படூர்;படூர் பகுதியில் அமைந்துள்ள மணிகண்டேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது.திருப்போரூர் ஒன்றியம், படூர் பகுதியில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதவள்ளி உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின், திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில், மகா கும்பாபிஷேகம், நேற்று சிறப்பாக நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமையன்று கணபதி ஹோமத்துடன் ஆரம்பமான கும்பாபிஷேக விழா, தொடர்ந்து மஹாலட்சுமிஹோமம், முதல் காலம், இரண்டாம் கால யாகசால பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று காலை நான்காம் கால யாகசால பூஜைகள் பூர்த்தி செய்யப்பட்டன. காலை, 8.30 மணியளவில், கலசங்கள் யாகசாலையிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் சிவபெருமானுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. இவ்விழாவில், சுற்றுவட்டார பகுதி மக்களும், உள்ளூர்வாசிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
படூர் சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம்
பதிவு செய்த நாள்: செப் 17,2016