திருப்பரங்குன்றத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா 6ம் நாளான நேற்று(நவம்.,20) சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சியில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகினர்.
வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, பல்லக்கில் சீவிலி நாயகர்,திருஞான சம்பந்தர் 16 கால் மண்டபம் முன்எழுந்தருளினர்.
அங்கு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை முடிந்து புராண கதையை பக்தர்களுக்கு கோயில் ஓதுவார் கூறினார்.இன்று (நவ.,21) காலை கங்காளநாதர் சுவாமி, காமதேனு
வாகனத்தில் சுவாமி, தெய்வானை, பல்லக்கில் நடராஜமூர்த்தி, சிவகாமி அம்பாள் புறப்பாடும், இரவு ரத்ன சிம்மாசனத்தில் சுவாமி, தெய்வானை புறப்பாடு நடக்கிறது.
மகா தீபம்: 8ம் நாள் திருவிழாவாக நாளை இரவு 7:00 மணிக்கு, கோயில் திருவாட்சி மண்டபம் ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகமும், நவ., 23 காலையில் தேரோட்டமும், மாலை 6:15 மணிக்கு மலைமேல் மகா தீபமும், நவ., 24ல் தீர்த்த உற்ஸவமும் நடக்கிறது.