Advertisement

குணவதி

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். அங்கு, தாமிரபரணி சங்கமமாகும் இடத்தில் ஒரு கன்னிகை பூமாலையுடன் தனக்காகக் காத்திருப்பதை அறிந்தார். அவளிடம் சென்று, உனது தந்தை சொற்படி சுஸேந்திரரை மணம் புரியாமல் ஏகபத்னி விரதனான எனக்காகக் காத்திருப்பது தகுமா? என வினவினார். அந்தக் கன்னிகை, பிரபோ! விவாகம் மனம் சம்பந்தப்பட்டது. எனது அன்னை என் திருமணத்துக்காக பல ஆண்டுகள் சேகரித்ததை எனது பிதா சமுத்திரத்தில் கொட்டி விட்டார். அதுபற்றி வருத்தமில்லை. எனது வாழ்வில் திருமணம் நடக்குமானால் அது தங்களோடுதான் என ஆணித்தரமாகக் கூறினாள். பெண்ணே! மறுபிறவியில் நீ ஜாம்பவான் என்ற கரடியின் மகளாகப் பிறப்பாய். அப்போது உனக்கு மாலையிடுவோம் என்றார் ரகுகுலோத்தமர். மங்கை ராமரை வணங்கி தவத்தைத் தொடர, ராமபிரான் தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தார்.

கிருத யுக முடிவில், மாயாபுரியில் தேவசர்மா என்ற அந்தணர் இருந்தார். சகல சாஸ்திர விற்பன்னர். ஆத்ரேய கோத்திரத்தில் பிறந்த அவரது மகள் குணவதி, அழகிலும், அறிவிலும் சிறந்தவள். அவளைத் தனது சீடன் சந்திரனுக்கு மணமுடித்தார். அக்காலத்தில் மங்கை ருதுவாகுமுன் விவாகம் செய்விப்பது வழக்கம். தேவசர்மா, சந்திரனுடன் சமித்துக்கள் சேகரிக்க, இமயமலை சென்றார். அங்கே ஓர் அரக்கன் அவர்களை அடித்துக் கொன்று இரையாக்கிக் கொண்டான். இதைக்கேட்ட குணவதி, தவசியாய் வாழ்ந்தாள். சித்திரை மாதம் அயோத்தி வந்து சரயூ நதியில், ராம தீர்த்தத்தில் நீராடினால் மோக்ஷமென்று கேட்டு அங்கு வந்தாள். ராமர் அங்கிருப்பதை அறிந்து அவரைத் தரிசிக்க விரும்பினாள். அப்போது, சீதையோடு சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்த ராமரை நமஸ்கரித்த குணவதி, ரகுகுல திலகரே! தங்களுக்குப் பணிவிடை செய்யும் தாதிகளில் ஒருவளாய் என்னை நியமிக்க வேண்டுகிறேன் என்று இறைஞ்சினாள்.

பெண்ணே! நீ அந்தண குலத்தவள். உன் தந்தை தேவசர்மா துவாபர யுகத்தில் சத்ராஜித் என்ற அரசனாகப் பிறக்கப்போகிறான். சந்திரன் அக்ரூரன் என்ற பெயரோடு விளங்குவான். சத்யபாமையாக உதிக்கும் உன் ஆசை அப்போது நிறைவேறும் என்றருளினார். குணவதி ஹரித்வாரில் நெடுங்காலம் தங்கியிருந்து அங்கேயே உயிர்த் தியாகம் செய்தாள். ஒரு சமயம் ராமர் வேட்டையின்போது சிங்கம் ஒன்றைத் துரத்திக் கொண்டு ஒரு குகைக்குள் பிரவேசித்தார். அங்கே ராம பாணத்தால் அடிபட்ட சிங்கம் சாபம் நீங்கி வித்யாதரனாகி தேவலோகம் சென்றது. அந்தக் குகை அவரை மற்றொரு குகைக்கு இட்டுச் சென்றது. அங்கே நான்கு பெண்கள் எலும்பும், தோலுமாய் தவம் புரிந்தனர். அவர்கள் முன் தோன்றி, யாது வரம் வேண்டும்? என்று கேட்டார் ராமர். அவர்கள் துந்துபி என்ற அசுரன் இறந்து விட்டானா? தாங்கள் யார்? என ஹீனஸ்வரத்தில் கேட்டனர். ராமர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, துந்துபி வாலியால் மாண்டான். வாலி என் கையால் மடிந்தான். நான் தொட்டதும் தாங்கள் இளமையும், வலிமையும், சவுந்தர்யமும் பெற்றீர்கள் என்றார். அவர்கள் மகிழ்ச்சியுடன், பிரபு! எங்களைப் போல் துந்துபியால் கவர்ந்து வரப்பெற்ற 16,000 பெண்கள் சற்றுத் தொலைவில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் தாங்கள் காப்பாற்ற வேண்டும் எனப் பிரார்த்தித்தனர். அவ்வாறே செய்தார் ராமபிரான். அவர்கள் அவரையே பர்த்தாவாக வரிக்க, கிருஷ்ணாவதாரத்தில் தங்கள் அனைவரையும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வரமளித்து அவ்விடம் விட்டு அயோத்தி சென்றார் ராமர்.

Advertisement
 
Advertisement