சிசுபாலன் என்பவன் எழுந்து, (இவ்வளவு அரசர்களும் முனிவர்களும் இங்கு உள்ளபோது) இடையர்களில் ஒருவனான இந்தச் சிறுவனுக்குப் பூஜையை செய்வது யார்? என்று கூறினான். கைகளில் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு எழுந்தான். அவனைப் பாண்டவர்கள் கோபத்துடன் எதிர்த்தனர்.

9. நிவார்ய நிஜ பக்ஷகாந் அபிமுகஸ்ய வித்வேஷிண:
த்வம் ஏவ ஜஹ்ருஷே சிர: தநுஜ தாரிணா ஸ்வ அரிணா
ஜநு: த்ரிதய லப்தயா ஸதத சிந்தயா சுத்ததீ:
த்வயா ஸ பரம் ஏகதாம் அத்ருத யோகிநாம் துர்லபாம்

பொருள்: குருவாயூரப்பா! உனது நண்பர்களை நீ தடுத்தாய். அசுரர்களை அழிப்பதில் வல்லதான உனது ஸுதர்சன சக்கரத்தின் மூலம் சிசுபாலனின் தலையை அறுத்தாய். அவன் முந்தைய மூன்று பிறவிகளிலும் இடைவிடாமல் உன்னுடன் பகைமை பாராட்டியும் அதனால் உன்மீது சிந்தனை கொண்டவனாகவும் இருந்தான் (சிசுபாலன் என்பவன் துவார பாலகர்களில் ஒருவன் - தசகம் 11 காண்க) இதனால் அவன் தூய்மை பெற்று, யோகிகள் அடையக் கூடியதான மோட்சத்தை அடைந்தான்.

10. தத: ஸுமஹிதே த்வயா க்ரதுவரே நிரூடே ஜந:
யயௌ ஜயதி தர்மஜ: ஜயதி க்ருஷ்ண: இதி ஆலபந்
கல: ஸ து ஸுயோதந: துதமநா: ஸபத்ந ச்ரியா
மய அர்ப்பித ஸபா முகே ஸ்தல ஜல ப்ரமாத் அப்ரமீத்

பொருள்: குருவாயூரப்பா! இப்படியாக நீ அந்த பெருமை வாய்ந்த யாகத்தை நிறைவேற்றினாய். அங்கு இருந்த அனைவரும் தர்மன் வாழ்க! க்ருஷ்ணன் வாழ்க! என்று கூவினார்கள். இதனைக் கண்டும், பாண்டவர்களின் செழிப்பைக் கண்டும் துரியோதனன் மனம் கொதித்தான். மயனால் கட்டப்பட்ட அந்த மாளிகையில் இருந்த தரையை பார்த்து நீர் என்றும், நீரைப் பார்த்து தரை என்றும் தவறாக நினைத்துக் தடுமாறினானாமே!

11. ததா ஹஸிதம் உத்திதம் த்ருபத நந்தநா பீமயோ:
அபாங்க கலயா விபோ கிமபி தாவத் உஜ்ஜ்ரும்பயந்
தரா பர நிராக்ருதௌ ஸபதி நாம பீஜம் வபந்
ஜநார்த்தந மருத் புரீ நிலய பாஹி மாம் ஆமயாத்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஜனார்த்தனா! துரியோதனன் இதுபோன்று தடுமாறியதைக் கண்ட பீமனும் திரௌபதியும் மெதுவாகச் சிரித்தனர். உனது கடைக்கண் பார்வை மூலம் அவர்கள் சிரிப்பை ஒலி மிகுந்ததாக (துரியோதன் காதுகளில் ஒலிக்கும்படி) செய்தாய். இதன் மூலம் இந்தப் பூமியின் பாரத்தைக் குறைக்க நீ விதை விதைத்தாய் அல்லவா? என்னை பிணிகளில் இருந்து காப்பாற்றுவாயாக!

Advertisement
 
Advertisement