Load Image
Advertisement

மீனம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026

பூரட்டாதி; செலவு அதிகரிக்கும்

தனக்காரகன், புத்திரக்காரகன் எனப்படும் குருபகவான் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆயுள், கர்மகாரகனான சனிபகவான் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உங்கள் நட்சத்திர நாதனே ராசிநாதனாகவும் உள்ளனர்.

கோச்சார ரீதியாக சனி பகவான் சஞ்சரிக்கும் காலங்களில் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை அவரவரின் கர்ம வினைகளுக்கேற்ப வழங்கக் கூடியவராகிறார்.
பூரட்டாதி முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாகவும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விரயச் சனியாகவும் சஞ்சரிக்கிறார். இதனால் முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடிகள், தொழில், பணிகளில் பிரச்னைகளும். மனதில் குழப்பம், வாழ்க்கைத்துணையுடன் சங்கடமும் ஏற்படும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருமானத்தில் தடை, வீண் அலைச்சல், மன உளைச்சல், குடும்பத்தில் சண்டை சச்சரவுகளும், எதிரிகளால் இடையூறு, பொருளாதார நெருக்கடி, தவறான வழியில் செல்லும் சூழ்நிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட காலம்
சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான டிச 20, 2023 - பிப் 15, 2024 வரையிலும், சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 - ஜூன் 19, 2024 வரையிலும், நவ, 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிப்பார். எதிர்பார்த்த நன்மைகளை உங்களால் அடைய முடியும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் அமைதியான நிலை ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.

ராகு - கேது பெயர்ச்சி
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2ம் இடத்தில் ராகு, 8ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் பாதிப்பு, வருமானத்தில் குறைபாடு, வீண் அலைச்சல், செயல்களில் தடைகள், பொருளாதார நெருக்கடி, உடல் நிலையில் சங்கடம், எதிர்பாராத விபத்துகள் உண்டாகும். 4 ம் பாதத்தினருக்கு தொழிலில் தடுமாற்றம், பணியில் பிரச்னை, வீண் அலைச்சல், செயல்களில் நெருக்கடி, வீண்பழி, செய்யாத குற்றத்திற்கு அபராதம், பொருள் இழப்பு, குடும்பத்தில் பிரச்னை, நோய்த்தொல்லை அதிகரிக்கும். ஏப்.26, 2025 க்கு பிறகு 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும் சஞ்சரிப்பதால் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பம், தொழில், பணி போன்றவற்றில் பிரச்னைகள் ஏற்படும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 12ல் ராகுவும், 6ல் கேதுவும் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். அதே சமயத்தில் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடலில் இருந்த சங்கடம் விலகும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.

குரு சஞ்சாரம்
பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 30, 2024 வரை 3ம் ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை 4ம் ஸ்தானத்திலும், மே 14, 2025 முதல் 5ம் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குரு பகவான், மே 13 வரை எதிர்மறையான பலன்களையே வழங்குவார். முயற்சிகள் இழுபறியாவதுடன் வருமானத்திலும் தடையுண்டாகும். மே 14, 2025 க்கு பிறகு நிலைமை சீராகும். முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, 2ம் இட குருவால் ஏப்.30, 2024 வரை நன்மைகள் அதிகரிக்கும். வருமானம் உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அதன்பின் 3, 4 ம் இடங்களில் சஞ்சரிக்கும் குருவால் உங்களுக்கு நன்மைகளை வழங்க முடியாமல் போகும். நெருக்கடியான நிலை உண்டாகும்.

பொதுப்பலன்
இக்காலத்தில் செயல்களில் நிதானம் அவசியம். முயற்சி இழுபறியாகும். உடல்நலனில் பின்னடைவு உண்டாகும். செலவு அதிகரிக்கும். குடும்பத்திலும் சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்படும். வரவேண்டிய பணம் வருவதற்கு தாமதமாகும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் மனம் குழப்பமடையும். வீண் செலவு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் ஏற்பட்டு உங்களை சங்கடப்படுத்தும்.

