Load Image
Advertisement

சிம்மம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026

மகம்; உடல்நலனில் கவனம்

ஞான மோட்சக் காரகனான கேது பகவான், ஆத்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு டிச.20,2023 முதல் ராசிக்கு 7 ம் இடமான களத்திர ஸ்தானத்தில் கண்டகச் சனியாக சஞ்சரிக்கப் போகிறார் சனி பகவான்.

உங்கள் ராசி நாதனுக்கு சனி பகையானவர் என்றாலும், ஆறாம் வீட்டில் அவர் சஞ்சரித்தபோது அபரிமிதமான நற்பலன்களை வழங்கி வந்தார். ஒவ்வொரு கிரகமும் அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன் தரக் கூடியவர்கள் என்றாலும், சனி அவரவரின் கர்ம வினைக்கேற்ப பலன் தரக் கூடியவர். 7 ம் வீடான சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் பல பிரச்னைகளை உருவாக்குவார். அலைச்சலை அதிகரிக்க வைப்பார். இருக்கும் இடத்தை விட்டு வெளியூர் சென்று வசிக்க வைப்பார். வேண்டாத நண்பர்களால் சங்கடங்களை உருவாக்குவார். கூட்டுத் தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். எதிர்பாலினரால் தடுமாற்றம் உண்டாக்குவார். நேற்றுவரை அதிநட்பாக இருந்தவர்களை எல்லாம் விலகும்படி செய்வார். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னைகளை அதிகரிப்பார். குழப்பத்தை ஏற்படுத்துவார்.

அதிர்ஷ்ட காலம்
சதயம் நட்சத்திரத்தில் சனி வரும் காலமான மார்ச் 16, 2024 - ஜூன் 19, 2024 வரையிலும், நவ 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும் உங்களின் முயற்சி வெற்றி பெறும். செயல்கள் லாபமாகும். சங்கடங்கள் விலகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய வாய்ப்பு உருவாகும். வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பும் பதவியும் வந்து சேரும். சனிபகவான் அஸ்தமன, வக்கிர காலங்களில் கண்டகச் சனியின் பாதிப்பு இருக்காது.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் சங்கடம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடி தோன்றும். தொழிலில் தடையும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலையும் உருவாகும். உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். ஏப் 26, 2025 முதல் ராகு கும்பத்திலும், கேது உங்கள் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் நிலையில் முயற்சியில் தடைகள் ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். வேலையில் அலைச்சல், நிம்மதி இல்லாத நிலை ஏற்படும். நட்புகளுக்கிடையே மனக்கசப்பு உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் சங்கடங்கள் தோன்றும். குடும்பத்தில் சங்கடம் அதிகரிக்கும். எதிர்பாலினரால் அவமானங்களை சந்திக்க நேரலாம் எச்சரிக்கை அவசியம்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் எண்ணங்கள் நிறைவேறும். செல்வாக்கு உயரும். வெளி வட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். எல்லாவிதமான சங்கடங்களையும் சமாளித்து வெற்றி பெறும் நிலை உண்டாகும். மே 1, 2024 - மே 13, 2025 காலத்தில் 10ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் செய்யும் தொழிலில் சங்கடம் நெருக்கடி ஏற்படும். உத்தியோகத்தில் பிரச்னைகள் தோன்றும். பொருளாதாரத்தில் தடை ஏற்படும். மே 14, 2025 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இழந்த செல்வாக்கு மீண்டும் உயரும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். நினைத்ததை நிறைவேற்றும் அளவிற்கு உங்கள் நிலை உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பொதுப்பலன்
மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் தோன்றும். நட்புகளுக்கிடையே கசப்பு உண்டாகும். செயல்களில் டென்ஷன் உண்டாகும். அதனால் வார்த்தைகளில் கோபம் வெளிப்படும். எந்த இடத்திலும் இணக்கமாக இருக்க முடியாமல் போகும். வாழ்க்கைத் துணையுடனும் சங்கடம் ஏற்படும். உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு உண்டாகும். புதிய முயற்சிகளில் இழுபறி ஏற்படும்.

