திருமலை: திருப்பதி பிரம்மோற்சவம் வருகின்ற 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி அக்டோபர் 1ம் தேதி சக்ரஸ்நானத்துடன் நிறைவேறுகிறது. இந்த ஒன்பது நாட்களும் உற்சவரான மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் தேவியர் சமேதரராய் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். காலையிலும் இரவிலும் பகலிலும் என மொத்தம் 16 விதமான வாகனங்களில் வலம்வருவார். ஐந்தாம் நாளன்று கருட சேவையில் வலம் வருவதைக்காண பக்தர்கள் பெருமளவில் திரள்வர். இந்த வருடம் நான்காம் நாளன்று (26/9/2017) இரவு சுவாமி வலம் வரும் சர்வபூபாள வாகனம் புதிதாக செய்யப்பட்டு உள்ளது. 8.89 கிலோ தங்கம்,355 கிலோ செம்பு,650 கிலோ மரம் என கிட்டத்தட்ட 1020 கிலோ எடையில் 8 கோடி செலவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோயிலை சுத்தம் செய்யும் திருமஞ்சனம் 19ம் தேதியும் அங்குரார்ப்பனம் 22ம் தேதியும் வலம் வருகிறது.