Advertisement

செஞ்சி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம்

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த வைகாசி மாத அமாவாசையை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வைகாசி மாத ஊஞ்சல் உற்சவம் நேற்று (மே 15)ல் இரவு நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு 11.30 மணிக்கு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்திருந்த ஊஞ்சல் மண்டபத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஜோதி ஏற்றி சரண கோஷத்துடன் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நடந்த ஊஞ்சல் தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் பக்திபாடல்களையும், அம்மன் தாலாட்டு பாடல்களையும் பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர்.

ஊஞ்சல் தாலாட்டில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மாவட்ட நீதிபதி சரோஜினி தேவி உட்பட லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர். வடக்கு மண்டல ஐ.ஜி., ஸ்ரீதர், விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கினர்.

Advertisement
 
Advertisement