Load Image
Advertisement

அகிலத்திரட்டு அம்மானை பகுதி-10

தருமமதாய்த் தாரணியில் தன்னந்தன் னால்வாழ்ந்து
பொறுமைப் பெரியோராய்ப் பூதலமெல் லாம்வாழ்வார்
அப்போது நீயரசு ஆளுவாய் யென்மகனே
வாரிமூன்று கோதி வளைந்திருக்கு மோர்தீவை
சாதியொரு நிரப்பாய்த் தானாள்வா யென்மகனே
கோடுபல வாதும் கோள்நீசப் பாவிகளும்
கேடு வருங்காலம் கிருஷ்ணா வுன்நற்காலம்
வானமது வெள்ளி மாறிவெறும் வானமதாய்
மேன் முகிலற்று வெறுவான மாய்த்தோன்றும்
நல்ல மகனே உனக்குவரும் நற்காலம்
சொல்லத் தொலையாது சூல்மகனே என்கணக்கு
ஒக்க அடக்கி உரைத்திருக்கு வுன்னிடத்தில்
நிற்க நிலைக்க நினைத்ததெல்லா மங்காகும்
பொறுமை பெரிது பெரிய திருமகனே
தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே
எல்லா முனது இச்சையது போல்நடக்கும்
நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி
எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே
பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே
தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே20 வந்தா ரறிவார் வராதார் நீறாவார்
இன்ன முன்காலம் இயம்புவேன் கேள்மகனே
தன்னந் தன்னாலே சாதிக்குச் சாதிமாளும்
நல்ல நினைவோர்க்கு நாளெத்தனை யானாலும்
பொல்லாது வாராமல் புவிமீதில் வாழ்ந்திருப்பார்
நாட்டி லொருஅனுமன் நல்லவனை நானயச்சு
கோட்டிசெய் யென்றுரைப்பேன் கோமகனே வுன்காலம்
முறைதப்பி யாண்ட முகடன் வெறும்நீசன்
குறைநோவு கொண்டு கூடிழப்பா னுன்காலம்
அதிலே சிலபேர் அரசுனக் கெனக்கெனவே
விதியை யறியாமல் வெட்டிக்கொண் டேமாள்வார்
அத்தருண முன்காலம் அதிகமக னேகேளு
இத்தருண மல்லால் இன்ன மெடுத்துரைப்பேன்
எல்லோருங் கைவிட்டு இருப்பாருனைத் தேடாமல்
நல்லோர் மனதில் நாரணா என்றுரைப்பார்
கோல விளையாட்டுக் கொஞ்ச மெடுப்பேனான்
தூல மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும்
அன்போர்க ளெல்லாம் ஆவியே தான்மறுகி
இன்ப முடனே ஏங்கியேங்கி யழுவார்
இத்தனை நாளும் இவரைநம்பி நாமிருந்து40 புத்தியது கெட்டோம் என்றுமிகப் பேதலிப்பார்
அப்போது ஆகா அன்னீத மாபாவி
இப்போது கண்டுதென்பார் ஏலமே சொன்னதெல்லாம்
எய்த்தானென்பா னன்போரை இடுக்கஞ்செய் தேயடிப்பான்
சூட்ச முடனே சொரூபமொன்று நானெடுப்பேன்
அதுதா னொருகாலம் அதிகமக னேகேளு
இதுபெரிய சூட்சம் என்மகனே கேட்டிடுநீ
அதின்மேலே அன்போர் அதிகப் பெரியோராய்
இதின்மேலே தாண்டும் எல்லோரும் வல்லோரே
பின்னுமொரு சூட்சம் பிரமாண மாயெடுப்பேன்
பன்னு மணியே பராபரமே கேட்டிடுநீ
குளத்தைத் தடதடெனக் கொந்துகொந் தாயுடைத்து
சுழற்றக்கன லக்கினியும் துர்க்கைமா துர்க்கையையும்
விட்டயச்சு மாநிலத்தில் விளையாடி யேதிரியும்
கட்டணங்க ளாக கனமாய்க் குழுகுழென
ஓடுவார் பதறி விழுவா ரறமெலிந்து
நாடும் பெரியோர் நலமாக வாழ்ந்திருப்பார்
என்மகனே வுன்காலம் இன்னும் வகுப்பேன்கேள்
பொன்மகனே பூமியிலே பின்னுமொரு காரணங்கேள்
கெட்ட நசுறாணி கெம்பிக் கடைக்காலம்60 மொட்டைத்தலை யன்வருவான் முளையனவ னோடிடுவான்
ஆடிக் கொண்டாடி அங்குமிங்குந் தானலைந்து
ஓடிக் கொண்டோடி ஒன்றுபோ லேமாள்வான்
மகனே யுன்காலம் மகிழ்ந்திரு என்மகனே
உவமையொன்று சொல்லுகிறேன் உற்பனமாய்க் கேள்மகனே
புத்திரனுக் கேகுருவும் புகன்றதெல்லாம் புகன்றாலும்
சுற்றுமொரு சூட்சத் தொழிலுண்டு மாயானுள்
அத்தனையு மென்னுள் அடக்கமில்லை யென்மகனே
முத்தியெனை யீன்றோர் முதனாளோர் விஞ்சைவைத்தார்
அவ்விஞ்சை மாத்திரமே யானுனக் கீயவில்லை
இவ்விஞ்சை யீவதுதான் எப்போதெனக் கேளு
சீமை யரசு செலுத்தவரும் நாளையிலே
மேன்மை முடிதரிக்கும் வேளையி லென்மகனே
சொல்லுகிற விஞ்சை சுத்தமனே கேட்டிடுநீ
பல்லுயிர் களுக்கும் படியளக்கும் விஞ்சையது
எல்லா முனக்களித்தேன் என்னுடைய நாரணனே
அல்லாமல் நானுனக்கு அருளுகிற விஞ்சையைக்கேள்
பெரியோர்க்கு வாழ்வு பெருகிச் சிறந்தாலும்
மரியாதை யேயிருக்கும் மகனேநீ கேட்டிடுநீ
சற்றோலே வாழ்வு சகடருக் கேவருகில்80 கற்றோரே யாகிடினும் கண்டறிவேன் போநீயென்பான்
முள்முருக்கம் பூவு மினுக்குமூன் றுநாளை
கள்ளருக்கு வாழ்வு காணுமது போல்மினுக்கு
நல்லோர்க்கு வாழ்வு நாளுங் குறையாமல்
வல்லோர்க்கும் நல்லோராய் வாழ்ந்திருப்பார் கண்டிருப்பாய்
விள்ளாத ஞாயம் மேல்ஞாய மென்மகனே
துள்ளாத யானை துடியானை யென்மகனே
அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே
கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே
நன்றி மறவாதே நான்பெரிதென் றெண்ணாதே
அண்டின பேரை அகற்ற நினையாதே
ஆபத்தைக் காத்து அகலநீ தள்ளாதே
சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும்
கோபத்தைக் காட்டாதே கோளோ டிணங்காதே
பாவத்தைக் காணாதே பகட்டுமொழி பேசாதே
பசுவை யடைத்துப் பட்டினிகள் போடாதே
விசுவா சமதிலே விரோதம் நினையாதே
எளியோரைக் கண்டு ஈந்து இரங்கிடுநீ
அழிவென்ற பேச்சு அனுப்போல் நினையாதே