தொழில்
தொழிலில் உழைப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட முயற்சிகள் லாபமாகும். விற்பனையில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஊழியர்களை நம்பி எந்தவொரு பொறுப்பையும் இக்காலத்தில் ஒப்படைக்க வேண்டாம். அதனால் எதிர்மறையான பலன்களே உண்டாகும். எல்லாவற்றிலும் உங்கள் நேரடி கண்காணிப்பு இக்காலத்தில் அவசியம்.

பணியாளர்கள்
தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அலைச்சலும் வேலையில் சங்கடங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் போகும். அரசு துறையில் பணியாற்றுபவர்கள் இக்காலத்தில் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரும்.

பெண்கள்
இக்காலத்தில் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்வதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வேலைப்பளுவிற்கு ஆளாக நேரும். இருந்தாலும் எதிர்பார்த்த வருமானம் இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் படிப்பிற்காக, வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வர்.

கல்வி
படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஆசிரியர்கள் அறிவுரைகளை பின்பற்றுவது நன்மையளிக்கும். விடாமுயற்சி மட்டுமே நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பொதுத் தேர்வில் வழங்கும் என்பதால் மற்ற செயல்களில் கவனம் செலுத்தாமல் படிப்பது மிக அவசியம்.

உடல்நிலை
திடீர் திடீரென உடலில் சங்கடம் தோன்றும். இதுநாள் வரை மறைந்திருந்த நோய்கள் இப்பொழுது தலைகாட்டும். சிலர் விபத்துகளிலும் சிக்க நேரும் என்பதால் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். நோயின் தாக்கம் ஆரம்பிக்கும் போதே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நலம் அளிக்கும்.

குடும்பம்
குடும்பத்தில் ஒரு நேரம் இருப்பதுபோல் மறு நேரம் நிம்மதி இல்லாமல் போகும். எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். தம்பதியர் இடையே சச்சரவு ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதால் நிம்மதி உண்டாகும். ஆடம்பர செலவு, வீண் பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களை இக்காலத்தில் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.

பரிகாரம்; பைரவர், வராகி வழிபாடு செய்வதுடன் உணவு, உடை தானம் செய்வதால் நன்மை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி; வெளிநாடு செல்வீர்கள்

ஆயுள்காரகன், கர்மகாரகன் எனக் கூறப்படும் சனிபகவான். புத்திர காரகனான குருபகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு டிச.20, 2023 முதல் உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் விரய சனியாக சஞ்சரிக்கப் போகிறார் சனிபகவான். உங்கள் நட்சத்திரநாதனான சனி உங்கள் ராசிநாதனுக்கு நட்பானவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப வழங்க வேண்டியவராகிறார்.

இதுவரை 11ம் இடத்தில் சஞ்சரித்து பல நன்மைகளையும், தொழிலில் சிறப்பான நிலையையும், வருமானத்தையும் வழங்கி வந்திருப்பார். வீட்டில் மகிழ்ச்சி, ஆனந்தத்தை ஏற்படுத்தி இருப்பார். பொன், பொருள் சேர்க்கையை உண்டாக்கி இருப்பார். இப்போது 12ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது முன்பு போல் அவரால் நன்மை வழங்க முடியாது. அதற்கு காரணம் இக்காலம் உங்களுக்கு ஏழரை சனியின் தொடக்க காலம். அவருடைய பார்வைக்குள் இப்போது நீங்கள் வந்துள்ளீர்கள். இந்த நிலையில் 12ம் இடத்து சனியால் பொருளாதாரத்தில் பிரச்னை. வீண் அலைச்சல், எதிரிகளால் இடையூறு, வீண் செலவு, உடல்நிலையில் சங்கடம், உறவுகளிடம் பகை என்ற நிலை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட காலம்
சதயம் நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 - ஜூன் 19, 2024 வரையிலும், நவ. 4, 2024 - பிப். 27, 2025 வரையிலும், பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலமான மார்ச் 29, 2025 - ஜூலை 2, 2025 வரையிலும், நவ.17, 2025 - மார்ச் 6, 2026 வரையிலும் அஸ்தமனம் மற்றும் வக்கிர நிலைகளாலும் விரய சனியின் பாதிப்புகளில் இருந்து உங்களுக்கு விடுதலை உண்டாகும். வழக்கமான முயற்சிகள் எந்தவிதமான தடைகள் இல்லாமல் நிறைவேறும். திட்டமிட்ட செயல்களில் லாபம் உண்டாகும். பிரச்னைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி ஏற்படும். பணியில் இருந்த நெருக்கடி தீரும். நீங்களே எதிர்பார்க்காத அதிர்ஷ்ட பலன்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு உங்கள் ராசிக்குள்ளும், கேது 7ம் இடத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். வீண் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், உத்தியோகத்தில் நெருக்கடி தோன்றும். சிலருக்கு வீண் பழியும், செய்யாத குற்றங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையும் ஏற்படும். குடும்பத்தில் சங்கடம், பிரச்னை, வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு, உடல்நிலையில் பாதிப்பு என்று எதிர்மறையான பலன்களே உண்டாகும். ஏப்.26, 2025 முதல் ராகு 12ம் இடத்திலும், கேது 6ம் இடத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். ஆரோக்கியமாக செயல்படுவீர்கள். முயற்சிகளில் லாபம் உண்டாகும். தொழில், பணியில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி உண்டாகும். புதிய பதவி, பொறுப்புகள் வந்து சேரும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை 2ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். பணவரவை அதிகரிப்பார். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை விலக்கி வைப்பார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையை உண்டாக்குவார். பொன் பொருள் சேர்க்கை அமையும். பணியில் உங்கள் நிலையை உயர்த்துவார். தொழிலில் இருந்த பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். மே 1, 2024க்கு பிறகு, 3ம் இடத்திலும், 4ம் இடத்திலும் சஞ்சரிக்கும் குருபகவான், எதிர்பாராத நெருக்கடிகளை ஏற்படுத்துவார். ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். உங்களைச் சுற்றி இருந்தவர்கள் எதிராக செயல்படுவர்.

பொதுப்பலன்
குடும்பத்தில் எதிர்பாராத செலவு தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். வேலைகளில் டென்ஷன் உண்டாகும். சிலருக்கு மேற்படிப்பிற்காகவும், வேலைக்காகவும் வெளிநாட்டிற்கு செல்லும் சூழ்நிலை உண்டாகும். புதிய நட்புகளால் தேவையற்ற பிரச்னைகள் தோன்றும். வீண் பழிகளும், குடும்பத்தில் குழப்பமும் தோன்றும். வியாபாரம், தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் முன் ஒருமுறை யோசிப்பது நல்லது. புதியவர்களை நம்பி எந்தவித முயற்சியிலும் ஈடுபடக்கூடாது. சரி என்று உங்களுக்கு தோன்றுகின்ற விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

தொழில்
இக்காலத்தில் செய்து வரும் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாக இருக்கும். புதிய முயற்சிகள் மேற்கொள்வதற்கு முன்பாக மார்க்கெட் நிலவரத்தை புரிந்து கொண்டு செயல்படுவதால் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். உங்ஙள் அறிவாற்றல் இக்காலத்தில் லாபத்தை ஏற்படுத்தும். பங்கு வர்த்தகம், பைனான்ஸ், ஹார்டுவேர்ஸ், நகை வியாபாரம், ரியல் எஸ்டேட், பதிப்பகம், கல்விக்கூடங்கள் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும். லாபத்தை உண்டாக்கும்

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உங்கள் வேலைகளை ஒட்டி வெளியூர் பயணம் உண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்புகளும் வந்து சேரும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டாகும். அரசு துறையினர் மேலதிகாரிகளின் பாராட்டுக்கு ஆளாவீர்கள். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். பணியில் நேர்மையாக இருப்பதும், விழிப்புணர்வும் இக்காலத்தில் அவசியம்.

பெண்கள்
குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு வேலை அமையும். சிலருக்கு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நீண்டகாலம் நட்பாக பழகியவர்கள் உங்களை விட்டு விலகுவர். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்வீர்கள். பொன் பொருள் சேரும். புதிய நட்புகளால் சில சங்கடம், அவப் பெயருக்கு ஆளாக நேரும் என்பதால் யாரிடமும் நெருக்கமாக பழக வேண்டாம்.

கல்வி
இக்காலத்தில் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம். ஆசிரியர்களின் ஆலோசனை உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். எதிர்கால நலனை மனதில் நினைத்து பொதுத்தேர்வை விழிப்புணர்வுடன் எதிர்கொள்வது வாழ்க்கையை மேம்படுத்தும்.

உடல்நிலை
பரம்பரை நோய், தொற்று நோய் போன்றவற்றால் இக்காலத்தில் சங்கடங்கள் தோன்றும். பருவ நோய்களால் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உடல் அடிக்கடி சோர்வடையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். என்றாலும், நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

குடும்பம்
ஜென்ம ராகு, 7ம் இட கேது, விரயச்சனி என்ற நிலையில் குடும்பத்தில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். நட்புகளால் குடும்பத்திற்குள் பிரச்னை உண்டாகும். மனதில் இனம் புரியாத சங்கடம் பயம் தோன்றும். புதிய முயற்சிகள் இழுபறியாகும். அதே நேரத்தில் செலவிற்கேற்ப வருமானம் வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். வருமானத்திற்காக வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும்.

பரிகாரம்; சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தானம் செய்வதும் சூரியனை வழிபடுவதும் நன்மையளிக்கும்.
ரேவதி; வீண்செலவு அதிகரிக்கும்

கல்விக்காரகன் எனப்படும் புதபகவான். புத்திர காரகனான குருபகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, டிச.20, 2023 முதல் உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார் சனிபகவான்.
அவரவரின் கர்ம வினைக்கேற்ப பலன்களை வழங்கக் கூடியவர் சனிபகவான். நட்பாக இருந்தாலும் பகையாக இருந்தாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை வழங்கக் கூடிய நியாயம் தவறாத நீதிபதி அவர்.

விரய ஸ்தானம் என்னும் 12ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் போது ஏழரை சனியின் தொடக்கம் ஆரம்பமாகிறது என்பதால் இக்காலத்தில் பணியில் தேக்கமும், வருமானத்தில் குறைபாடும் உண்டாகும். பொருள் விரயமாகும். வீண் அலைச்சல், மன உளைச்சல் ஏற்படும். மதிப்பிற்கும் கவுரவத்திற்கும் பங்கம் உண்டாகும். எதிரிகளால் சங்கடம், தீய வழியில் செல்லக்கூடிய சந்தர்ப்பம் உண்டாகும்.
வீண்செலவு அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும் என்பது பொதுவிதி என்றாலும், மற்ற கிரகங்களின் சஞ்சாரங்களும், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, நடைபெறும் திசா புத்திக்கேற்ப பலன் அமையும்.

20.12.2023 - 6.3.2026 சனி சஞ்சாரத்தில் அதிர்ஷ்ட காலம்
சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான டிச.20, 2023 - பிப்.15, 2024 வரையிலும், பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 29, 2025 - ஜூலை 2, 2025. மற்றும் நவ.17, 2025 - மார்ச் 6, 2026 வரையிலும், சனி அஸ்தமனம் வக்கிர காலங்களிலும் விரய சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். முயற்சிகள் யாவும் லாபமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். இதற்கு முன்பிருந்த சங்கடங்கள் முடிவிற்கு வரும். தடைப்பட்ட முயற்சிகள் முடிவிற்கு வரும். பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். பணியின் காரணமாக வெளியூரில் வாழும் நிலை ஏற்படும். புதிய பொறுப்பு, பதவிகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப்.26, 2025 வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் அலைச்சலை அதிகரிப்பார்கள். பிரச்னைகளில் சிக்க வைப்பர். அதே நேரத்தில் யோகப் பலன்களை வழங்குவர். சட்டரீதியான பிரச்னைகளையும் ஏற்படுத்துவர். தீயவரோடு சேர வைப்பர். வாழ்க்கைத் துணையோடு பிரச்னைகளையும், நண்பர்களுக்குள் கருத்து வேறுபாட்டையும், கூட்டுத்தொழிலில் சங்கடத்தையும், மனதில் பயத்தையும் உண்டாக்குவர். ஏப்.26, 2025 முதல் விரய ஸ்தானத்தில் சனி பகவானுடன் ராகு சஞ்சரித்தாலும், 6ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் கேது முன்னேற்றம் தருவார். உடலில் இருந்த சங்கடம், மனதில் இருந்த பயத்தை அகற்றுவார். ஆரோக்கியம் சீராகும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை விலகும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வழக்குகளில் ஏற்பட்ட சங்கடங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். தனித்திறமை வெளிப்படும். முயற்சிகள் வெற்றி அடையும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை குடும்ப ஸ்தானமான 2ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் சங்கடங்களை விலக்கி வைப்பார். பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்ப்பு நீங்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றி பெறும். உடல்நிலை சீராகும். மே1, 2024 க்கு பிறகு குரு பகவானின் சஞ்சாரம் 3, 4 ம் இடத்திற்கு வருவதால் அதன் பிறகு எதிர்பார்ப்பு இழுபறியாகும். நன்றாகப் பழகியவர்களும் உங்களை விட்டு விலகிச் செல்வர். உடல், மன நிலையில் பாதிப்பு உண்டாகும். உறவுகளுடன் பிரச்னைகள் தோன்றும்.

பொதுப்பலன்
விரய சனியின் காலம் என்றாலும் ஏப்.30, 2024 வரை 2ம் இட குருவும், ஏப்..26, 2025க்கு பிறகு 6ம் இட கேதுவும் நன்மைகளை அதிகரிப்பர். விரயச்சனியின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பார்கள். முயற்சிகள் வெற்றியாகும். நெருக்கடி விலகும். பணவரவில் இருந்த தடை நீங்கும். குடும்ப குழப்பம் தீரும், வழக்கு விவகாரங்களில் சாதகம் ஏற்படும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். தொலைந்து போன பொருள் கிடைக்கும். உங்கள் மதிப்பு உயரும்.

தொழில்
தொழிலில் அக்கறை அதிகரிக்கும். கடந்த கால அனுபவத்தைக் கொண்டு தொழிலில் வெற்றியடைவீர்கள். பண முதலீட்டில் லாபம் கிடைக்கும். சிலர் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுவர். உங்கள் புத்திசாலித்தனம் லாபத்தை ஏற்படுத்தும்.

பணியாளர்கள்
எந்த நிலையிலும் மற்றவரை அனுசரித்துச் செல்லும் உங்களுக்கு நன்மை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். முதலாளி திறமைக்கு மதிப்பு கொடுப்பார். அரசு பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
சாதுர்யமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு யாவும் நன்மையாகும். வாழ்க்கைத் துணையின் எண்ணத்தை ஏற்று செயல்படுவீர்கள். புதிய நட்புகளை அங்கீகரிப்பீர்கள். பணியில் கவனம் செலுத்தினால் அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். தனியார் நிறுவத்தின் எதிர்பார்ப்பு நிறைவேறும். சுயதொழில் செய்பவர்கள் தொழிலை விரிவு செய்து லாபம் அடைவர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எந்த ஒன்றையும் சமாளித்து வெற்றி பெறும் சக்தி ஏற்படும்.

கல்வி
தேவையற்ற சிந்தனைகள் தோன்றும். படிப்பில் கவனம் சிதறும் என்பதால் எதிர்காலத்தை மனதில் வைத்து ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று படிப்பில் கவனம் செலுத்தினால் பொதுத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

உடல்நிலை
பரம்பரை, பருவ நோய்களால் எதிர்பாராத பாதிப்பு உண்டாகும். ஏழரை சனியின் காலம் என்பதால் ஏதாகிலும் ஒரு கோளாறு உடலில் இருந்து கொண்டே இருக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். இந்த நேரத்தில் சிறிய பிரச்னைகள் தோன்றினாலும் உடனடியாக மருத்துவம் செய்வது நல்லது.

குடும்பம்
குடும்பத்தின் மீது அக்கறை கொண்டிருக்கும் நீங்கள், 2024 ஏப்.30 வரை 2ம் இட குருவால் குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலர் புதிய வீட்டிற்கு குடியேறுவர். இருந்தாலும் இக்காலத்தில் தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பதும், பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவதும், நேர்மையான வழியில் செல்வதும் குடும்பத்தில் நன்மையை அதிகரிக்கும்.

பரிகாரம்; திருவெண்காடு புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், திருநள்ளாறு சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தானம் அளிப்பதும் நன்மை தரும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement