Advertisement

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சவாலே சமாளி சாதிக்கப் பலவழி

திறமையால் பிறரைக் கவரும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் கேதுவால் செயலில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி பெற்றிருப்பீர்கள். மற்ற முக்கிய கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் கேதுவின் பலத்தால் கடந்த ஆண்டு கவுரவமாக வாழ்ந்திருப்பீர்கள். இந்நிலையில் தான் இந்த ஆண்டு மலர்கிறது.

குரு 4-ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து மன உளைச்சல், உறவினர் வகையில் வீண்பகையை உருவாக்குவார். ஆனால் அவர் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசிக்கு செல்லும் போது குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்துவார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை உண்டாகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் குருவின் 5 மற்றும் 7-ம் இடத்துப்பார்வைகள் சிறப்பாக உள்ளதால் நற்பலனைக் காணலாம். புதிய பதவி கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். வருமான உயர்வால் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.

சனிபகவான் தற்போது 5-ம் இடமான தனுசு ராசியில் இருப்பது சிறப்பான இடம் அல்ல. மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை குடிகொள்ளலாம். குடும்பத்தில் பிரச்னை குறுக்கிடலாம். சனி திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை சிறப்பாக உள்ளதால் ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம்.
மேலும் சனிபகவான் ஏப்.26 முதல் செப்.13 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் கெடுபலன் சற்று குறையும். மொத்தத்தில் இந்த ஆண்டு எதிர்வரும் சவால்களை சமாளித்து பலவழிகளிலும் சாதனை படைப்பீர்கள்.

மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
ஆண்டின் தொடக்கத்தில் கேதுவும், மத்திய பகுதியில் குருபகவானும், பிற்பகுதியில் ராகுவும் உறுதுணையாக இருப்பர்.
பொருளாதார வளம் சிறக்கும். அதே நேரத்தில் செலவுக்கும் பஞ்சமிருக்காது. எனவே சிக்கனமாக இருப்பது நல்லது. மார்ச் 13 வரை மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது.
வீண்விவாதத்தை தவிர்த்து பொறுமையாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். மார்ச் 13 முதல் மே 19 வரை வீட்டில் சந்தோஷம் மேலோங்கும். தடைபட்ட திருமணம் போன்ற
சுபவிஷயங்கள் நடந்தேறும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். சிலர் தற்போதுள்ளதை விட வசதியான வீட்டுக்கு குடிபோகலாம். புதிய வாகனம் வாங்கலாம்.

பணியாளர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சீரான நிலையில் இருப்பர். வேலைப்பளு கூடும். கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். சக ஊழியர்களின் உதவியை நாடாமல் இருப்பது நல்லது. ஆனால் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை உங்களுக்கு சாதகமான காற்று வீசும்.
மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். வேலையின்றி இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்புக்கு ஏற்ப ஆதாயம் கிடைக்காமல் இருந்த நிலை மாறும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை தானிய வியாபாரம், தங்கம், மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும். அதன் பிறகு எதிரிகளால் இடையூறு வரலாம். அதை சாதுர்யமாக முறியடிப்பீர்கள். நவம்பர், டிசம்பர், மாதங்களில் வெகுவான முன்னேற்றம் ஏற்படும். அரசு வகையில் உதவி கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் ஆரம்பிக்கலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று முன்னேற்றம் காண்பர். சிலர் தொழில் விஷயமாக வெளிநாடுகளுக்கு செல்வர். ஆனால் மே 19 முதல் அக்.26 வரை சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். தட்டி பறிக்கப்பட்ட புகழ், பாராட்டு எல்லாம் மே மாதத்திற்கு பிறகு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உன்னத நிலை அடைவர். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். பிப்.13க்கு பிறகு பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் மார்ச் 12 வரை சிரத்தை எடுத்தே படிக்க வேண்டியதிருக்கும். ஆனால் குருவின் பார்வையால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது.அதன் பிறகு கல்வியில் வளர்ச்சி காணலாம். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் ஏற்படும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.

விவசாயிகள் சீரான வருவாய் காண்பர். கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். மானாவாரி பயிர்களின் மூலம் வருமானம் காணலாம். ஆனால் பிப். 13க்கு பிறகு நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும். ஆண்டின் இறுதியில் புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டுப்போன சொத்து மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஆடம்பர செலவை தவிர்க்கவும். வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உறவினர்கள் வகையில் அனுகூலம் இருக்காது. மார்ச் 13ல் இருந்து மே 19 வரை நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும்.
தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். சகோதர வகையில் உதவி கிடைக்கும். அண்டைவீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.

பரிகாரம்:

* சனியன்று சனீஸ்வரருக்கு எள் தீபம்
* ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு

பாடுங்க! பாடுங்க

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பும் அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்

Advertisement
 
Advertisement