Load Image
Advertisement

சுந்தரகாண்டம் பகுதி-5

தீமையை வேகமாகச் செய்து முடித்து விடலாம். ஆனால், நல்ல காரியங்கள் செய்வது கஷ்டமான விஷயம். அதில் பல தடைகள் வரும். நல்லது செய்யப் போனாலும் சிலருக்கு கெடுதலாகத் தெரியும். ஆஞ்சநேயர், எவ்வித எதிர்பார்ப்புமின்றி ராமபிரானுக்கு நன்மை செய்யச் செல்கிறார். சீதாபிராட்டியை அவரோடு சேர்த்து வைக்கப் போகிறார். பிரிந்திருக்கிற கணவன், மனைவியை சேர்த்து வைப்பது போல புண்ணியம் உலகில் வேறு ஏதுமில்லை. அவர்களைப் பிரிப்பது போல கொடிய பாவமும் வேறு ஏதுமில்லை. எந்தக் குடும்பத்திலாவது கணவன், மனைவி என்ன காரணத்தில் பிரிந்திருந்தாலும், அதையெல்லாம் மறந்து விட்டு சேர்த்து வைக்க பெரியவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல! இங்கே இன்னொரு தத்துவமும் விளக்கப்படுகிறது. ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை அடைய வழி தெரியாமல் சிரமப்படுகின்றன. இவ்வுலக வாழ்வின் தற்காலிக இன்பங்களை நிஜமெனக் கருதி, மாயையில் மூழ்கித் தவிக்கின்றன. இவர்களை பரமாத்மாவுடன் இணைத்து வைப்பவர் ஆச்சார்யர் எனப்படும் குரு தான். நல்ல குரு அமைவது ரொம்பவே கஷ்டம். குரு கிடைக்காதவர்கள், ஆஞ்சநேயரை தங்கள் குருவாகக் கொள்ளலாம். சீதையாகிய ஜீவாத்மாவை ராமனாகிய பரமாத்மாவுடன் சேர்த்து வைத்த கருணை குருவாக அவர் விளங்குகிறார். ஆச்சார்ய, சிஷ்ய சம்பந்தம் சுந்தரகாண்டத்தில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. ஆஞ்சநேயர் இப்போது கடலைக் கடந்து கொண்டிருக்கிறார். அதைக் கவனிக்கிறான் கடலரசனான சமுத்திர ராஜன். இவனை வளர்த்தவன் இக்ஷ்வாகு குலத்து அரசனான ஸகரன். இந்தக் குலத்தில் வந்தவர்களே தசரதர், ராமன் ஆகியோரெல்லாம். தன்னை வளர்த்த இக்ஷ்வாகு குலத்தவர்க்கு நன்றி தெரிவிக்க இதுதான் சமயமென நினைத்தான் சமுத்திரராஜன். அவன் தனக்குள் மைநாக பர்வதம் என்ற மலை, அடைக்கலமாக இடம் தந்திருந்தான். ஒரு காலத்தில் மலைகளுக்கு இறக்கைகள் இருந்தன. அவை பல்வேறு இடங்களுக்கு பறந்து செல்லும் போது, தேவர்கள், பூதகணங்கள் மீது மோதி பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த இந்திரன், மலைகளைப் பிடித்து அவற்றின் இறக்கைகளை வெட்ட ஆரம்பித்தான். மைநாக மலையையும் அவன் விரட்ட, அது பயந்து வேகமாகப் பறந்தது. அது வாயு பகவானிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டியது. வாயுவும் கருணை செய்து, பின்னால் ராமசேவையின் போது இந்த மலைக்கு வேலையிருக்கும் என்பதை மனதில் கொண்டு, கடலுக்குள் அடித்து தள்ளி ஒளித்து வைத்தது. இந்திரனும் அது நல்லதே என நினைத்து, கடலுக்கடியில் ஒளிந்திருக்கும் அசுரர்கள், இந்த மலையைத் தாண்டி வெளியே வந்து தேவர்களைத் துன்புறுத்துவது தடைபடும் என்பதால், மைநாக மலையை அப்படியே விட்டுவிட்டான். அதுவும் இந்திரனுக்கு பயந்து கடலுக்குள்ளேயே கிடந்தது. அந்த மலைக்கு கீழும், மேலுமாக வளரும் சக்தியும் உண்டு.சமுத்திரராஜன் அந்த மலையிடம், நண்பா! நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். ராம காரியத்தின் பொருட்டு, ஸ்ரீஆஞ்சநேயர் லங்காபுரிக்கு பறந்து கொண்டிருக்கிறார். நீ சற்று மேலே வந்து. அவரை மறித்து உன் மேல் இளைப்பாறிச் செல்ல வகை செய். ஆஞ்சநேயர் கடலைத் தாண்டுவதால் களைப்படைந்திருப்பார். அவரை ஆசுவாசப்படுத்த வேண்டியது என் கடமை. மேலும், அவர் வாயுபுத்திரர். வாயு பகவான் உன்னைத் தூக்கி வந்து எனக்குள் ஒளித்து வைத்தார். அவ்வகையில், நீயும் வாயுவுக்கு நன்றி செய்ய கடமைப்பட்டிருக்கிறாய். அவருக்கு செய்யும் நன்றியை அவரது புத்திரருக்கு செய்தால் மேலும் சந்தோஷப்படுவார், என்றான்.யாருக்காவது மூச்சுத்திணறல் போன்ற சிரமப்படுத்தும் வியாதிகள் இருந்தால் அஞ்சிலே ஒன்று பெற்றான் என்ற பாடலை ஆஞ்சநேயர் படத்தின் முன்னால் அமர்ந்து பாடினால் சரியாகி விடும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஏனெனில், தன் புத்திரனை வணங்குவோருக்கு வாயு பகவான் நிச்சயம் கருணை செய்வார். மைநாக மலையும் உயர எழுந்தது. ஆஞ்சநேயருக்கு அந்தமலை உபகாரம் செய்வதற்காக எழுகிறது என்பது தெரியாதல்லவா? ஏதோ ஒரு தடை ஏற்படுகிறதென கருதி, அவர் தன் மார்பால் அந்த மலையில் மோதினார். அந்த மலைக்கு வலித்தது. ஆஹா...இப்படி ஒரு பலவானா? மலையையே அசைக்கும் சக்தி வாய்ந்தவனாக இருக்கிறானே! என்று சந்தோஷப் பட்ட மைநாக மலை மானிட உருவமெடுத்து அவன் முன்னால் நின்று, தன்னைப் பற்றி விளக்கி, தனது விருந்தினராகத் தங்கிச் செல்ல வேண்டும் என்றது.ஆஞ்சநேயர் மிகுந்த மகிழ்ச்சியுடன், பர்வதராஜா! உன் உபசரிப்பை ஏற்கிறேன். ஆயினும், என்னால் தங்க இயலாது. இலங்கை செல்லும் வரை வழியில் எங்கும் தங்குவதில்லை என என் வானர நண்பர்களிடம் சத்தியம் செய்துள் ளேன். சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. உன் உபசரிப்பை ஏற்றதற்கு அடையாளமாக உன் மேல் கைவைக்கிறேன், என்று சொல்லி மானிட வடிவில் நின்ற மலையின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து விட்டு, தொடர்ந்து பறந்தார். அப்போது இந்திரன் மலை முன்னால் தோன்றி, பர்வதராஜா! சிரஞ்சீவியால் ஆசிர்வதிக்கப்பட்டதால் நீ உயர்ந்த கதி பெற்று விட்டாய். இனி நீ உன் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாம், எனச்சொல்லி பல வரங்களையும் தந்தான். ஆஞ்சநேய தரிசனம் கடலினும் ஆழமான கவலைகளைக் கூட கரைத்து ஆனந்தமளிக்கும் என்பதற்கு மைநாக மலையின் கதையே உதாரணம். இந்நேரத்தில், ஆஞ்சநேயரிடம் விஞ்சியிருப்பது பலமா, புத்திசாலித்தனமா என்று பரிட்சித்து பார்க்க தேவர்கள், கின்னரர்கள், சித்தர்கள், முனிவர்கள் ஆசைப்பட்டார்கள். அந்தக் காலத்திலேயே ஆஞ்சநேயரைப் பற்றி இவர்கள் பட்டிமன்றம் நடத்தியிருப்பதாகக் கொள்ளலாம். இதற்கு நடுவர் வேண்டுமே! அவர்கள் நாகங்களின் தாயான சுரஸை என்பவளை அழைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement