Advertisement

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குருபகவான் பார்க்கிறார் குறையனைத்தும் தீர்க்கிறார் (65/100)

அறிவு பூர்வமாக செயல்பட்டு வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!

குரு பகவான் சாதகமாக இருக்கும் நிலையில் புதிய ஆண்டு தொடங்குகிறது. குடும்பம், தொழிலில் நல்ல வளர்ச்சியை அடைந்திருப்பீர்கள். ஆனால், ஜன.16ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 5ல் இருந்து 6-ம் இடத்திற்கு அதிசாரமாக செல்கிறார். இதனால் உடல்நலக்குறைவு, குடும்ப பிரச்னை, மனஉளைச்சல் ஏற்படலாம். ஆனாலும் குருவின் சுப பார்வை பலத்தால் குறையனைத்தும் வந்த வேகத்தில் மறைந்து விடும். மார்ச் 10 முதல் ஆக.31 வரை வக்ரம் அடைவதால் நன்மை மேலோங்கும். ராகு 4-ம் இடமான சிம்மத்தில் இருப்பதால் உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். ஆனால், ஜூலை 26ல் ராகு 3-ம் இடமான கடகத்திற்கு வந்து நன்மை தர உள்ளார். பொருளாதார வளம் மேம்படும். கேது 10-ம் இடமான கும்பத்தில் உள்ளதால் உடல்நலக் குறைவை தந்திருப்பார். அவர் ஜூலை26ல் 9-ம் இடமான மகரத்திற்கு சென்றபின் உடல்நிலை குணம் அடையும். அதே நேரம் முயற்சியில் தடை குறுக்கிடலாம். சனி பகவான் 7-ம் இடமான விருச்சிகத்தில் இருப்பதால் வீண் அலைச்சல், மனக்கலக்கம் ஏற்படலாம். ஏப்.10 முதல் ஆக.6 வரை சனி வக்ரம் அடைவதால் கெடுபலன் தரமாட்டார். அவர் டிச.18ல் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அஷ்டமத்து சனி காலம் என்பதால் முயற்சியில் தடைகள் உருவாகலாம். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். குடும்பத்தினர் ஆதரவுடன் செயல்படுவர். குருவின் பார்வையால் தடைகளைத் தகர்த்து எறிந்து முன்னேறுவீர்கள். உங்கள் மீதான அவப்பெயர் மார்ச் மாதத்திற்கு பிறகு மறையும். ஜூலை 26க்கு பிறகு ராகுவின் பலத்தால் பொருளாதார வளம் சிறக்கும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சி தள்ளிப் போகலாம். தடைப்பட்ட திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் மார்ச் 10க்குப் பிறகு கைகூட வாய்ப்புண்டாகும்.

தொழில், வியாபாரம்: முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். கேதுவால் போட்டியாளர்களின் இடையூறு அவ்வப்போது தலை துõக்கலாம். அரசாங்க வகையில் பிரச்னை ஏற்படலாம். ஜூலை26க்கு பிறகு லாபம் படிப்படியாக உயரும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். ராகு பலமாக இருப்பதால் பண விஷயத்தில் சிரமம் உண்டாகாது.

பணியாளர்கள்: பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். வேலைப்பளுவைச் சந்திக்க நேரிடலாம். மார்ச் மாதத்தில் இருந்து நிலைமை சீராகும். அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இட மாற்றம் கிடைக்கும்.

கலைஞர்கள்: வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். மார்ச் 10 முதல் ஆக.31 வரை புதிய ஒப்பந்தம் தங்கு தடையின்றி கிடைக்கும். திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். அதன் பிறகு எதிலும் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும்.

அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பதவி கிடைக்க சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். ஆனால் பணப்புழக்கத்தில் குறை இருக்காது.

மாணவர்கள்: ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பது நல்லது. மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கல்வி வளர்ச்சி சிறப்பானதாக அமையும். போட்டியில் பங்கேற்று வெற்றி கிடைக்கப் பெறலாம்.

விவசாயிகள்: புதிய சொத்து வாங்குவதில் தாமதம் ஏற்படலாம். ஜூலை26க்கு பிறகு நவீன வேளாண்மையை கையாண்டு நல்ல வருவாய் காணலாம். கரும்பு, எள். பனை, பயறு மற்றும் மானாவாரி பயிர்களில் மகசூல் அதிகரிக்கும்.

பெண்கள்: வாழ்வில் நல்ல முன்னேற்றம் காண்பர். புத்தாடை அணிகலன்கள் கிடைக்கும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை வேலைக்குச் செல்லும் பெண்கள் வளர்ச்சி நிலை பெறுவர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவர். திருமணம் போன்ற சுபவிஷய பேச்சு நடக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும்.

செல்ல வேண்டிய கோவில்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.

பரிகாரம்: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாட்டை ராகு காலத்தில் மேற்கொள்ளுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். ஆஞ்சநேயரை சனிக்கிழமையில் வழிபடுங்கள். மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவி செய்யுங்கள்.

Advertisement
 
Advertisement