Advertisement

கும்பகோணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கருவறையில் தீ விபத்து

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான கருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் கருவறையில் இருந்த வஸ்திரங்கள், பூஜை பொருட்கள், பீரோ ஆகியவை எரிந்து சேதமடைந்தது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பழமையும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதேபோல் அடுத்தடுத்து தமிழகத்தில் திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட கோவில்களில் ஏற்பட்ட தீ விபத்தால் பக்தர்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சத்திரம்கருப்பூர் மெயின் ரோட்டில் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பனந்தாள் காசி மடத்துக்கு சொந்தமான கோவிலாகும். இன்று கார்த்திகை நட்சத்திரம் என்பதால் கோவில் சிவாச்சாரியார் சுந்தரேசன், மூலவர் சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்பாளுக்கும் அபிஷேகங்கள் செய்து, அலங்காரம் செய்தார். பின்னர் 12 மணியளவில் கருவறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு சென்றார். இதற்கிடையில் இன்று மதியம் 12.30 மணியளவில் கோவிலிலிருந்து திடீரென புகை வெளியேறியது. மேலும் துணிகள் எரிந்து கருகும் வாடை வீசியது. இதையடுத்து கோவிலுக்கு அருகில் குடியிருப்பவர்கள் உடனடியாக கோயில் சிவாச்சாரியருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

கோவில் கதவை திறந்து பார்த்த போது, கோவில் கருவறையில் இருந்த பூஜை பொருட்கள், பீரோவில் இருந்த சுவாமி, அம்பாளுக்கு சாத்தப்படும் 50 சேலைகள், 30 வேட்டிகள், எலக்ட்ராணிக் மங்கள வாத்தியம் உள்ளிட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. மேலும் அர்த்த மண்டபத்தில் இருந்த பூஜை பொருட்களும் எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு வந்து தீப்பிடித்து எரிந்ததை அதிர்ச்சியுடன் பார்த்தனர். மேலும் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கோவில் கணக்கர் மஞ்சமுனி கும்பகோணம் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement