சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனித் திருமஞ்சன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு, அதிகாலையில், நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி, பிரகார வலம் வந்து, கொடி மரம் முன் எழுந்தருளினர். பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 7:00 மணிக்கு, ஆனித் திருமஞ்சன கொடி ஏற்றப்பட்டது. அப்போது, பக்தர்கள், பொன்னம்பலத்தானே... ஆடல் வல்லானே... என, பக்தி கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். பின், கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடந்தது. வரும் 16ல், தெருவடைச்சான் சப்பர தேரோட்டம், 20ல், நடராஜர் தேரோட்டம், 21 மதியம், ஆனித்திருமஞ்சன தரிசனம், சித்சபை பிரவேசம் நடக்கிறது.
நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா துவக்கம்
பதிவு செய்த நாள்: ஜூன் 13,2018