தொட்டுப் பிடியாதே தோர்வைவைத்துக் காணாதே100 விட்டுப் பிடியாதே வெட்கமதைக் காணாதே
வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே
பரம்பூமி கண்டு பாவித் திருமகனே
இத்தனை புத்தி எடுத்துரைத்தே னென்மகனே
புத்தி விபரீதமாய்ப் பின்னுமா ராயாதே
சட்ட மறவாதே தன்னளவு வந்தாலும்
நட்டங் காணாதே நாடாள்வா யென்மகனே
என்மகனே நானுனக்கு இன்னமொரு விஞ்சைசொல்வேன்
பொன்மகனே யுன்னுடைய புத்தியிலே வைத்திருநீ
இச்சட்டந் தன்னில் எள்ளளவு தப்பினதால்
தீச்சட்டம் காய்க்கத் தேதிவரு மென்மகனே
அனுப்போல் மறவாதே யான்வைத்த சட்டமதில்
மனுப்போ லென்றிராதே மனதெண்ண மாயிருநீ
பஞ்சமிர்தே யென்னுடைய பாதைதப்பி நீநடந்தால்
கொஞ்சுங் கிளியே கொன்னெழுப்பு வேனுனையும்
பதறியிரு என்மகனே பம்மியிரு கண்மணியே
பொறுதி மகனே பெரியோரா யாகுவது
உறுதி மகனே உலகமதை யாளுவது
மகனேநா னெத்தனையோ மகாபெலங்கள் கற்றவன்காண்
உகமீதே சொல்லித் தொலையுமோ வுத்தமனே120 எவ்வுகங் களுக்கும் இப்படியே தர்மமில்லை
செவ்வுமகா விஷ்ணுதான் என்றுசொல்லார் தேசமதில்
இப்போது என்மகனே இக்கலியன் மாய்மாலம்
செப்ப எளிதல்லவே செயிக்க ஏலாதாராலும்
இப்போதுன்னோ டுரைத்த இயல்விஞ்சைக் ககப்படுங்காண்
அப்பனே பம்மலிலே அகப்படுங்கா ணிக்கலியும்
கலியென்றால் எலியல்லவே கணையாளி வேண்டாமே
வலிமாய நினைவு மாய்மால மென்மகனே
ஆனதா லாயுதங்கள் அம்புதடி வேண்டாமே
மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே
இன்னமொரு விஞ்சை இயம்புவேன் கேள்மகனே
முன்னம்வகைக் காரனொடு மோதிப் பகையாதே
பகைத்தா லிருக்க வொட்டான்கா ணவ்விடத்தில்
உகத்தடக்கு முன்னே ஒருவரையுஞ் சீறரிது
தாழ்ந்திருக்க வென்றால் சர்வதுக்குந் தாழணுமே
ஓர்ந்திருக்க வென்றால் ஒருவர்பகை யாகாதே
ஆனதால் நீயும் அவனைப் பகையாதே
நானவனைக் கேட்பேன் ஞாயக்கே டாகிடினும்
வலியோர்க் கொருவழக்கு வைத்துநீ பேசாதே
மெலியோர்க் கொருவழக்கு வீணாய்ப் பறையாதே140 சொத்தாஸ்தி வஸ்து சுகமென்று எண்ணாதே
வத்தாஸ்தி பெண்ணு வகையென்று எண்ணாதே
நீயெண்ணா தேயிருந்தால் நீணிலங்க ளுமயங்கும்
தானிதின்மே லெண்ணம் தங்குதங் காதேயிரு
சத்துரு வோடும் சாந்தமுட னேயிருநீ
புத்திர ரோடும் பேசியிரு என்மகனே
அன்போர்க்கு மீந்திருநீ ஆகாப்பேர்க்கு மீந்திருநீ
வன்போர்க்கு மீந்திருநீ வழிபோவார்க்கு மீந்திருநீ
சகலோர்க்கு மீந்து தானிருநீ யென்மகனே
வலியோர்க்கு மீயு வழிபோவார்க்கு மீயு
மெலியோர்க்கு மீயு மேன்மையா யென்மகனே
ஆர்க்கு மிகவீந்தால் அந்தத்தர்ம மேகொதிக்கும்
போர்க்கு நினைத்தாரைப் பெலிகொடுக்குந் தர்மமது
தன்மந்தான் வாளு சக்கரங்க ளல்லாது
தின்மையது கேடு செப்பக்கே ளென்மகனே
சாதி பதினெட்டும் தன்னாற்கே டாகுமட்டும்
நீதி யழியாதே நீசாபங் கூறாதே மகனே வுனக்கு வைத்தவிஞ்சை மனதி லறிந்து கொண்டாயோ
அகமே வைத்த சட்டமெல்லாம் அதுபோல் நடந்து அல்லாமல்
உகமே யழியு முன்னாக ஒருசொல் லிதிலே குறைவானால்160
சகமோ ரறியத் தீமூழ்கிச் சதியாய் மறுத்து முழிப்பாயே நல்லோர் மகனே சொல்வதுகேள் நானோ வுரைத்த விஞ்சையெல்லாம்
வல்லோ னான திருமகனே மனதி லறிந்து அறிந்துநட
எல்லாம் நமதுள் ளாச்சுதென்று எண்ணி நடப்பொன் றுன்னாலே
சொல்லால் தாண்டி நடப்பீரால் தீயே குளித்து வருவாயே கொடுக்கும் வரங்களு னக்கீந்தேன் கொடுத்த வரத்தை பறிப்பதற்கு
உடக்கு வரமுந் தந்தேனான் உன்ற னாணைத் திருவாணை
அடக்கு முடக்குந் தந்தேனான் ஆதி சிவனா ரவராணை
நடக்கும் படியே சட்டமெல்லாம் நாரா யணனே தந்தேனே தந்த வரங்கள் தவறாது தருணஞ் சடையுந் தரைமீது
எந்தன் மீது மறவாதே என்னாண் டருளு மிறையோனே
அந்தன் மீது மறவாதே ஆயா னெனவே அறிவில்வைத்துச்
சிந்தை மகிழ்ந்து முறைநடந்தால் சிவனு முனக்குள் வசமாமே தாயா ரோடு சிவமாது சரசு பதியே பொன்மாது
நேயா மாதர் மடமாது நீணில மறிய வந்துனது
பூசா பலன்கள் சொல்லிமிகப் புலம்பித் திரிவார் துயர்தீர
மாயா திருக்கு மகனேவுன் மனமே மகிழ்ந்து மகிழ்ந்திருவே சொல்ல எளிதோ என்மகனே சொல்லா தனேகம் தோன்றுமினி
வெல்ல எளிதோ என்மகனே மேலோரா ராரா லும்
கொல்ல எளிதோ வுனைமகனே கோவேங் கிரியின் கோனாலும்180
வெல்ல எளிதோ வுனைமகனே மேலாங் கண்ணே மிகவளராய் இந்தப் படியே நாரணரும் இயம்ப மகவு ஏதுரைக்கும்
கந்த னுறுவே லென்றகப்பா கடியா வுனது படிநடக்க
எந்தப் படியோ நான்றமியேன் ஏதோ அறியப் போறேனெனச்
சிந்தை மகிழ்ந்துத் தகப்பனுட திருத்தாள் பிடித்துச் செப்பலுற்றார் தன்னம் பெரிய தாட்டீக வைகுண்டரும்
என்னசொல்வீ ரென்றனக்கு என்றகப்பா நீரெனவே
வணங்கிப் பதம்பூண்டு மாதாவை யுந்தொழுது
இணங்கி யிவர்கேட்க ஏதுசொல்வார் நாரணரும்
நாராணா வைகுண்டா நன்மகனே என்னையினி
வாரணமே நீவணங்கி மகனே கைசேராதே
நீகை குவித்தால் எனக்குமிகத் தாங்கரிது
தானீத னான சர்வபரா என்மகனே
ஒருவருந் தாங்கரிது உன்கை குவித்தாக்கால்
குருதெய்வம் நீயே கோவே குலக்கொழுந்தே
இன்ன முனக்கு இயம்புகிற விஞ்சையதும்
