Load Image
Advertisement

சுந்தரகாண்டம் பகுதி-8

தன்னை மறித்த லங்காதேவியை ஒரே அடியில் அவர் வீழ்த்தினார். எப்படி அடித்தாராம் தெரியுமா?பெண்களிடம் ஆண்கள் வீரத்தைக் காட்டக்கூடாது. லட்சுமணன் கூட அவசரப்பட்டிருக்கிறான், சூர்ப்பனகை விஷயத்திலே. அதனால் தான், இன்று இவ்வளவு விபரீதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அவளை சமாதானம் செய்து பார்த்தார்கள் ராம, லட்சுமணர்கள். அவள் கேட்பதாக இல்லை. அதற்காக, அவசரப்பட்டு நோஸ்கட் பண்ணியிருக்க வேண்டுமா! தப்புத்தானே!ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஆஞ்சநேயர் இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். லங்காதேவியை அவரும் அடித்தார். ஏனெனில், அவள் அடிபட வேண்டும் என்பது விதி. அதுவும் எப்படி அடித்தார் தெரியுமா? அவள் பெண் என்பதால், வலது கையால் அடித்தால் தாங்கமாட்டாள் என்று, இடது கையால் அடித்தாராம். இடது கைக்கு சக்தி குறைவு தானே! அதனால் வலியோடு போயிற்று. அவளது உயிருக்கு ஆபத்து வரவில்லை. மேலும், அவளுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கவே அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டார். சுரஸையையும் அவர் கொல்லவில்லை. அவள் சொன்ன நிபந்தனையை நிறைவேற்றி, அவளது ஆசியையும் பெற்றார். பெண்களிடம் ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் சுந்தரகாண்டம் மூலம் நமக்குச் சொல்லித் தருகிறார். லங்காதேவி ஆஞ்சநேயரிடம் அடிபட்டாள். உடனே, தன் ராட்சஷ ரூபம் மறந்து, ரூப லாவண்யம் மிக்க பேரழகியாக அவர் முன் நின்றாள். வானர வீரரே! பிரம்மா எனக்கிட்ட சாபத்தால் இங்கு நான் தங்கியிருந்தேன். என்று ஒரு வானரன் உன்னை வெல்கிறானோ, அப்போது நீ விமோசனம் பெறுவாய். அப்போது, இலங்கையில் ஆளும் ராட்சஷர்கள் அழிக்கப்படுவார்கள் என்று சொல்லியிருக்கிறார். அதன்படியே இன்று நடந்தது. பிரம்மாவின் வாக்குப்படி, நீ ராட்சஷர்களை அழிப்பாய், என்று சொல்லி இலங்கையை விட்டுப் புறப்பட்டு சென்று விட்டாள்.இதன்பிறகும், ஆஞ்சநேயருக்கு பெண்களைக் குறித்த அனுபவம் ஏற்படப்போகிறது. காவல் தெய்வமே அனுமதி தந்து விட்டதால், இலங்கைக்குள் புகுந்த அவர் சீதாதேவியை தேடி வீடு வீடாக அலைகிறார். எங்கும் அவள் இல்லாமல் போனதால், ராவணனின் அரண்மனைக்கே வந்து விடுகிறார். அப்போது, அங்கே அவனது ஆசைநாயகியர் அலங்கோலமாக கிடக்கிறார்கள். அதைப் பார்த்து அவர் கண்களை மூட வேண்டிய நிலைமை வந்துவிட்டது. பெண்கள் தூங்கும் போது அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் அடக்க ஒடுக்கமாக தூங்கிப் பழகினால் தான், வெளியிடங்களில் தங்கும் போதும் அதே பழக்கம் வரும். நாம் ரயில்வே ஸ்டேஷன்களிலும், பஸ் ஸ்டாண்ட்களிலும் இரவு நேரத்தில் சென்றால், பல பெண்கள் தாறுமாறாக படுத்திருப்பதைப் பார்க்கலாம். இதற்கு காரணம் பெரியவர்கள் சிறியவர்களுக்கு கற்றுக் கொடுக்காமையே ஆகும்.