Advertisement

விநாயகரின் 32 வடிவங்கள்!

விநாயகரின் 32 வடிவங்கள்: 1. பால கணபதி, 2. தருண கணபதி, 3. பக்தி கணபதி, 4. வீர கணபதி, 5. சக்தி கணபதி, 6. துவிஜ கணபதி, 7. சித்தி கணபதி, 8. உச்சிஷ்ட கணபதி, 9. விக்ன கணபதி, 10. க்ஷிப்ர கணபதி, 11. ஹேரம்ப கணபதி, 12. லட்சுமி கணபதி, 13. மகா கணபதி, 14. விஜய கணபதி, 15. நிருத்த கணபதி, 16. ஊர்த்துவ கணபதி, 17. ஏகாட்சர கணபதி, 18. வர கணபதி, 19. த்ரயக்ஷர கணபதி, 20. சிப்ரப்ரசாத கணபதி, 21. ஹரித்ரா கணபதி, 22. ஏகதந்த கணபதி, 23. சிருஷ்டி கணபதி, 24. உத்தண்ட கணபதி, 25. ருணமோசன கணபதி, 26. துண்டி கணபதி, 27. துவிமுக கணபதி, 28. மும்முக கணபதி, 29. சிங்க கணபதி, 30. யோக கணபதி, 31. துர்க்கா கணபதி, 32. சங்கடஹர கணபதி.

கோபுர கணபதி: கோயில்களின் கோபுர வாயிலில் கணபதிக்குத் தனிச்சன்னதி அமைக்கப்படும். அவரைக் கோபுரக் கணபதி என்று கூறுவர். அவ்வாறு இல்லாதபோது கோபுர கோஷ்டத்தில் இவரை அமைப்பர். இவரை வணங்கிய பிறகே, பக்தர்கள் ஆலய தரிசனத்தைத் தொடங்குவர். சில ஆலயங்களில் கோபுரக் குடைவரை எனப்படும் கோபுரத்தின் உட்புறம் அமைந்த மேடைகளிலும் விநாயகரைக் காணலாம். இவரைக் குடைவரைப் பிள்ளையார் என்பர். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் கோபுரக் குடைவரையில் கலங்காமல் காத்த விநாயகர் என்ற பெயரில் குடைவரைப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.

எதிர்நோக்கும் கணபதி: சில ஆலயங்களில் இறைவன் கிழக்கு நோக்கியிருக்க ராஜ கோபுரம் அல்லது தலைவாசல் தெற்கு நோக்கி இருக்கும். இத்தகைய கோயில்களில் கோயிலுக்குள் நுழைந்ததும் வழிபடத்தக்க வகையில் உள்மதில் ஓரமாக வாயிலை நோக்கியவாறு ஒரு கணபதியைச் சிறிய சன்னதியில் எழுந்தருள வைத்துள்ளனர். இவரை எதிர்கொள் கணபதி என்பர். மேற்கு நோக்கிய திருமயிலை கபாலீசுவரர் ஆலயத்தில் கிழக்கு வாயிலுக்கு நேராகவுள்ள நர்த்தன கணபதி, திருமழிசை ஒத்தாண்டேசுவரர் ஆலயத்தின் தேவராஜகணபதி, திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் ஆலயத்தின் முல்லைவன கணபதி முதலான கணபதியர் எதிர்கொள் கணபதியராக விளங்குகின்றனர்.

கொடிமர கணபதி : கோயிலில் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கொடிமரத்திற்கு முன்பாகவோ, அவற்றின் பீடத்தின் அடியிலோ சிறிய மாடத்துள் இருப்பவரைக் கொடிமரக் கணபதி என்றும், கம்பத்தடி கணபதி என்றும் கூறுவர். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் கொடிமரக் கணபதியாகப் படித்துறை விநாயகர் அமைந்துள்ளார். இந்த ஆலயம் செப்பு ஓடு வேய்ந்து மூன்று கலசங்களுடன் அழகிய சபையாக உள்ளது. தனிச் சன்னதியாக அமைக்க முடியாதபோது பலிபீடத்தின் கிழக்கு அடிப்பட்டைப் பகுதியில் சிறிய மாடம் அமைத்து அங்கு விநாயகரை அமைப்பர்.