பொன்னம் மகனே பூராய மாய்க்கேளு
சாதி பதினெட்டும் தலையாட்டிப் பேய்களையும்
வாரி மலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு
வரத்தை மிகவேண்டி வைத்துக்கொள் ளென்மகனே200 சரத்தை மிகவாங்கித் தானனுப்புப் பேய்களையும்
உட்கோள் கிரகம் உறவுகெட்ட பேர்முதலாய்க்
கட்கோள் கருவைக் காணாதே சாபமிடு
செல்வம் பொருந்திச் சிறந்திரு என்மகனே
கொல்லென்ற பேச்சுக் கூறாதே என்மகனே
ஒவ்வொன்றைப் பார்த்து ஊனு ஒருசாபம்
செவ்வென்ற பேச்சுச் செப்பியிரு என்மகனே
உரைத்த விஞ்சையெல்லாம் உனக்குப்போது மோமகனே
விரைத்தமுள்ள வைகுண்டா விற்பனவா நீகேளு
நீபோ யிருக்கும் இடங்களில் என்மகனே
அன்பான பஞ்சவர்கள் அங்கேவுண் டென்மகனே
முன்னே பிறந்த உகத்துக் குகங்களெல்லாம்
என்னைவிட் டகலாது இருந்தார்கள் பஞ்சவர்கள்
ஆனதா லிப்போது யானும்நீ யானதினால்
மானமுள்ள பஞ்சவரை மகனேமுன் விட்டுக்கொள்ளு
அல்லாமற் கேளு அரிநாரணா என்மகனே
நல்லோராய்ப் பெண்கள் நாடியெண்ணக் கூடாது
வல்லோராய் நந்தன் வம்மிசத்தில் வந்திருந்தார்
அப்பெண்ணார்க் கெல்லாம் அதிகப்பலன் தாறோமென்றேன்
இப்பெண்ணார் சிலர்கள் இன்னமங்கே தோன்றிவந்தால்220 ஆனதால் பெண்ணார்க்கு அழகுகொடு என்மகனே
நின்ற தவசு நிறைவேறி னால்மகனே
ஒண்டொடியார் சிலரை உன்பாரி தானாக்கி
நன்மைகொடு என்மகனே நாரணா நாடாள்வாய்
உன்னை நினைத்தோர்க்கு உதவிகொடு என்மகனே
கட்டை விடாதே கருத்துள்ள என்மகனே
சட்ட மறவாதே சாஸ்திரத்துக் குற்றவனே
பெண்பாவம் பாராதே பேணியிரு என்மகனே
கண்பாரு கண்மணியே கன்னி கணவருக்கு
இன்னமொரு சூத்திரம் இயம்புகிறே னென்மகனே
துன்ன மறியத் தோற்றுவிப்பேன் சாதிதோறும்
அன்புவன்பு பார்க்க ஆரா ரிடத்திலும்போய்
உன்புதுமை சொல்லி உடலை மிகஆட்டி
சாதிசா திதோறும் சக்கிலி புலச்சிவரை
ஆதிச்சா திமுதலாய் ஆராதனை காட்டுவிப்பேன்
காட்டுவிக்குஞ் சொரூபம் கண்டிரு என்மகனே
ஆட்டுவிப்பேன் நால்வேதம் அதிலும்நான் மாயமிட்டு
துலுக்கன்வீ டானதிலும் சூதாட்டுப் பார்த்திடுவேன்
கிலுக்கமொன்று செய்வேன் கீழுமேலும் நடுவும்
பதறித் தெளியும் பார்த்திரு என்மகனே240 நீபெரிது நான்பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று
வான்பெரி தறியாமல் மாள்வார்வீண் வேதமுள்ளோர்
ஒருவேதந் தொப்பி உலகமெல்லாம் போடுஎன்பான்
மறுத்தொருவே தஞ்சிலுவை வையமெல்லாம் போடுஎன்பான்
அத்தறுதி வேதம் அவன்சவுக்கம் போடுஎன்பான்
குற்ற முரைப்பான் கொடுவேதக் காரனவன்
ஒருவர்க் கொருவர் உனக்கெனக் கென்றேதான்
உறுதி யழிந்து ஒன்றிலுங்கை காணாமல்
குறுகி வழிமுட்டி குறைநோவு கொண்டுடைந்து
மறுகித் தவித்து மாள்வார் சிலபேர்கள்
ஓடுவார் சிபேர் ஒழிவார் சிலபேர்கள்
கேடு வருமே கேள்விகேளாப் பேருக்கெல்லாம்
அதன்மேல் மகனே யானுனக்குச் சொல்வதுகேள்
இதின்மே லுனக்கு ஏகவியா ழம்வரும்
சந்தோச மாகுதுகாண் உனைச்சார்ந்த அன்போர்க்கு
எந்துயர மெல்லாம் ஏகுதுகா ணென்மகனே
அதுவரையும் நீதான் அன்பா யிருமகனே
எதுவந் தாகிடினும் எண்ணம்வையா தேமகனே
சுறுக்கிட்டு யானும் ஒவ்வொன்றாய்த் தோன்றவைப்பேன்
இறுக்கும் இறைகளெல்லாம் இல்லையென்று சொல்லிடுநீ260 வேண்டா மிறைகள் வேண்டாமென்று சொல்லிடுநீ
ஆண்டார் மகனே அதிகத் திருமகனே
நல்ல மகனே நான்வைத்த விஞ்சையெல்லாம்
செல்ல மகனேவுன் சிந்தையிலே பற்றினதோ
போதுமோ விஞ்சை புகலணுமோ என்மகனே
சாருமொரு விஞ்சை தான்சொல்வேன் கேள்மகனே
முவ்விஞ்சை வைத்தேன் உலகமறி யாதவிஞ்சை
இவ்விஞ்சை மாத்திரமே இனம்பிரித்துச் சொல்லாதே
பெற்றோர்கள் கண்டுகொள்வார் பேசரிய என்மகனே
கற்றோர்கள் கண்டுகொள்வார் கண்ணே திருமகனே கண்ணே மகனே திருமகனே கமலப் பூமா கரிமகனே
எண்ணே யெழுத்தே என்மகனே இறையோர் தொழவே வருமகனே
ஒண்ணே மகனே உயர்மகனே உடைய மகனே கண்மணியே
தண்ணே மகனே தவமகனே சாகா திருக்குஞ் சலமகனே மகனே தவமே மரகதமே மாதவம் பெரிய மலரோனே
தவமே யுனதுள் வைத்தவிஞ்சை தானே போது மோமகனே
எகமேழ் மகிழ வந்தவனே என்றன் மகனே வளர்வையென
உகமே ழளந்தோ ருரைத்திடவே உயர்ந்த மறையோர் வாழ்த்தினரே அய்யாநா ராயணரும் ஆதிவை குண்டமென
மெய்யா யுரைத்து விளங்கவே வாழ்த்தலுற்றார்280 மகனே வுன்தேகமதில் வைத்த நிறங்களெல்லாம்
உகமழியு முன்னே ஒருவர்கண் காணாதென
அகமே வைத்து அகமகிழு என்மகனே
வைகுண்ட மென்றுமிக வாழ்த்தக் குருநாதன்
மெய்குண்டத் தோர்கள் மேலோர்கள் வாழ்த்தலுற்றார்
மகரவுந்தி விட்டு வைகுண்டந் தான்பிறந்து
சிகரமுனி தேவருட சிறப்பதிலே வந்தவுடன் தேவர் திருவானோர் சென்றெடுத்து வைகுண்டரை
மூவர்தே வர்மகிழ்ந்து முதலோனைக் கைகுவித்து
ஏந்தி யெடுத்து இளந்தொட்டில் மீதில்வைத்துச்
சாந்தி கழித்துத் தவலோகச் சட்டையிட்டுச்
சீதை மயக்கமெல்லாம் தீர்ந்திடவே சாபமிட்டு
வீரரையும் வந்து வீரலட்சு மியெடுத்து
மடிமீதில் வைத்து மாதுசர சோதியுடன்
குடியான பேரும் கொண்டங் ககமகிழ்ந்து
பொன்தொட்டி லிட்டுப் பொற்சீதை தாலாட்ட
பைங்கொடி யாள்சரசு பதிமாது தாலாட்டத்