தொழில்
மருத்துவம், கால்நடை, இயந்திரம், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், மெடிக்கல், எக்ஸ்போர்ட் இம்போர்ட், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் லாபகரமாகும் என்றாலும் உழைப்பும், முயற்சியும் அதிகமாக தேவைப்படும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்பு அதிகரிக்கும். பொறுப்புடன் வேலை செய்து மேலிடத்தில் நல்ல பெயரை வாங்குவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றமும் உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் முதலாளியால் பாராட்டப்படுவீர்கள்.

பெண்கள்
இதுவரையில் இருந்த சங்கடங்கள் மறைய ஆரம்பிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வீர்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

கல்வி
உங்கள் ராசிக்கு குருவின் பார்வை இருப்பதால் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியும். ஆனாலும் ஆசிரியர்களின் ஆலோசனை இக்காலத்தில் அவசியம். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் மதிப்பெண் அதிகரிக்கும்.

உடல்நிலை
ஆயுள் ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும், சப்தம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதும் உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்களை ஏற்படுத்தும். வாகனம், விஷ ஜந்துகள், மருந்து மாத்திரைகளாலும் பாதிப்பு உண்டாகும். சிலர் இனம்புரியாத நோய்க்கும் ஆளாகலாம் என்பதால் அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.

குடும்பம்
குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வரன் வரும். பூர்வீக சொத்துகளை அடையும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். வசதியான இருப்பிடம் அமையும். தம்பதிகளுக்குள் பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக அது முடிவிற்கு வரும். அக்கம்பக்கத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்
வினை தீர்க்கும் விநாயகர், சிவனை வணங்கினால் சங்கடம் விலகும்.
பூரம்; சங்கடத்திலும் யோகம்

களத்திரக்காரகன் என்று கூறப்படும் சுக்கிர பகவான், ஆத்மகாரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு டிச.20, 2023 முதல் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் கண்டகச் சனியாக சஞ்சரிக்கப் போகிறார் சனி பகவான்.

உங்கள் ராசிநாதனுக்கு சனிபகவான் பகையானவர் என்றாலும் உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரனுக்கு சனி நட்பானவர். கோச்சார ரீதியாக கிரகங்கள் சஞ்சரிக்கும்போது அவர்கள் எந்த இடத்திலசஞ்சரிக்கிறார்களோ அந்த இடத்திற்கேற்ப பலன் வழங்கிடக் கூடியவர்களாகிறார்கள். இதில் சனி ஒவ்வொருவரின் கர்ம வினைக்கேற்ப பலன்களை அளந்து வழங்கிடக் கூடியவர்.

சனி 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது பிரச்னை, கருத்து வேறுபாடு, அலைச்சல் அதிகரிப்பு, தீயோர் சேர்க்கை, அவப்பெயருக்கு ஆளாகுதல், வாழ்க்கைத் துணையின் உடல்நிலை பாதிப்பு, வாழ்க்கைத் துணையிடமிருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் தனித்து வாழும் சூழல், எதிர்பாலினரால் அலைச்சல், பாதிப்பு, விரயம் உண்டாகும் என்பது ஜோதிடவிதி. இருந்தாலும் ஒருவரின் சுய ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக அமைப்பு, திசா புத்திக்கேற்ப இதில் மாறுதல் ஏற்படும்.

அதிர்ஷ்ட காலம்

அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலமான டிச.20, 2023 - பிப் 15, 2024 வரையிலும், பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 29, 2025 - ஜூலை 2, 2025 வரையிலும், நவ.17, 2025 - மார்ச் 6, 2026 வரையிலும் அஸ்தமன, வக்கிர காலங்களிலும் நன்மையான பலன் கிடைக்கும். 7 ம் இடத்துச் சனியின் பாதகமான பலன்கள் விலகும். நினைத்ததை சாதித்திடக் கூடிய அளவிற்கு முயற்சி யாவும் இருக்கும். பொன், பொருள் சேர்க்கையுடன் புதிய வாகனம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும் கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில், உங்கள் நிலையில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும். எதிர்பாலினரால் சங்கடங்கள் தோன்றும். உடல் நிலையிலும் பாதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும். ஏப் 26, 2025 முதல் ராகு கும்பத்திலும் கேது உங்கள் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் நிலையில், மனதில் இனம் புரியாத சங்கடங்கள் தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை உருவாகும். எதிர்பாலினரால் குடும்பத்திற்குள் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக நெருக்கடி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இக்காலத்தில் குடும்ப நலனில் அக்கறை கொள்வதும், வாழ்க்கையின் மீதும் தொழிலின் மீதும் கவனம் செலுத்துவதும் சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாவதால் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த ஒவ்வொன்றும் லாபத்தில் முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இக்காலம் உங்களுக்கு யோக காலமாக இருக்கும். மே 1, 2024 - மே 13, 2025 வரையிலும் 10 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடங்கள் அதிகரிக்கும். தொழிலில், உத்தியோகத்தில் நெருக்கடி தோன்றும். பணத்தேவை அதிகரிக்கும். முதலீடுகள் அதிகமாக செய்தும் எதிர்பார்த்த லாபம் உண்டாகாமல் போகும். மே 14, 2025 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் மீண்டும் செல்வாக்கு உயரும். பண வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிரச்னைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய இடம், மனை, பொன் பொருள் என்று வாங்கு நிலை உண்டாகும். இக்காலம் உங்கள் வாழ்க்கையில் செழிப்பான காலமாக இருக்கும்.

பொதுப்பலன்
உங்கள் தனித்தன்மை வெளிப்படும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்த்த வருமானம் வரும். சிலர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாவர். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

தொழில்
தொழிலில் சில சங்கடங்கள் ஏற்படும். கூட்டுத்தொழில் இக்காலத்தில் பிரச்னைகளில் முடியும். புதிய முதலீடுகள் எதிர்பார்த்த லாபத்தை ஏற்படுத்தாமல் போகும். சினிமா, சின்னத்திரை, பேன்சி ஸ்டோர்ஸ், ஜவுளி, கவரிங், நகை, வாகன வியாபாரங்களில் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என நிரூபிக்கப்படும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். தனியார் நிறுவன பணியாளர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வை அடைவர். முதலாளிகளால் மதிக்கப்படுவீர்கள்.

பெண்கள்
குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். அவர்கள் மீதான அக்கறை அதிகரிக்கும். உறவினர்களிடம் உங்கள் செல்வாக்கு உயரும். புதியவர்களிடம் பழகும்போது எச்சரிக்கை அவசியம்.

கல்வி

இக்காலத்தில் மாணவர்களின் கவனம் சிதறுவதற்கு வாய்ப்புண்டு. மனம் அலைபாயும். ஆனால், எதிர்காலத்தைப் பற்றி யோசித்து படிப்பில் கவனம் செலுத்துவதும், ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவதும் தேர்வில் வெற்றியை உண்டாக்கும். மேற்கல்வி எளிதாக இடம் கிடைக்கும்.

உடல்நிலை

உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். அஷ்டம ராகுவும், சப்தம சனியும் போட்டி போட்டு பாதிப்புகளை உண்டாக்குவார்கள் மருத்துவ செலவு அதிகரிக்கும். சிலருக்கு மறைமுக, பரம்பரை நோய்கள் தோன்றி சங்கடப்படுத்தும் என்பதால் இக்காலத்தில் ஒழுக்கம் என்பது மிக அவசியமாகும்.

குடும்பம்
பூர்வீக சொத்துகளில் இருந்த சங்கடங்கள் விலகும். புதிய வாகனம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் நிலை உயரும். அவர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய இடம் வாங்கி விரும்பியபடி வீடு கட்டி குடியேறுவீர்கள். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதால் மனஅமைதி நிலைக்கும்.

பரிகாரம்; நரசிம்மரை வணங்கி வழிபட்டுவர நன்மை அதிகரிக்கும்.
உத்திரம்; நல்ல நேரம் வந்தாச்சு

ஆத்மகாரகன் என்று கூறப்படும் சூரியபகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வித்யா காரகனான புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

உங்கள் நட்சத்திர நாதனுக்கு சனி பகையானவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவராகிறார். உத்திரம் 1ம் பாதத்தினருக்கு சனி சப்தம ஸ்தானத்திலும், 2,3,4ம் பாதத்தினருக்கு 6ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலையும், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையையும், பொருளாதாரத்தில் தடைகளையும், உடல்நலனில் சங்கடங்களையும் வழங்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டகரமான பலன்களை வழங்குவார். இக்காலம் பிரபல யோககாலமாக இருக்கும். பல நன்மைகள் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிர்ப்பு இல்லாமல் போகும். எதிரிகளை அடக்கி வெற்றி பெற முடியும். அபார ஆற்றல் உண்டாகும்.

அதிர்ஷ்ட காலம்
சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 - ஜூன் 19, 2024 வரையிலும், நவ 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும், அஸ்தமன வக்கிர காலங்களிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் நன்மையான பலன்களை வழங்குவார். சங்கடங்கள் விலகும். நெருக்கடிகள் இல்லாமல் போகும். முயற்சி வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு இக்காலம் முழுமையும் யோகத்தை வழங்குவார். நினைத்ததை வெற்றி பெறும் நிலையை உண்டாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். வழக்குகளில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் வாழ்வில் தடுமாற்றம் ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். ஏப் 26, 2025 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில், 1 ம் பாதத்தினருக்கு மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். நட்புகளும் உங்களை விட்டு விலகிச் செல்வர். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு இக்காலம் யோககாலமாக இருக்கும். இதுவரை இருந்த சங்கடங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அந்தஸ்து உயரும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். உடலில் இருந்த பாதிப்புகள் விலகும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை 1 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை 1 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்திலும், மே 14, 2025 முதல் 1 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும் குருபகவான் சஞ்சரிப்பார். 1 ம் பாதத்தினருக்கு ஏப் 30, 2024 வரை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். செல்வாக்கை அதிகரிப்பார். பணம், பதவி, பட்டம் என்ற நிலையுடன் உங்களை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்வார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 1, 2024 - மே 13, 2025 காலத்தில் யோகமான பலன்களை வழங்குவார். அதிர்ஷ்டகரமான நிலையை உருவாக்குவார். சங்கடங்களை எல்லாம் நீக்குவதோடு பொன் பொருள் செல்வாக்கு என்று உங்கள் வாழ்க்கையை வளமாக்குவார். மே 13, 2025 முதல் 1 ம் பாதத்தினருக்கு யோகத்தை அதிகரிப்பார். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். பணவரவை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்.

பொதுப்பலன்
இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் 1ம் பாதத்தினருக்கு குருபகவானின் சஞ்சாரமும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சனிபகவானின் சஞ்சாரமும் மிகப்பெரிய யோகத்தை வழங்கும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். பொருளாதார நிலை உயரும். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் செல்வாக்கு உயரும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் காலமாக இருக்கும்.

தொழில்
தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கூட்டுத் தொழிலில் விலகிப் போன பங்குதாரர்கள் மீண்டும் இணைவார்கள். ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மெடிக்கல், மருத்துவம், பப்ளிகேஷன்ஸ், யூடியூப், சினிமா, விவசாயம், டிரான்ஸ்போர்ட், வழக்கறிஞர், மருத்துவர் தொழில்களில் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்
பணியாளர்களுக்கு இதுவரை இருந்த சங்கடங்கள் விலகும். உங்கள் திறமை இனி மதிக்கப்படும். ஊதிய உயர்வு உண்டாகும். வேலையில் பொறுப்பும் உயரும். வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக தனி மரியாதை ஏற்படும். அரசு ஊழியர்கள் சிலருக்கு விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும்.

பெண்கள்
மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். உடலில் இருந்த சங்கடங்கள் நீங்கும். உறவினர்கள் மதிக்கும் நிலை உண்டாகும். பகைவர்களும் உங்களைத்தேடி வருவார்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். இக்காலத்தில் மனதில் வேறு சிந்தனைகள் வேண்டாம்.

கல்வி
படிப்பில் கவனம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், பொருளியல் துறை மாணவர்கள் வளர்ச்சி காண்பர். எதிர்பார்ப்பு நிறைவேறும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று கல்வி பயில வாய்ப்பு உண்டாகும்.

உடல்நிலை
இதுவரை இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். தொற்று, பரம்பரைநோய் போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். இதுவரை சிகிச்சை பெற்று வந்தவர்கள் இனி நோயின் தன்மையறிந்து சிகிச்சை பெற்று குணமடைவர்.

குடும்பம்
தொடர்ந்து வந்த நெருக்கடியில் இருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். பணத்தட்டுப்பாடு விலகும்.

பரிகாரம்; சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தானம் செய்து தீபமேற்ற நன்மை அதிகரிக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement