Advertisement

தயானந்த சரஸ்வதி சுவாமிகள்

தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடி கிராமத்தில் 15-8-1930 அன்று பிறந்த - நடராஜன் என்கிற இயற்பெயர் கொண்ட ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளுக்கு வள்ளுவரின் இந்தக் குறள் பொருந்தும்.

சிறுவயது முதலே வேதாந்த விஷயங்களில் மிகவும் பற்றுடையவராக இருந்தார். இளம்வயதில் சென்னையில் தங்கி ஆன்மிகப் பத்திரிகையாளராக பணிபுரிந்தார். இறைத்தொண்டில் முழுமையாக ஈடுபட துறவறம் மேற்கொள்தலே சிறந்த வழியென்று எண்ணி அதற்குத்தகுந்த ஆன்மிக குருவை நாடிச் சென்றார். அந்த வகையில் 1953-ல் சுவாமி சின்மயானந்தாவை (1918-1993) முதன்முதலில் சந்தித்தார். அவரது கொள்கையாலும், சேவையாலும் கவரப்பட்டு, சின்மயா மிஷனில் சேர்ந்து பல்வேறு நிலைகளில் சேவை செய்து இளம் பிரம்ம்சாரியான நடராஜன் தன்னை உயர்த்திக் கொண்டார். 1962-ல் சுவாமி சின்மயானந்தா சன்னியாச ஆசிரமத்தை இவருக்கு அளித்து, தயானந்த சரஸ்வதி என்கிற யோகப்பட்டத்தை வழங்கி வேதாந்த தத்துவத்தை போதித்தார்.

பின்னர் 1966 முதல் 1970 வரை ரிஷிகேஷில் தங்கி வேதம், சாஸ்திரம், உபநிடதம், அத்வைத சித்தாந்தம் போன்றவற்றை முறைப்படி தகுந்த வேத பண்டிதர்கள், ஞானிகள் மூலம் கற்றார். தொடர்ந்து பகவத் கீதை உபநிடதம் பிரம்மசூத்திரம் ஆகியவை பற்றி சொற்பொழிவாற்றத் தொடங்கினார். இளம் வயதிலேயே சுப்பிரமணிய ஐயர் என்கிற ஆங்கிலப் பேராசிரியர்மூலம் சமஸ்கிருத மொழியைக் கற்றார். எனவே பகவத் கீதையை ஆங்கிலத்தில் விளக்கிச் சொல்லும் திறமையையும் பெற்றார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மிகுந்த புலமைபெற்ற சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள், முதலில் சின்மயா மிஷன்மூலம் ஆன்மிகப் பயிற்சி முகாமை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடத்தி மக்களை ஆன்மிகப் பாதைக்கு அழைத்துச்சென்றார்.

1986-ல் அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா, செய்லர்ஸ்பர்க் ஆகிய இடங்களில் ஆர்ஷ வித்யா குருகுலம் என்கிற அமைப்பை ஏற்படுத்தி அங்குள்ள, மக்களுக்கு பகவத்கீதை, அத்வைத தத்துவம், உபநிடதம், யோகா போன்றவற்றை ஆங்கிலத்தில் போதித்தார். உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள புனிதத்தலமான ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் ஓர் ஆசிரமத்தை ஏற்படுத்தி, இளம் பிரம்மச்சாரிகள், துறவிகள் ஆகியோருக்கு தகுந்த ஆன்மிகப் பயிற்சிக்கல்வியை போதித்தார். இதே போன்று 1990-ல் கோயமுத்தூரில் இயற்கை எழில்சூழ்ந்த ஆனைகட்டி எனுமிடத்தில் ஆர்ஷ வித்யா குருகுலத்தை ஏற்படுத்தி, அங்கேயும் இதுபோன்று ஆன்மிகப்பயிற்சி முகாம் மற்றும் வகுப்புகளை நடத்தினார்.

இந்து மதத்தின் வேதாந்த அத்வைத தத்துவத்தை மேலைநாட்டவரும் அறியும் வண்ணம் கடல்கடந்து ஆங்கில மொழியில் சொற்பொழிவு மற்றும் பயிற்சி வகுப்புகளை முதன்முதலில் துவக்கியவர்கள் இருவர் ஆவர். ஒருவர் சுவாமி சின்மயானந்தா, மற்றொருவர் சுவாமி தயானந்த சரஸ்வதி.

சுவாமி விவேகானந்தரால் இந்து மதத்திற்கு எப்படி ஓர் இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டதோ, அதுபோன்று சுவாமி தயானந்த சரஸ்வதியால் இந்து மதத்திற்கு மேலும் புத்துணர்ச்சி ஏற்பட்டது என்றால் மிகையாகாது. 2000 - ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் சபையில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இவர் ஆற்றிய உரையைக் கேட்டு மயங்காதவர்களே இல்லை எனச் சொல்லலாம். இந்து மதத்தின் கூட்டு வழிபாட்டு முறையைப் பெரிதும் ஆதரித்தார். தமிழ், சமஸ்கிருத வழிபாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்ததோடு, இந்து மதத்தின் அனைத்து ஆன்மிக மடாதிபதிகள், துறவிகள், அருளாளர்களை இணைக்கும் முயற்சிக்கும் வித்திட்டார். ஆன்மிகப் பணியுடன் நிற்காமல் கல்விப் பணி, மருத்துவப்பணி, ஏழை எளியோருக்கு உதவுதல் போன்ற சமுதாயப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவரது ஒப்பற்ற ஆன்மிக சேவையைப் பாராட்டி ஸ்ரீசிருங்கேரி மடத்தின் உயரிய விருதான ஆதி சங்கரர் விருது - 2012 ல் திருநெல்வேலியில் சங்கர ஜெயந்தி அன்று வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்து மதத்தின் பண்டைய கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றில் அதிகம் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்த தயானந்த சரஸ்வதி சுவாமிகள், ரிஷிகேஷில் 23-9-2015 அன்று தமது 85- ஆவது வயதில் சித்தியடைந்தார்.

Advertisement
 
Advertisement