சிங்கபெருமாள்கோவில் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு குரு பூஜை விழா
சிங்கபெருமாள்கோவில்: சிங்கபெருமாள்கோவில் அடுத்த, திருக்கச்சூரில், மருந்தீஸ்வரர் மற்றும் தியாகராஜ சுவாமி கோவில் உள்ளது. தியாகராஜ சுவாமி கோவில், அறுபத்து மூவர் நாயன்மார்களில் ஒருவரான, சுந்தரரால் பாடல் பெற்ற தலமாகும். இக்கோவிலில், சிவபெருமான் அந்தணர் வடிவத்தில், தன்னுடைய பக்தனான சுந்தரருக்காக வீடு தோறும் சென்று, யாசகம் பெற்று சுந்தரரின் பசியை போக்கினார். ஆடி மாதம், சுந்தரமூர்த்திகள் மற்றும் சேரபெருமாள் கயிலாயம் சென்ற நாள். சுந்தரர் கயிலாயம் செல்வது அறிந்து, அவரை வரவேற்க, அவருக்கு முன் வெள்ளை குதிரையில், சேரபெருமாள் சென்று வரவேற்பதாக வரலாறு. இவ்விழா, ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு, இவ்விழா நேற்று காலை, விருந்திட்ட ஈஸ்வரர் மற்றும் சுந்தரமூர்த்திக்கு சிறப்பு மகா அபிஷேகமும், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குரு பூஜை விழாவும் நடந்தது. அதன் பின், சுந்தரமூர்த்தி சுவாமி, யானை வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து, கயிலாயம் சென்ற காட்சி நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.