தேவரிஷி வானோர் தேவரம்பை மாதரெல்லாம்
சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுப் பின்பாட
ஈசர்முதல் சங்கம் எண்ணி மனமகிழச்300
சார்சர சுபதியாள் தாலாட்ட வேதுணிந்தாள் பொன்மணிப் பதியி னுள்ளே புனலரி கிருஷ்ணர் பெற்ற
தண்மணிப் பாலன் தன்னைத் தங்கமாந் தொட்டி லிட்டு
மின்மணி கொடிசேர் கன்னி விளங்கிய சோதி மாது
கண்மணி வைந்த ராசர் காணத்தா லாட்டி னாளே தாலாட்டு தார தரதர தாராரோ தார தரதர தாராரோ நாராயணர் தானோ தாராரோ நல்ல நாராயண வைகுண்டமோ
காரணர் தானோ வைகுண்டமோ கயிலாச நாதக் கண்மணியோ செல்வ முதலான சீமானோ சிவசிவ சிவ சிவமுதலோ
அல்ல லகற்றியே அரசாளும் அரியோன் மிகப்பெற்ற அரிதானோ தெய்வப் பெருமாள்தான் பெற்றகன்றோ சீதை மாதுதான் பெற்றகன்றோ
மெய்ய னரிநாதன் பெற்றகன்றோ விஷ்ணு மகாபரன் பெற்றகன்றோ ஈசர் மைத்துனர் பெற்றகன்றோ இறவா திருமாது பெற்றகன்றோ
மாயத் திருவுளம் பெற்றகன்றோ மான வைகுண்ட ராசக்கன்றோ வேதக் குருநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ
சீதக் குருதாயா ரீன்றகன்றோ தெய்வ வைகுண்ட ராசக்கன்றோ கிருஷ்ண மகாநாதன் பெற்றகன்றோ கிருபைக் குருநாதக் கண்மணியோ
விஷ்ணு மகாநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ நாட்டுக் குடையதோர் நாரணரின் நல்ல பாலனோ வைகுண்டனோ
ஏட்டு முதலானோ தாராரோ ராச வைகுண்ட ராசர்தானோ320 மூலச் சிவநாதன் பெற்றகன்றோ உலகை யொருகுடைக் காள்வானோ
நாலு வேதமும் தாண்டிமுறை நடத்தி யொருகுடைக் காள்வானோ ஒருமை மனத்துடை யுத்தமர்க்கு உற்ற பதவிகள் கொடுப்பவனோ
தருமத் திறவானோ தாராரோ தங்க வைகுண்டத் தாட்டீகனோ மகரச் சீதையாள் வயிற்றுலுற்ற வளர்ந்த வைகுண்ட மாமணியோ
அகரச் சிவகோபுர மழகுபதி அதிகப் பதிகெண்டு வந்தவரோ தங்கக் கோபுரம் தளிர்மரமும் சதுர மேடைகள் கண்டவரோ
சங்க மகிழவே வந்தவரோ சகல கலைதமி ழாய்ந்தவரோ உலகம் பதினாலு மொருகுடைக்குள் ஒருசொல் மொழிக்காள வந்தவரோ
இலகு பிரகாச சுவடுகொண்டு இலங்கும் பதியாளப் பிறந்தவரோ வம்புக் கலியுகக் குலமறுத்து வைந்தப் பதியாள வந்தவரோ
அம்புக் கணையொன்று மில்லாமலே அறுக்க வந்தாரோ கலிதனையும் கூடப் படைகள்துணை யில்லாமல் குறும்பை யடக்கவே வந்தவரோ
சாடத் தலையாரி யொன்றில்லாமல் சதைக்க வந்தாரோ கலியுகத்தை
வாளு மாயுத மெடுக்காமலே வதைக்க வந்தாரோ கலியுகத்தைக்
கோளு பேய்களைக் கிரகங்களைக் கொல்ல வரம்பெற்ற வைகுண்டரோ சாணாக் குருநாத வைகுண்டரோ சாதி தற்காக்குந் தலையாரியோ
காணாக் கருவான கருமூலமோ கர்த்தன் கர்த்தாதிக் கடவுள்தானோ நீசக் குலங்களைக் கருவறுக்க நெடிய நாரணர் பெற்றகன்றோ
தோசப் புழுச்சாதி குலமறுக்கத் திருமால் நாரணர் பெற்றகன்றோ340 சீமை மைம்பத்தாறு தேசமெல்லாம் சொல்லொன் றுள்ளாள வந்தவரோ
நாமம் பெரியதோர் வைகுண்டரின் நாமம் பெறவோங்க வந்தவரோ தெய்வப் பாலர்கள் சிறந்துபோற்றச் சீமை யரசாள வந்தவரோ
மெய்வ ரம்பதின் முறைநடத்தி மேன்மைச் செங்கோல் முடிதரித்து பொறுமைப் பெரியோனோ வைகுண்டனோ பெரிய பூமேடைக் கொலுவீரனோ
தரும வரம்புகள் தவறாமலே தரணி யரசாளும் வைகுண்டரோ திராசு நிறையிலுந் துல்லியமாய்ச் செங்கோல் செலுத்தவே வந்தவரோ
மிராசு மூவர்க்கு முதன்மைதானோ மூலச் சிவமணி குருநாதனோ சான்றோர் கைகட்டிச் சரணங்கூறத் தரணி யொருகுடைக் காள்வானோ
ஆண்ட மணிநாதன் நாரணர்க்கு ஆன மதலையாய் வந்தவரோ வைய மளந்ததோர் நாரணர்க்கு மதலை யெனவந்த வைகுண்டரோ
தர்மப் பதியாளும் வைகுண்டரோ சாணர்க் கனுகூல மானவரோ அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு அதிக விதிகொண்டுப் பிறந்தவரோ
சாணாக் குடிகுல நாயகமோ தர்மந் தழைக்கவே பிறந்தவரோ தோணாத் துறைகொண்டு வந்தவரோ துவரா பதியாளப் பிறந்தவரோ
ஏழு யுகபரக் கணக்கையெல்லாம் எடுத்து நடுத்தீர்க்கப் பிறந்தவரோ ஆளும் வைகுண்டப் பதியாளவே அரிய வைகுண்டம் பிறந்தவரோ
வீர வீராதி வீரன்தானோ வீர சூரனா ரீன்றகண்ணோ சூர சூராதி சூரன்தானோ சூர சூரனார் பெற்றகண்ணோ
நாத நாரணர் பெற்றகண்ணோ நாக மணிநாதன் பெற்றகண்ணோ360 சீதக் குணநாதன் பெற்றகண்ணோ சீதை மணவாளன் பெற்றகண்ணோ
மேக நிறத்தண்ண லீன்றகண்ணோ மேலோர் போற்றும்வை குண்டக்கண்ணோ ஏகச் சிவநாதன் பெற்றகண்ணோ இறவா திருமூர்த்தி பெற்றகண்ணோ வேறு சந்திர சுந்தர தந்திர மந்திர சாமிசீர் பாலகனோ
தாயக மாயக நாயக மாகிய தாண்டவ சங்கரனோ
சுந்தர சந்திர யந்திர குஞ்சித சூரியப்பிர பாலகனோ
சூரனோ வீரனோ மாதனோ நீதனின் சூலகலா திபனோ தந்திர மந்திர இந்திர சுந்தரின் சந்ததி சந்ததியோ
சகடவெலி சண்டரை அகடவெலி செய்திடும் சுக்கிர விக்கிரனோ
கொந்தரி சந்ததின் தந்திர சுந்தர கோசல நாயகனோ
கொடுகலி யறவொரு கடுமுனை கொண்டருள் குலவெங்கிட குண்டமோ சுத்தனோ கர்த்தனோ நித்தனோ அத்தனோ துலங்கும் தங்கரனோ
சூரனோ வீரனோ தீரனோ நாதனோ சூரியப்பிரகாச வீதனோ
விரனோ காரனோ தாரனோ சாரனோ வெங்கிட ரங்கிடனோ
விகடக டகடக டகுட டடமருள் வேதவிக்கிர சுக்கிரனோ தீரனோ காரனோ சீரனோ வீரனோ செந்திலம்பதிவளர் சந்திரனோ
