மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த நாங்கூரில் 108 திவ்ய தேச கோயில்களில் 35வது தலமான ஸ்ரீ செம்பொண்செய் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அல்லிமாமலரால் சமேத செம்பொன் அரங்கர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசணம் செய்யப்பட்ட இந்த கோயிலின் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 20ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஸ்ரீ ரமணி மற்றும் மாதவன் ஆகியோர் தலைமையில் பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத 3ம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து திவ்யப்பிரபந்த பாராயணமும், அதனையடுத்து 108 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்புதிருமஞ்சணம் நடத்தப்பட்டன. இதில் கோயில் ஸ்தலத்தார்கள், செயல் அலுவலர் பாஸ்கர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபாடு செய்தனர்.
நாங்கூர் செம்பொன்செய் கோயிலில் சிறப்பு திருமஞ்சணம்
பதிவு செய்த நாள்: நவ 22,2017