ராவணனின் அரண்மனையில் படுத்திருந்த பெண்களின் நிலையைக் கண்ட ஆஞ்சநேயர், கண்களை மூடிக் கொண்டு, ராமா! நான் என்ன பாவம் செய்தேனோ! உன் திருஉருவத்தை மட்டுமே எந்நேரமும் தரிசித்துக் கொண்டிருந்த என் கண்கள், இந்த அலங்கோலக் காட்சிகளையெல்லாம் பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதே! என்று சொன்னாராம்.இது மட்டுமா! சீதாதேவியை ஒரு வழியாக அவர் அசோகவனத்திலே பார்த்த போது, அவளை ராட்சஷிகள் ராவணனோடு இணையும்படி துன்பப்படுத்திக் கொண்டிருந்தனர். மிரட்டினர். அதையெல்லாம் மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் ஆஞ்சநேயர். அவர்கள் தூங்கிய பிறகு, சீதையை சந்தித்த அவர், அம்மா! இந்த ராட்சஷிகளை நான் அடிக்கட்டுமா? என்றார்.அப்போது கருணைக்கடலான சீதா சொன்னாள். அடேய் ஆஞ்சநேயா! உனக்கு பெண்களை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் எப்படி தோன்றியது? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? தங்கள் தலைவன் இட்ட கட்டளையைச் சரிவர செய்கிறார்கள். அவ்வளவுதானே! பாவம் செய்தாலும் சரி..நன்மையே செய்தாலும் சரி..ஒருவரை தயையுடன் ஆட்கொள்வது தான் சிறந்த தர்மம். இதைப் புரிந்து கொள். மேலும், உலகத்தில் தப்பே செய்யாதவர்கள் கிடையாது, என்றாள். ஆஞ்சநேயருக்கு இன்னும் வருத்தம் வந்து விட்டது.இவ்வளவு கஷ்டப்பட்டு கடலைத் தாண்டி குதித்து வந்திருக்கிறேன். இந்த அம்மா தப்பு செய்யாதவனே கிடையாது என்கிறார்களே. நான் என்ன தப்பு செய்தேன்? என்று அவளிடமே கேட்டுவிட்டார். இவர்களை அடிக்க நினைத்தது நீ செய்த தப்பு, என்றாள் பிராட்டி.சரி...என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போங்கள். என் தலைவன் ராமன் என்ன தப்பு பண்ணினான்? என்று அடுத்த கேள்வியை கேட்டார்..மனைவியை ஒருவன் கடத்திப் போய் விட்டானே! அவளை மீட்க அவரே நேரில் வராமல், உன்னை அனுப்பி வைத்தாரே! அது அவர் செய்த தப்பு, என்கிறாள்.ஏன்... அவளே கூட தவறு செய்திருக்கிறாளே! பொன்மானைக் கேட்டது பெரிய தப்பு. கொழுந்தனை சந்தேகப்பட்டது மன்னிக்க முடியாத தப்பு. அதனால் தான் இப்படி சொல்கிறாள்.ஆக, தவறு செய்தவர்களாகவே இருந்தாலும் கூட பெண்களை கைநீட்டக்கூடாது என்று சுந்தரகாண்டம் நமக்கு உணர்த்துகிறது. இதனால் தான் கணவனும், மனைவியும் பிரிந்திருந்தால், சுந்தரகாண்டத்தில் தினமும் ஒரு ஸர்க்கம் படி என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். மனைவியோ, கணவனோ...யார் தப்பு செய்திருந்தாலும் சரி...தப்பு செய்யாதவர் யாருமில்லை என்ற உண்மையை உணரவும், பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது என்பதை உணர்ந்து கொள்ளவும் சுந்தரகாண்டம் நமக்கு வழிகாட்டுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement