விருத்தாசலம்: விருத்தாசலம் ஆலமரத்து திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி உற்சவத்தில், பக்தர்கள் தீ மிதித்து, சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம், சாத்துக்கூடல் சாலையில் உள்ள ஆலமரத்து திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த மாதம் 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக, தீமிதி உற்சவத்தையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில் கோவில் வளாகத்தில் அர்ச்சுனர், திரவுபதி அம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து, 5:00 மணிக்கு மேல் பக்தர்கள் மணிமுக்தாற்றில் இருந்து ஊர்வலமாக வந்து, தீக்குண்டத்தில் இறங்கினர். பின்னர், கோவில் வளாகத்தில் மண்டியிட்டு, சாட்டையடி வாங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.