திகதிக தரிகிட செகமுக மருள்புரித் திக்கிர விக்கிரனோ
நீதனோ கீதனோ வீதனோ மாதனோ நீதவெங் கோகுலனோ
நெகிடுகலி யகடற விகடுகுடல் கருவற நெக்கிர விக்கிரனோ இப்படி ஒளவை மாது இயல்புதா லாட்டக் கண்டு380
செப்படி முனிமா ரெல்லாம் சிவவைந்தர் பதத்திற சென்று
முப்படி முறைபோல் தேவர் முக்கந்தன் பள்ளி கொள்ள
அப்படித் தேவ ரெல்லாம் அவரிசை கூற லுற்றார் பள்ளி உணர்த்தல் பல்லவி பள்ளியுணராய்-சிவமருகா நீ
பள்ளியுணராய் சரணம் பள்ளியு ணராய்நீ தெள்ளிமை யாகவே
பாற்கடல் மீதினில் தாக்குட னுதித்தவா
வெள்ளி யுதித்திடப் பள்ளி யுணர்த்தவும்
வேதநா ராயணர் சீதகோ பாலர்க்குக்
கொள்ளி யெனவந்த வைகுண்டக் கோவனே
கோவேங் கிரிவள ரீசர் மருகோனே
வள்ளி மணவாளர் வளர்செந்தூர் வாரியில்
வந்து பிறந்துநல் தெச்சணம் புகுந்தவா (பள்ளி) வேக முடனொரு சந்தத்து ளாடியே
மேதினி யோர்க்குப காரங்கள் செய்யவே
ஆகாத்த பேர்களை அக்கினியில் தள்ளவும்
ஆகின்ற பேர்க்குப காரங்கள் செய்யவும்
தாகத்துக் கானதோர் தண்ணீர் கொடுத்துநீர்
சஞ்சல நோய்பிணி யஞ்சற்குத் தீர்க்கவும்
ஏகத்துட னாளும் நாரண வேந்தர்க்கு
எம்பி யெனவரும் தம்பிரா னானவா (பள்ளி) மூர்க்கன் கலியுக ராசனைத் தட்டியே
முடுமுடுக்கஞ் செய்த மூர்க்கரை வெட்டியே
ஆர்க்கமு டன்புவி யைம்பத்தாறு சீமையும்
அடக்கியொரு சொல்லுக் குடைக்குள்ளே யாளவும்
காக்காமகா தர்ம கற்பையுங் காக்கவே
கர்த்தனரி கிருஷ்ணர் புத்திர ராய்வரும்
தாக்கத் திறம்வளர் வைகுண்ட ராசரே
தர்மமதி லுறையும் பொறுமைக் குலதீரா (பள்ளி) தம்பில மானகு றோணிகுண் டோமனைத்
தத்தியாத் தில்லைமல் லாலனைச் சூரனை
வம்பு இரணிய ராவண சூரனை
மகோதர னானது ரியோதனப் பாவியைக்
கொம்பிலுங் கெம்பிலும் அம்பினாற் கொன்றதோர்
கோபால கிருஷ்ண குழந்தைவை குண்டரே
நம்பின அன்பருக் குபகார சாலியே
நாரணா சீமைக் கரிவரி யானவா (பள்ளி)400 பள்ளிதா னுணர்த்தத் தேவர் பரிவுடன் கேட்டு வைந்தர்
தெள்ளிவை குண்ட ராசர் சிந்தையி லன்பு கூர்ந்து
நள்ளிய தேவ ரார்க்கும் நயமுடன் தயவ மீந்து
துள்ளியே தகப்பன் பாதம் தொழுதவர் வணங்கிச் சொல்வார் தேவர் துயரமெல்லாம் தீர்ப்போங்கா ணென்றுசொல்லி
மேவலர்கள் போற்றும் விசயவை குண்டராசர்
தகப்ப னுடபதத்தில் சரண மிகப்பணிந்து
உகப்பரனார் நோக்கி உரைக்கிறா ரன்போரே
என்னை பிதாவே மாதாவே யென்தாயே
எல்லா விவரமதும் எடுத்துரைத்தீ ரென்றனக்கு
நல்லோரே நானினித்தான் நடக்க விடைதாரும்
பண்டுள்ள ஆகமம்போல் பால்வண்ணர் பெற்றிடும்வை
குண்டர் தெச்சணமே கொள்வார்தான் பள்ளியென
ஆதியா கமப்படியே அனுப்பிவையு மம்புவியில்
சோதிமணியே சுவாமி யெனத்தொழுதார்
உடனே மகனை உவந்துமுகத் தோடணைத்துக்
கடலின் சிறப்பைக் கண்டாயோ என்னுசொல்லி
மகனே வுனைவிட்டு மறுவூரு வாழ்வேனோ
நகமுஞ் சதையும்போல் நான்வருவே னுன்கூட420 எத்தனை கோடி இயல்தர்மஞ் செய்துவுன்னைப்
பெற்றெடுத்தே னுன்கூட பிறகே வருவேனப்பா
நீயொருவ னெனக்கு நிலையென்று காணுமுன்னே
தாயில்லாப் பிள்ளையைப்போல் தட்டழிந்தே னென்மகனே
மகனே வுனைக்கண்டு மனச்சடவெல் லாந்தீர்ந்தேன்
சுகமேபோய் வாவெனவே சொல்லி யனுப்புவேனோ
உன்கூட நானும் ஓடி வருவேனப்பா
என்கூட வுன்தாயும் ஏகி வருவாள்காண்
என்று தாய்தகப்பன் இவர்கள் வழிகொள்ளவே
கண்டு வைகுண்டர் கனமாய் மனமகிழ்ந்து
நீங்கள் வருவதுதான் எனக்குவெகு சந்தோசம்
தாங்கி வருவேன் தமியேனுங்கள் பாதமதை
அப்போது நாரா யணர்மகனே யாவிமிக
இப்போ தென்பாலகனே இயம்புகிற புத்தியைக்கேள்
சீமை யதுகாணச் செல்லோங்கா ணுன்கூட
வாமை மகனே வருவோமுன் கண்காண
மகனே நீநடக்க வைகுண்டம்வை குண்டமென
உகமீ ரேழுங்காண உரைத்துவிடு யாமமது
முன்னடந்து யாமம் மொழிந்துநட என்மகனே
பின்னடந்து நானும் யாமம் பிசகாமல்440 நடத்திவைப் பேன்மகனே நல்லமணி மரகதமே
அடத்திவிட்ட யாமமது அனுப்போல் பிசகாமல்
காட்டுவிப்பேன் மகனே கண்ணேநீ முன்னடநீ
தாட்டிமையா யுன்வாக்கால் தானுரைத்த யாமமெல்லாம்
நடத்திவைக்க வாறேன் நன்மகனே வுன்பிறகே
கடல்திரைவாய்ப் பதிகள் கண்டுசென்று தானிருநீ
தண்ணீர் மண்ணீந்து தானிருபோ என்மகனே
கண்ணி லுருக்காணும் கைக்குளொரு கிள்ளைவரும்
பகைவன் மடிவன் பைங்கிள்ளை யங்காகும்
உகவன் வருவன் ஒருவ னறிவான்காண்
பகவான் சுழற்றும் பாருலக மும்பழுக்கும்
அகங்காணும் பாந்தள் அஞ்சாட்சரங் காணும்
மூசிர சீர்சிரசு முகாசிரசு முன்காணும்
பார்சிரசு கண்டு வாறேனென் பாலகனே
திகையாதே முன்னடநீ சந்தமுனி தன்கூட
பகையாதே என்மகனே பஞ்சவரைக் காத்துக்கொள்ளு
அஞ்சுபூக் கொண்டு ஆசாரஞ் செய்தோர்க்கு
வஞ்சக மில்லாத வாழ்வுகொடு என்மகனே
மகனே நீவாற வழியின் பவிசுகண்டு
தவமுடித்து நீயும் தாண்டியிரு என்மகனே460 என்றுவை குண்டருடன் இசைந்தமுனி ரண்டுவிட்டு
கொண்டயச்சுக் காத்திருங்கோ குண்டருட பக்கமதில்
சாட்சியாய்ப் பார்த்திருங்கோ தரணி வளப்பமெல்லாம்
காட்சி கொடுத்திடுங்கோ கண்ணரியோன் முன்னிருந்து
கோபங்காட் டாதேயுங்கோ குணமுனிவ ரேகேளும்
சாபங் கொடாதேயுங்கோ சாஸ்திர முனிவர்களே
நாரா யணர்பெலங்கள் நன்றா யறிவீர்களே
சீரான பொறுதி செய்வதுநீர் கண்டிருங்கோ
வைகுண்ட மாமுனிதான் வாழுந் தலத்தருகே
மெய்குண்டமாய் மேற்கு மேன்மூலை யோர்தனுக்கு
வடகீழ் மூலை மாமுனியே ஓர்தனுக்கு
இடமிதுவே சொன்னேன் யார்க்குந்தெரி யாதிருங்கோ
இந்தப் படிகாத்து இருங்கோ தருணம்வரை
சிந்த முனிவர்களே செல்லு மிவர்கூட
என்று முனிகளுக்கு இயம்பச் சிவநாதன்
நன்றுநன் றென்று நன்முனிவர் சம்மதித்தார்
உடனேதான் வைகுண்டர் உள்ள மிகமகிழ்ந்து
கடலை மிகத்தாண்டி கரையிலே செல்லுமுன்னே
தேவாதி தேவரெல்லாம் திருமுறைய மிட்டனரே
ஆவலா தியாக அபயமிட்டார் தேவரெல்லாம்480 வைகுண்டருக் கேபயம் முறையமிட்டார் மாதேவர்
கைகண்ட ராசருக்குக் காதிலுற அபயமிட்டார்
நாரணருக் கேயபயம் நாதனுக் கேயபயம்
தோரணருக் கேயபயம் சுவாமி யுமக்கபயம் தேவாரம் நாராயண நாதாசிவ நாதா உமக்கபயம்
நாடுங்கலி கேடுவரும் நாதா உமக்கபயம்
சீராய்ப்புவி யாளவரு வாயே உமக்கபயம்
சிவசிவனேசர சரணம்மகா சிவனே உமக்கபயம்
பாராயேழை முகமேபரா பரமே உமக்கபயம்
பாலர்தெய்வச் சான்றோர்படுந் துயரந் தனைமாற்றும்
நாராயண தீராநல்ல நாகந் தனில்துயில்வாய்
நலமோவுனக் கிதுநாள்வரை நாங்கள் படும்பாடு
கடல்மேல்துயில் கண்ணாகனி கண்டே கன்றையெறிந்தாய்க்
களமேபெலி கொளவேகூளி களிக்க லங்கையழித்தாய்க்
குடைபோல்குன்றை யெடுத்தாய்முப்புர கோட்டை தனையெரித்தாய்க்
கோனினிடை மாதரிணைக் கோனா கவேவளர்ந்தாய்க்
காடேகாலி மேய்த்தாய்ப்புனல் களியன் தனைவதைத்தாய்க்
கஞ்சன்தனை வதைத்தாய்பெலக் காரர்பெலம் வதைத்தாய்
மாடேமேய்த்துத் திரிந்தாய்வலு மாபலியைச் சிறைவைத்தாய்க்
கோசலாபுவி யாண்டாய்வலுக் குகனை மிகக்கண்டாய்க்500 குறோணிதனை வதைத்தாய்வலு குண்டோமசா லியைக்கொன்றாய்க்
கொல்லதில்லை மல்லன்கொடுஞ் சூரன் தனைவதைத்தாய்
ஈடாய்வலு இரணியன்குடல் ஆறாயோடக் கொன்றாய்
இரக்கமற்ற துரியோதனன் அரக்கர் குலமறுத்தாய்
இன்னங்கலி நீசக்குலம் கொல்ல வரம்பெற்றாய்
ஏழைக்குடி சாதிகட்கு மீள விடைகொடுத்தாய்
எழுந்துதெட்ச ணாபுவியில் இரங்கி வரவேணும்
மாளக்கலி தாழநரகம் வீழ வரம்பெற்றாய்
வாய்த்தகுல சான்றோரவர்க் கேற்ற வரம்பெற்றாய்
வரவேணுந் தெட்சணாபுரி மலைபோ லுயர்ந்துபோகு
தேசக்கலி தீதுவநி யாயம் பொறுக்கரிதே
சிவனேவைந்த ராசேதெச்ச ணாபு வியில்போவோம்
கேட்பாரில்லை யெனவேபேய்கள் கீழும் மேலுஞ்சாடுது
கிருஷ்ணாமகா விஷ்ணுவேவுன் கிருபை யிரங்கவேணும்
தாண்மைக்குலச் சான்றோருன்னைத் தவத்தால் தேடிவருந்துன்
தாயுமவர் தகப்பன்சுவாமி தானே யல்லாலுண்டோ
சர்வபரா சுவாமிசிவ சுவாமி யுமக்கபயம்
சாணார்படுந் துயரங்கண்டு சுவாமி யெழுந்தருள்வாய்
ஆற்றிலலைக்கோரை யைப்போல் அலைவதுந் தெரியாதோ
அணைப்பாருன்றன் துணையேயல்லால் அவர்க்கே ஏதுமுண்டோ520 பலநாளவர் படும்பாட்டெல்லாம் பார்த்தே யிருந்தாயோ
பயமோ அவரிடம் போகினுஞ் செயமோ சொல்லுமையா
பாலரவ ருமக்கேயல்லா பாரா திருப்பாயோ
ஆருமற்றார் போலேயவர் அலைவ துந்தெரியாதோ
அரனேசிவ மருகாவுனக் கபயம் உனக்கபயம்
அவரால்நாங்கள் படும்பாடெல்லாம் அறியல் லையோசுவாமி
ஆதிமுறை யாகமத்தை அழித்துச் சொல்லுறோமோ
அதுதான்பொய்யோ மெய்யோவென் றாகமந் தனைப்பாரும்
அண்டரண்டந் தொழவேவரும் ஆதி யுமக்கபயம்
அரகராசிவ அரனேசிவ அரசே யுமக்கபயம்
ஆதிசிவ னாதிதவ மோதி யுமக்கபயம்
ஐயுங்கிலி சவ்வுங்கிண அரனே யுமக்கபயம்
அம்மாஆதி அய்யாசிவ மெய்யா உமக்கபயம்
அரசேதெச்ச ணாபுவியில் வரவேணு முமக்கபயம்
அந்தக்கலி திந்தெய்யென் றறவே வரவேணும்
அத்திடக்கலி செத்திடக்கலி அறவே வரவேணும்
அய்யக்கலி தீயாவியே அறவே வரவேணும்
அவகடக்கலி சவகேடாக அழிக்க வரவேணும்
ஐம்பத்தாறு சீமையொரு குடைக்குள் ஆள்வாயுமக்கபயம்
அத்தாவுமக் கபயம்சிவ முத்தா வுமக்கபயம்540 ஆதிநா ராயணர்க்குப் பால னானகுணதீரா
ஆதியுமக் கபயம்சிவ சோதி யுமக்கபயம்
அரனேசிவ னார்க்குமருக னான குணபாலா
அலைவாய்க் கரைமடமாம்பதி ஆள்வா யுமக்கபயம்
அய்யாவை குண்டாஅலை கண்டா யுமக்கபயம்
தாணுமா லயனாய்ப்பேரு தழைக்க சிவமுளைக்க
தானாயொரு குடைக்குள்தர்மத் தரணி யாளவந்தாய்
சாணாக்குரு வேதக்குரு தானானா யுமக்கபயம்
தாண்டும்பதி கூண்டப்பதி தானானா யுமக்கபயம்
தவமேதெச்ச ணாபூமியில் தானே வருவாயே தெச்சண மீதே வந்து தெய்வமா யிருந்து கொண்டு
மிச்சமாய் புதுமை காட்டி மேதினி யெவருங் காண
உச்சமே சான்றோர்க் கீந்து உதவியுஞ் செய்வா யென்று
பச்சமாய்த் தேவ ரெல்லாம் வைந்தரின் பதத்தில் வீழ்ந்தார் வீழ்ந்திடக் கண்டு வைந்தர் விடையுள்ள தேவர் தம்மைச்
சோர்ந்திட மொழிகள் சொல்லி தேவரே பதற வேண்டாம்
ஓர்ந்திட எனக்கு முன்னே உள்ளது தானே யென்று
கூர்ந்திட வுரைத்தீ ரெல்லாம் குணமுடன் மகிழ்ந்து சொல்வார் தெய்வ மாதர்கள் தாம்பெற்ற தேவரே சான்றோர்க் கெல்லாம்
மெய்வரம் பதுபோல் ஞாயம் விளம்பிடப் பேறு பெற்றேன்560
பொய்வரம் பசாசு எல்லாம் பொன்றுற வரங்கள் பெற்றேன்
அய்வரைக் காத்துத் தர்ம அரசுக்கும் பேறு பெற்றேன் ஒருகுடை யதற்குள் ளாள ஒருவிஞ்சை யதிகம் பெற்றேன்
கருவுடை யோர்க்குங் காண கனவரம் பெற்றே னானும்
மறுகிநீர் தவிக்க வேண்டாம் வருவேனான் சான்றோ ரண்டை
குறுகலி யதனைத் தாண்டிக் கொள்வேனென் குலத்தைத் தானே என்னையே கெணியா வண்ணம் ஏழையா யிருந்த சான்றோர்
தன்னையே பழித்தோ ரெல்லாம் சளமது துயரங் கொண்டு
அன்னீத நரகந் தன்னில் அகப்படத் தள்ளித் தள்ளிக்
கொன்றுநான் சான்றோர்க் கெல்லாம் கொடுப்பேன் மேற்பவிசு தானே எல்லாஞ் சான்றோர் கையாலே எள்ளும் நீரும் கலிக்கிறைத்து
பொல்லாக் கலியை நரகமதில் புக்க அடித்துப் பேயோடு
கொல்ல விடைகள் கொடுப்பேனான் கூண்ட சான்றோர் கையதிலே
வல்லோர் புகழுந் தேவர்களே மனமே சடைக்க வேண்டாமே வேண்டா மெனவே தேவருக்கு விடைகள் கொடுத்து வைகுண்டரும்
கூண்டாங் கடலின் கரைதாண்டி குதித்தே கரையி லோடிவந்து
தாண்டாய் முன்னே பெற்றதொரு தாய்க்கோர் சடல வுருக்காட்டி
ஆண்டா ராணை யொருவருக்கும் அகலா தெனவே யாணைகொண்டார் நானோ பிறந்த சமுத்திரத்தின் நடுமேற் கடலி லன்னாபார்
ஏனோ பதியும் மேடைகளும் எண்ணிப் பாரு தேர்நிறமும்580
மானோ பொன்னோ மண்டபமோ வறடே யுனக்குச் சாட்சியிது
யானோ காட்டுஞ் சொரூபமெல்லாம் யாதா யிருநீ மறவாதே பதமோ பதமோ பாற்கடலின் பாலை யகமே கொள்ளுவென
இதமாய் இதமாய்ச் சொல்லிடவே இசையா வண்ணம் வீழ்ந்திடவே
உதயம் உதயம் வெளித்திறந்த உருவை யொருவர்க் குரையாமல்
இதையே யிதையே மறந்துஎன்னை இளப்பம் பேசிநெகிழா தென்றார் ஆண்டா யிரத்து எட்டுமுன்னே அன்னை யெனவே நீயிருந்தாய்
கூண்டா மெட்டா மாசியிலே குணமாய் நாரா யணர்மகவாய்
சான்றோர் கெதிகள் பெற்றிடவே தர்ம குண்டம் பிறந்துவொரு
கூண்டாங் குடைக்கு ளரசாளக் கொண்டே போறேன் கண்டிருநீ வைகுண்டம் பிறந்து வார்த்தையொன் றோர்குடைக்குள்
பொய்கொண்ட பேரைப் பெலிசெய் தரசாள
கொண்டுநான் போறேன் குலக்கிழடே பாரெனவே
அன்றுவை குண்டர் அவர்நடந்தார் தெச்சணத்தில்
கெங்கைக் குலத்தாயை கிருஷ்ணர் வரவழைத்து
நங்கையே யென்னுடைய நாமமது கேட்டதுண்டால்
பால்போல் பதம்போல் பாவந்தீ ரன்பருக்குச்
சூல்புத்தி வம்பருக்குச் சூதுசெய் மங்கையரே
என்றுவை குண்டர் யாமம் கூறிக்கூறி
இன்றுதெச்ச ணம்போக எழுந்தருளி யேவருக600 சகல வுலகோரும் சந்தோசங் கொண்டாடப்
புகல எளிதில்லாத பெரியநா ராயணர்க்கு
வைகுண்டம் பிறந்து வார்த்தையொன் றோர்குடைக்குள்
மெய்கொண்ட முப்பொருளோர் மேனியொன் றாய்த்திரண்டு
எல்லா வரமும் இவர்க்கு மிகக்கொடுத்து
நல்லோர்க்குக் காலம் நலமாகு மென்றுசொல்லி
வானலோ கம்வாழும் வானவருந் தானவரும்
தானே முன்னாகமங்கள் தப்பாதிடை முனிவர்
வகுத்திருந்த ஆகமங்கள் நிறைவேறி வந்துதென்று
மாமுனிவ ரெல்லோரும் மாசந்தோசங் கொண்டாடி
நாமு மெதிரேபோய் நல்லவை குண்டர்பதம்
கண்டுகொள்வோ மென்று கனமுனிவ ரெல்லோரும்
கொண்டு மலர்ப்பூக்கள் கோமான்கால்மீ தேசொரிந்து
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து
உற்ற துலுக்கன் உடன்வந் துடனோடி
மற்றொரு பத்தாண்டில் வருவோமென் றாகமத்தின்
வர்த்தமா னம்போலே வந்தவை குண்டரென
எல்லோரும் போற்றி எதிர்நின்று வாழ்த்திடவே
நல்லோரா யெங்களையும் நாரா யணர்மகனே
உன்கிருபை தந்து உதவிதரு வாய்மேலும்620 முன்கிருபை யெல்லாம் உனக்குள்வச மாச்சுதல்லோ
முப்பொருளும் நீதானாய் உறுவெடுத்தா யானதினால்
எப்பொருளைக் கண்டு இயல்புபெறப் போறோங்காண்
வைகுண்ட மாமுனியே மனதிரங்கிக் காக்கவேணும்
மெய்குண்டர் பதத்தில் வீழ்ந்து நமஸ்கரித்தார்
அப்போது வானோர்க்கு ஆதிவைகுண் டருரைப்பார்
இப்போது வானோரே எனையறிந்த தெந்தவிதம்
என்றுவை குண்டர் இயல்பறியச் சொல்லிடவே
அன்று வானோர்கள் எல்லோரு மேதுசொல்வார்
கயிலயங் கிரியிலுள்ள கணக்குமுத லுள்ளதெல்லாம்
ஒயிலாகப் பிறப்பு உயர்கணக் கானதுவும்
தத்துக் கணக்கும் சஞ்ச முதற்கணக்கும்
பத்துக் கணக்கும் பலன்பெற்றோர் தங்கணக்கும்
மோட்சக் கணக்கும் முன்னுள்ள யுகக்கணக்கும்
வாச்சக் கணக்கும் வைகுண்ட நற்கணக்கும்
நரகக் கணக்கும் நடுத்தீருவைக் கணக்கும்
தருமக் கணக்கும் சகலக்கணக் குமுதலாய்ப்
பொறுமைப் பிரமா பூசாந்திரக் கணக்கும்
எல்லாக் கணக்கும் எடுத்துமிகத் தேவரெல்லாம்
வல்லான கயிலைவிட்டு வருவதுகாண் டேயடியார்640 தியங்கி மனங்கலங்கித் தேவரோ டேகேட்டோம்
மயங்கிமிகக் கேட்டிடவே மாதேவ ரேதுரைப்பார்
நாரா யணர்க்கு நல்லவைகுண் டம்பிறந்து
சீரா யுலகமெல்லாம் சிறந்தே வொருகுடைக்குள்
ஆள வருவதினால் அவர்கைக்குள் ளிக்கணக்கு
நீள அரன்சிவனும் நெடிய மருகோனும்
இந்நாள் முதலாய் ஏழ்ப்பிக்க வேணுமென்று
சொன்னார்கா ணெங்களையும் சுருதிக் கணக்கையெல்லாம்
பொன்னுலோ கம்புகுந்து
பெட்டகத்தோ டேயெடுத்து
வாரு மெனஅயச்சார் மகாபரனும் மாலோனும்
சேரும் வைகுண்டம் சிணம்பிறந்தா ரென்றுசொல்லி
ஆனதினா லிப்போ யாங்கள்கொடு போறோமென்றார்
நானதுகள் கேட்டு நன்றா யறிந்தோமென்றார்