இப்படிச் சிறிய மாடத்துள் இருந்தாலும் பெரும் புகழ் பெற்ற விநாயகரைப் பல இடங்களில் காணலாம். திருவலஞ்சுழியில் மூலஸ்தானத்தில் கடல் நுரையால் ஆன வடிவில் விநாயகர் ஸ்வேத (வெள்ளை) விநாயகர் என்ற பெயரில் விளங்குகிறார். பலிபீடத்தில் அமைக்கப்பட்டுள்ள கணபதிக்குச் சிறப்பளித்து முகமண்டபம், மகாமண்டபம் முதலியவற்றை அமைத்துத் தனி ஆலயமாக ஆக்கியுள்ளனர். இவருக்குக் கொடியேற்றி விழா நடத்துகின்றனர். பலிபீடத்திற்கு முன்பாக அமையும் கணபதிக்குச் சங்கல்ப கணபதி என்று பெயர். முன்னாளில் இவருக்கு முன்பாகச் சங்கல்பம் செய்து கொண்டு, அன்றைய பஞ்சாங்கத்தைப் படித்த பின்னரே ஆலயத்தில் பூசைகளை மேற்கொள்வர்.

கன்னிமூலை கணபதி: பிராகாரங்களில் கன்னிமூலை எனப்படும் தென்மேற்குமுனையில் விநாயகர் சன்னதி அமைப்பது வழக்கம். அனைத்துப் பிரகாரங்களிலும் கன்னிமூலையில் கணபதி ஆலயம் அமைகிறது என்றாலும் முதல் பிரகாரத்தில் அமையும் கன்னிமூலை கணபதியே பிரதான கணபதியாகப் போற்றப்படுகிறார். இவரைத் தல விநாயகர் என்று கொண்டாடுகின்றனர். சபரிமலையில் கன்னிமூலை கணபதி மிகவும் விசேஷமானவர்.

துவார கணபதி: ஆலயத்தின் ஒவ்வொரு வாயிலிலும் வலப்புறம் விநாயகரும் இடப்புறம் முருகனும் அமைக்கப்படுகின்றனர். இவர்களை முறையே துவார கணபதி, துவார சுப்பிரமணியர் என்று அழைப்பர். தத்துவவாதிகள் இவர்களை உலக உற்பத்திக்கு ஆதாரமான பிந்து நாதங்களின் வடிவம் என்கின்றனர். மேலும், விநாயகர் கல்யாண கணபதி, பந்தக்கால் கணபதி, நந்தவனப் பிள்ளையார், வசந்த மண்டப கணபதி, தேரடிமண்டப கணபதி என்று பல்வேறு பெயர்களில் ஆலயத்தில் பல இடங்களில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

விமான கணபதி: ஸ்ரீவிமானத்தில் அமையும் பஞ்ச கோட்டங்களில் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள கோட்டத்தில் நர்த்தன விநாயகரைக் காணலாம். இவர் கோஷ்ட கணபதி. சில விமானங்களில் மேற்பகுதியில் விநாயகரை அமைத்துள்ளனர். மயிலாடுதுறை மயூரநாத சுவாமி ஆலயத்தில் ஸ்ரீவிமானத்தின் அருகில் சிறிய சன்னிதியில் ஸ்ரீவிமான கணபதி எழுந்தருளியுள்ளார். அகத்தியர் மணலைத் திரட்டி இவரது திருமேனியை அமைத்து வழிபட்டார் என்று தலபுராணம் கூறுகிறது.

Advertisement
 
Advertisement