Advertisement

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) + தொட்டதெல்லாம் துலங்கும் - வியாபாரத்தில் சிறு விரயம்! (100/80)

கனிவான உள்ளம் படைத்த கன்னி ராசி அன்பர்களே!

உங்கள் ராசி நாதன் புதன் சாதகமாக இருக்கும் நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. அவர் உங்களை நல்வழியில் அழைத்து செல்வார். சனி பகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் இருக்கிறார். இது உன்னத நிலை. அவர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார். விருச்சிக ராசியில் இருக்கும் சனி மார்ச் 28முதல் ஜூலை 14 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் தரும் நற்பலன்கள் சற்று குறையலாம். குரு பகவான் தற்போது உங்கள் ராசியில் உள்ளார். இதனால் கலகம் விரோதம் வரும் என்றும், மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவதுண்டு. குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. குரு பார்வைக்கு கோடி நன்மை உண்டு. மேலும், பிப். 7முதல் ஆக. 1 வரை அவர் வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன் தரமாட்டார். இதுதவிர குரு உங்கள் நட்புகிரகம் என்பதாலும் கெடுபலன் குறையும். மேற்கண்ட நிலையை கருத்தில் கொண்டு பலனை காணலாம். இந்த ஆண்டு சனி பகவானாலும், கேதுவாலும் நல்ல பொருளாதார வளம் இருக்கும். தேவைகள் அனைத்தும் தங்கு தடையின்றி நிறைவேறும். எடுத்த செயலை செய்து முடிக்கும் வல்லமை கிடைக்கும். அதில் குறுக்கிடும் தடைளை உங்கள் சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள். பிப்ரவரிக்கு பிறகு வீடு, மனை, வாகனங்கள் வாங்க யோகம் கூடி வரும். அதற்காக வாங்க உள்ள கடன் சிக்கலின்றி கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். யாரிடமும் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குருவின் பார்வையால் குடும்பத்தில் குதுõகலம் ஏற்படும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 7ம் இடபார்வையால் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 9-ம் இடபார்வையால், தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.

தொழில், வியாபாரம்: சீரான வளர்ச்சியை அடையலாம். பங்குதாரர்கள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். கடன் போன்ற உதவிகளையும் பெறலாம். மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை புதிய வியாபாரத்தை தொடங்க வேண்டாம். மீறி தொடங்கினால் பணவிரயம் ஏற்படலாம். நிர்வாகச் செலவுகள் எல்லை மீறும் என்பதால் கவனம் தேவை. போட்டியாளர்களின் தொல்லை இருக்கத்தான் செய்யும். இரும்பு தொடர்பான தொழில் செய்பவர்கள் பணம் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஜூலை 14க்கு பிறகு, சனிபகவான் வக்கிர நிவர்த்தி ஆகி விடுவார் என்பதால் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்: தன்னம்பிக்கையோடு பணி செய்வீர்கள். பிப்ரவரி முதல் ஜூலை வரை வேலையில் அதிக பளு இருக்கும். அதன் பின் அது குறையும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதன்பின் வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

கலைஞர்கள்: பிப்ரவரி முதல் ஜூலை வரை சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தங்களை பெற வேண்டியிருக்கும். பிறகு புதிய ஒப்பந்தங்களை எளிதாகப் பெறுவீர்கள். விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அரசியல்வாதிகள்: கட்சியில் முக்கியத்துவம் பெறுவீர்கள். பதவியும் பணமும் கிடைக்கும். வயதில் மூத்த பெண்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுவார்கள்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் சிறப்பான பலன் காணலாம். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பெண் உயரும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்பை பெறுவர். ஆனால் அடுத்த கல்வி ஆண்டில் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும்.

விவசாயிகள்: ஜூலை வரை மானாவாரி பயிர்களில் சிறப்பான வருவாய் கிடைக்கும். அதிக செலவு பிடிக்கும் பயிர்களையும், கறுப்பு நிற தானிய வகைகளையும் பயிரிடுவதை தவிர்க்கவும். ஜூலைக்குப் பின் நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் தீர்ப்புகள் சாதகமாக அமையும். புதிய வழக்கு விவகாரங்களில் சிக்க வேண்டாம்.

பெண்கள்: பிப்ரவரி முதல் ஜூலை வரை கணவர், மற்றும் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அதன்பின் பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்னையும் மறைந்து விடும். அவர்களால் பெருமையும், கணவரின் அன்பும் கிடைக்கும். குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சியை காண்பர். உடல்நிலை சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும், ஏழை சிறுவர்களுக்கு படிக்கவும் உதவி செய்யுங்கள். ராகுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

செல்ல வேண்டிய கோவில்: தஞ்சாவூர் மாவட்டம் திட்டை குரு கோவில்.

Advertisement
 
Advertisement