Advertisement

குண்டலகேசி முன்னுரை!

குண்டலகேசி (குண்டலகேசி விருத்தம்) சமயப்பூசல் அடிப்படையில் தோன்றியது. இந்நூலாசிரியர் நாதகுத்தனார் ஆவர். இந்நூலின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஆகும். இந் நூல் பௌத்த சமயத்தைச் சார்ந்தது. தேரி காதையின் 46-ஆம் காதை நூலின் வரலாற்றையும், வைசிக புராணத்தின் 34 ஆம் சருக்கம் கதைத் தலைவியின் வரலாற்றையும் கூறுகின்றன.இக்காப்பியத்தில் 19 செய்யுட்கள் மட்டுமே கிடைத்துள்ளன. விருத்தப்பா என்பது இந்நூலின் பா வகையாகும். இக்காப்பியத்தின் தலைவி குண்டலகேசி. இவரது பெயரே நூலுக்கு வைக்கப்பட்டது. சுருண்ட கூந்தலை உடையவள் என்பது குண்டலகேசி என்பதன் பொருளாகும். இவள் இயற்பெயர் பத்திரை. குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா. அவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளை அடித்து, அரசனால் கொலைகளத்துக்கு அனுப்பப்பட்டான். அப்போது அவனைச் சாளரத்தின் வழியே கண்டு, அவள் அவன் மீது காதல் கொண்டாள். அது அறிந்த அவள் தந்தை அரசனுக்கு பொருள் தந்து அக்கள்வனை மீட்டு அவளுக்கு மணமுடித்து வைத்தார். இருவரும் சிலகாலம் இனிது வாழ்ந்த பின்னர், அவனுக்கு மனைவியின் நகைகளை கொள்ளை அடிக்கும் எண்ணம் வரவே, அவளைத் தனியே அருகில் இருந்த சேரர் மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான். அவன் நடத்தையில் சந்தேகம் கொண்ட பத்தா அது பற்றி கேட்க, அவன் நகைகளைப் பறித்துக் கொண்டு அவளை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட இருப்பதைக் கூறினான். அது கேட்ட அவள் சாவதற்கு முன் கடைசியாக அவனை ஒருமுறை சுற்றி வந்து வணங்கவிரும்புவதாகக் கூறி அவனை அம் மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டாள். பின்னர் அவள் சமண மதத்தை தழுவினாள். அவள் தலைக் கூந்தல் பனங்கருக்கு மட்டையால் மழிக்கப்பட்டது. பின்னர் வளர்ந்த அவள் முடி வளைந்து குண்டலம் போல் காட்சி யளித்ததால் குண்டலகேசி என வழங்கப்பட்டாள். அவள் பல இடங்களில் வாதம் புரிந்து, கடைசியில் புத்தரிடம் ஞானத் தெளிவு பெற்று பவுத்தத் துறவியானாள்.

Advertisement
 
Advertisement