அப்போது வைகுண்ட ராசர் மிகவுரைப்பார்
இப்போது வானவரே எல்லோரு மென்கூட
வாருங்கோ வென்று வைகுண்டர் சொல்லலுற்றார்
சீருங் கோபால சிவனே செயலெனவே
வானவர்கள் தேவர்முதல் மறைமுனிகள் சாஸ்திரிகள்
தானவர்க ளுங்கூட சங்கீதம் பாடிவரச்
சந்திர சூரியர்கள் தம்மானக் குடைபிடிக்கச்660 சுந்தரஞ்சேர் வைகுண்டம் தோன்றிவந் தாரெனவே
வேத மறையோரும் விசய முனிவர்களும்
நாதாந்த வேதமதை நன்றாய்த் தெளிந்தெடுத்துக்
கோமான் வளரும் கோவேங் கிரிதனிலே
நாமாது வாழும் நல்லதிரு மண்டபத்தில்
தங்க நிறத்தூணில் சதுர்மறையோர் தாங்கூடி
எங்கு மகிழ எழுதினா ரம்மானை667 திருவாசகம் 2 ஏகமொரு பரமானதும் இம்மென்றொரு வாயுவில் சத்து வளைந்ததும் சத்தில் சிவம் தோன்றியும் சிவத்தில் சத்தி தோன்றியும் சத்தியில் நாதம் தோன்றியும் நாதத்தில் விஷ்ணு தேன்றியும் ருத்திரர் மயேசுரர் உலகம் தோன்றியும் உலகில் அண்டபிண்டம் தோன்றியும் பிண்டத்தில் குறோணி அசுரன் தோன்றியும் குறோணி வானலோகம் விழுங்கவும் கோபத்தால் விஷ்ணு சென்று குறோணியைத் துண்டாறாய் வெட்டி உலகில் தள்ளவும், துண்டமென்றில் குண்டோமசாலி பிறக்கவும் சுகசோபன மண்டபமலைய விளித்ததும் திருமருகரது கேட்கவும் தேவாதிகளை நாங்கிலாக்கி வரையானதைத் தூண்டிலாக்கிக் கடலை ஓடையாக்கிக் காயாம்பு வண்ணர் ஓடமேறியே கறைக்கண்டர் ஓணிதள்ளவே கன்னியிலே தூண்டலுமிட்டு அக்குண்டோமசாலியையும் வதைத்து மறுயுகம் தோன்றியே தில்லைமலாலன் மல்லோசி வாகனென்ற இருபேருடைய அநியாயம் பொறுக்காமலே அவனிருவரையும் சங்காரம் செய்து அடுத்த யுகம் தோன்றியே, சூரன் சிங்கமுகா சூரன் செய்த அநியாயம் பொறுக்காமலே ஆதித்திருநெடுமால் ஆறுமுகக் கடவுளென நாமமுங் கூறியே அவனையும் சங்காரஞ் செய்து அவ்வுகத்திலே பிறந்த அசுரன் இரணியனையும் வதைத்து அந்த யுகமும் அழித்து அடுத்த யுகம் தோன்றியே, அரக்கன் இராவணசங்காரமுஞ் செய்து சீதாப்பிராட்டியினுடைய சிறையையு மீட்டித் தென்னிலங்காபுரி அரக்கரையும் கொன்று அக்கிளையொழிய அக்குலமும் அறுத்து அடுத்தயுகம் தோன்றியே; பஞ்சவர்க்கு பகாரியாகியே பகைத்தத் துரியோதனனையும் வதைத்துப் பஞ்சவர்க்குக் குருநாடு பட்டமுஞ் சூட்டியே அரசாள வைத்து கலிவருவானெனக் காற்று வீசினதைக் காதிலே கேட்டுக் கானக வழிநடந்து பஞ்சவர்களுடைய பாரப்பெலன்களையும் வாங்கிப் பச்சை மாலை சுமந்திருந்த பயமாயக் கூட்டைப் பர்வதாமலை யுச்சியிலே கிடத்தி, கங்கையுங் கண்டு கங்கையிலே குளித்த கன்னிமார் பெண்களுடைய கற்பையுஞ் சோதித்துக் கயிலையங்கிரி சென்று ஏழுலோகம் புகுந்து ஏழு வித்துமெடுத்து இருதய கமலத்திலே இருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங் கொடுத்துத் தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப் பத்திர காளியிடத்தில் பாலரையுங் கொடுத்து ஸ்ரீரங்கம் போய் செகமறியும்படி பள்ளிகொண்டிருந்ததும்; தேவாதிகளுடைய வாக்கினாலே ஈசுரர் தாமே கலியனையும் பிறவிசெய்து இருநூற்று முப்பது நூறாயிரம் வருஷமாகக் கட்டங்கொடுமை செய்து அவனியரசாண்டு கன்னிமக்களாகிய சான்றோர் படுகிற மறுக்கம் பொறுக்காமலே, வியாகரிடை முனிவர் வகுத்த ஆகமத்தின் படியே மகாபர நாராயணர் தாமே வைகுண்டமாய்ப் பிறந்து ஒரு குடைக்குள் 1008 ஆம் ஆண்டு மாசியிலே அஞ்சி மூவஞ்சி தேதியிலே அவனிமனுவிலே ஆதிச்சாதியிலே மனுநிறமாக வந்திருந்து சாதி பதினெண்ணையும் ஒருதலத்தில் வருத்தியே தர்மமாய்த் தாரணி யாபேர்க்கும் சஞ்சல நோய்பிணி தண்ணீரால் தீர்க்கவும் சந்ததியில்லாத பேர்க்குச் சந்ததி கொடுக்கவும் தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும் சாதைவாதை பேய்களைச் சரிவிலே எரித்துக் கரியச் செய்யவும் தரணியேழு கணக்கையும் கேட்டு மிக சத்தியாய் அன்பு மனிதருக்காகவே தரணியில் நாலுதரம் சளங்கள் படவும் சாஸ்திரவேத நூலுக்குச் சரியொத்தி பேர்களுக்கு உபகாரங்கள் செய்யவும்; சண்டையாய்க் கலியனைத் தன்னாலே போக்கவும் தர்மமாகத் தரணியோர் குடைக்குள்ளாளவும் தங்கநவரத்தினத் திருமுடி சூடியே சகலமாபதி மேடைகள் பாவிக்கவும் தவசு கிருபை பெறவும், தங்கமணி சக்கராயுதக் கொடி ஒற்றைக்கொடி கட்டவும் சகலரும் புகழவரும் தர்மராசாவாகவும் சங்கவிருதுக் கொடி ஒத்தக் கொடி கட்டவும் அஷ்டதிக்குப் பதினாலு லோகமுமறிய அசையா மணியொன்று கட்டியே அரசு பாவிக்கவும், ஆதி சர்வேஸ்வரனாகிய அவனியைம்பத்தாறு சீமையும் அடக்கி அரசாளவும் ஆதிசர்வ காலமும் அழியாத் திருவுளமாயிருந்து அரசாள்வாரெனவும் ஆதிராமச் சந்திர சூரிய நாராயணர்க்கு ஆதியாகமத்தின் படியாகவே ஆதிவைகுண்டம் பிறந்தாரெனவே, அண்டர்களும் முனிவர்களும் தேவர்களும் அதிக சகல மாமுனிவர்களும் எல்லோருங் கூடியிருந்தாராய்ந்து தொண்டர்தமக் கென்றுவளர் கொன்றையணி கயிலையில் மண்டலம் புகழச் சிவனாருடைய கிருபையினாலே என்றவர் கயிலையங்கிரியில் எழுதினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement