Load Image
Advertisement

கும்பம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024

அவிட்டம்; செயல்களில் நெருக்கடி

செவ்வாய் பகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு மகரமும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கும்பமும் ராசிகளாகவும். சனி பகவானே ராசிநாதனாகவும் உள்ளார்.

பிறக்கும் ஆண்டான 2024ல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் குழப்பம், வருமானத்தில் நெருக்கடி, முயற்சியில் இழுபறி, வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, உடல் நிலையில் சங்கடம் என சிரமங்கள் ஏற்பட்டாலும் 3ம் இட ராகுவால் இந்த நிலைகளில் மாற்றம் உண்டாகும். முயற்சி யாவும் வெற்றியாகும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல் நலனில் பாதிப்பு, உறவினரால் சங்கடம், வெளியூரில் வசிக்கும் நிலை, தேவையற்ற சங்கடம், நண்பர்களை விலகிச் செல்லும் நிலை, பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை. வருமானத்தில் தடை, குடும்பத்திலும், பணத்திலும் நெருக்கடி, விபத்து, விரயம் என நெருக்கடிகள் உண்டாகும்.

சனி சஞ்சாரம்
மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும் நவ. 4 - ஜன. 31 வரையிலும் தாரா பலன்களாலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் சங்கடங்களில் இருந்து உங்களுக்கு விடுதலை வழங்குவார் சனிபகவான். இக்காலத்தில் நினைத்ததை எல்லாம் நடத்திக்கொள்வீர்கள். குடும்பம், தொழில், பணிகளில் நன்மை அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடை விலகும். உடல்நிலை சீராகும்.

ராகு - கேது சஞ்சாரம்
2024 ம் ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் சக்தியுண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்ப்பு எல்லாம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் வீண் பிரச்னைகள் அதிகரிக்கும். தொழிலில் சங்கடம் உண்டாகும்.

குரு சஞ்சாரம்
அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஏப்.30 வரை சுக ஸ்தானத்திலும், மே 1 முதல் பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருபகவான், மே1 முதல் உங்கள் வாழ்வில் முன்னேற்றம், தொழிலில் வளர்ச்சி, வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்குவார். பணியில் இருந்த பிரச்னைகளை விலக்கி வைப்பார். எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொன், பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குரு பகவானால் நன்மை வழங்க இயலாது. ஆனால் அவர் பார்க்கும் இடங்களின் வழியே நன்மை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.

சூரிய சஞ்சாரம்
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 14 - ஏப். 13, ஜூன் 15 - ஜூலை 16 வரையிலும், மற்றும் அக்.18 - டிச.15 வரையிலும், 3,4 ல் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 - மே13, ஜூலை 17 - ஆக.16 வரையிலும் நவ.16 - டிச.31 வரையிலும் சூரியன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் வாழ்வில் இருந்த நெருக்கடிகளை நீக்கி வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகளை வழங்குவார். வழக்குகளில் இருந்து உங்களை விடுவிப்பார். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடத்தை அகற்றி வைப்பார். எதிரிகளை விரட்டி வைப்பார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார் சமுதாயத்தில் தனி அந்தஸ்தை ஏற்படுத்துவார்.

பொதுப்பலன்
அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு - கேது, குருவின் சஞ்சாரம் இக்காலத்தில் சாதகமான நிலையில் இருப்பதால் நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளை அடைவீர்கள். செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனியும், ராகு கேதுக்களின் சஞ்சாரமும் எதிர்மறை பலன்களையே ஏற்படுத்தும். இக்காலத்தில் செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் கவனமுடன் ஈடுபட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி புதிய செயல்களில் இறங்க வேண்டாம். வாகன இயக்கத்திலும், இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம்.

தொழில்
அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழிலிலும் போட்டி அதிகரிக்கும்.

பணியாளர்கள்
முதல் 2 பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றமான பலன் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு செல்வாக்கு உயரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வேலையில் சங்கடமான நிலை ஏற்படும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

பெண்கள்
முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்வில், தொழிலில், பணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வேலைக்காக காத்திருந்தவர்களின் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பணியில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு செயல்களில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், உடல் நலனில் கவனம் செலுத்துவதும் மிக அவசியம். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடி தோன்றும் என்பதால் வேலைகளில் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.

கல்வி
முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்று தேர்வில் வெற்றி அடைவீர்கள். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சங்கடம் நெருக்கடி உண்டாகும் என்பதால் படிப்பில் கவனம் சிதறும்.

உடல்நிலை
1,2 ம் பாதத்தினருக்கு உடலில் இருந்த சங்கடம் மருத்துவத்தால் விலக ஆரம்பிக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பரம்பரை நோய், தொற்று நோய் என்பதுடன் வாகன பயணத்தால் சங்கடம், விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படும்.

குடும்பம்
முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். வேலையில் பதவி உயர்வு ஏற்படும். பொருளாதார நிலை உயரும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பணவரவில் தடை உண்டாகும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை.

பரிகாரம்
நவக்கிரக வழிபாடு நன்மை தரும். சங்கடத்தில் இருந்து விடுவிக்கும்.
சதயம்; எச்சரிக்கை அவசியம்

ராகு, சனி பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 எத்தகைய பலன்களை வழங்கப் போகிறது?
ஜென்ம ராசிக்குள் சனி, குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது, தைரிய ஸ்தானத்தில் குரு என பிரதான கிரகங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு உங்களுக்கு எதிர்மறையாக சஞ்சரிக்கின்றனர் இந்த ஆண்டில்.

இத்தகைய நிலையில் ஆரோக்கியத்தில் சங்கடம் ஏற்படும். செயல்பட முடியாத அளவிற்கு நெருக்கடி தோன்றும். வருமானத்தில் தடை உண்டாகும். கூட்டாளிகள் பிரிந்து சென்று தனித்து செயல்படுவர். மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். அளவிற்கு மீறிய சங்கடம் தோன்றும். நண்பர்கள், உறவினர்கள் எதிரியாக மாறுவர். குடும்பத்திலும் நிம்மதி இருக்காது, செவ்வாய், சூரியனின் சஞ்சார நிலை, சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்துள்ள நிலை, நடைபெறும் திசா புத்தியும் இந்த சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.

சனி சஞ்சாரம்
ஜன.1 - பிப்.15 வரையிலும் தாரா பலனாலும், அஸ்தமன, வக்கிர காலங்களிலும் ஜென்ம சனியால் உண்டாகும் பலன் மாறுபடும். முயற்சிகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் நன்மை அதிகரிக்கும். செயல்களில் ஆதாயம் ஏற்படும். நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்.

ராகு - கேது சஞ்சாரம்
தன, குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு எதிர்பாராத சங்கடம் ஏற்படும். வீண் பிரச்சினைகளால் நெருக்கடி அதிகரிக்கும். அந்நியரால் சில சிக்கல்களுக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். பொருளாதார நிலை என்பது கேள்விக்குறியாகும். வழக்குகளில் எதிர்மறையான பலன்கள் ஏற்படும். ஆசை காரணமாக குறுக்கு வழியில் செல்வதால் வழக்குகளில் சிக்கும் நிலை சிலருக்கு ஏற்படும்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை 3ம் இடத்திலும், மே 1 முதல் சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்களுக்கு பாதக பலன்களை வழங்குவார். சங்கடம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். உங்கள் புத்திசாலித்தனம் இக்காலத்தில் பயன்படாமல் போகும். பிறருக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையும், உடலிலும் மனதிலும் சங்கடங்களும் உண்டாகும் என்றாலும் குருவின் பார்வை பலனால் எல்லாவற்றையும் சமாளிக்கும் அளவிற்கு பொருளாதாரநிலை உயரும், பெரியோரின் ஆதரவு கிடைக்கும், நண்பர்கள், வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும்.

சூரிய சஞ்சாரம்
ஏப்.14 - மே 13, ஜூலை 17 - ஆக.16 வரையிலும் நவ. 16 - டிச. 31 வரையிலும் சூரியன் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். எல்லாவற்றையும் சமாளித்திடக் கூடிய சக்தி உண்டாகும். எண்ணங்கள் நிறைவேறும். அரசு வழியிலான செயல்களில் ஆதாயம் வரும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உடல் நிலை மேம்படும். எதிரி தொல்லை விலகும். செல்வாக்கு உயரும்.

பொதுப்பலன்
ஜென்ம சனியும், ராகு, கேது, குருவின் சஞ்சார நிலை சாதகமாக இல்லை என்பதால் செயல்களில் கவனம் அவசியம். மற்றவர்களின் ஆலோசனைகளை யோசித்து முடிவிற்கு வருவது நன்மை தரும். புதிய ஒப்பந்தங்கள் இக்காலத்தில் வேண்டாம். பத்திரங்களில் கையெழுத்திடும் போது விழிப்புடன் இருக்கவும். குறுக்கு வழியில் செல்பவர்களுக்கு நெருக்கடி தோன்றும். அறிமுகமில்லாத நபர்களை நம்பி செயல்பட வேண்டாம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும்.

தொழில்
தொழிலில் எதிர்பாராத தடை உண்டாகும். புதிய முயற்சி பலன் தராமல் சங்கடத்தை ஏற்படுத்தும். இக்காலத்தில் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைப்பது நல்லது.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போகும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். பணியில் முழு கவனம் இருந்தால் மட்டுமே வேலையை உங்களால் தக்க வைக்க முடியும். பணியாளர்களிடம் மேலதிகாரிகள் கண்டிப்பாக நடந்து கொள்வர். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பர்.

பெண்கள்
குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் நன்மை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். வயிறு, கர்ப்பப்பை போன்றவற்றில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் உடல்நலனில் கவனம் தேவை. பயணத்திலும் எச்சரிக்கை அவசியம். சுயதொழில் புரிபவர்கள் வரவு செலவில் கவனமுடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை இக்காலத்தில் ஒத்தி வைப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் அனுசரிப்பதன் மூலம் பிரச்னை தோன்றாமல் போகும்.

கல்வி
ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்பட வேண்டிய காலமிது. படிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவதால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும்.

உடல்நிலை
பரம்பரை நோய்கள் மீண்டும் தலைதுாக்கும். தொற்று நோய்களும் சங்கடத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத விபத்துகளால் மருத்துவச் செலவு ஏற்படும். உடல்நலனில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

குடும்பம்
ஜென்ம சனி, 2ம் இட ராகு, 8ம் இட கேது, 3,4ல் குரு போன்ற சஞ்சார நிலைகளால் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தில் சங்கடம் தோன்றும். உறவுகளிடம் பகை உண்டாகும். தம்பதியரிடம் பிரச்னைகள் தலைதுாக்கும். சிலர் வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். தொழில், பணியில் எந்த செயலையும் சரிவர நடத்திக் கொள்ள முடியாமல் போகும். நிதானம் என்பது மிக அவசியம். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பதுடன் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் மனதைரியம் உண்டாகும்.

பரிகாரம்; காளஹஸ்தியில் ராகு, கேதுவிற்கு பரிகாரம் செய்து வழிபட சங்கடங்கள் குறையும்.
பூரட்டாதி; நெருக்கடி அதிகரிக்கும்

குரு பகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உங்கள் நட்சத்திரநாதனே ராசி நாதனாகவும் உள்ளனர்.

பிறக்கும் 2024 ல் பூரட்டாதி முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் ஜென்ம ராசியிலும், ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும், குரு 3ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர். இதனால் முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி, தொழில், பணியில் பிரச்னை, மனதில் குழப்பம். வாழ்க்கைத்துணையுடன் சங்கடம் ஏற்படும்.
4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 12ம் இடத்தில் சனியும், ஜென்ம ராசியில் ராகுவும், 7ம் இடத்தில் கேதுவும், தன ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிக்கின்றனர். வருமானத்தில் தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சண்டை, சச்சரவுகள் எதிரிகளால் இடையூறு என்ற நிலைகள் மாறும். பணஆசை அதிகரிக்கும், அதன் காரணமாக தவறான வழியில் செல்லக்கூடிய சூழலும் ஏற்படும்.

சனி சஞ்சாரம்
ஜன 1 - பிப்.15 வரையிலும், மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ. 4 - டிச. 31 வரையிலும் தாரா பலனகளாலும், அஸ்தமன, வக்கிர காலங்களிலும் சங்கடங்களில் இருந்து சனிபகவான் உங்களை விடுவிப்பார். எதிர்பார்த்த நன்மை உங்களால் அடைய முடியும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். வருமானத்தில் தடைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.

ராகு, கேது பெயர்ச்சி
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2ம் இடத்தில் ராகு, 8ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால், குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் பாதிப்பு, வருமானத்தில் குறைபாடு, வீண் அலைச்சல், செயல்களில் தடைகள், பொருளாதார நெருக்கடி, உடல்நிலையில் சங்கடம், எதிர்பாராத விபத்து என்று உண்டாகும். 4ம் பாதத்தினருக்கு தொழிலில் தடுமாற்றம், பணியில் பிரச்னை, வீண் அலைச்சல், செயல்களில் நெருக்கடி, வீண்பழி, செய்யாத குற்றத்திற்கு அபராதம், பொருள் இழப்பு, குடும்பத்தில் பிரச்னை, நோயால் தொல்லை அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை தைரிய ஸ்தானத்திலும், மே 1 முதல் சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருபகவான் எதிர்மறை பலன்களை வழங்குவார். முயற்சிகள் இழுபறியாவதுடன் வருமானத்தில் தடையுண்டாகும் என்றாலும் தன் பார்வைகளின் வழியே வளத்தை வழங்குவார், நலத்தை உண்டாக்குவார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2ம் இட குருவால் ஏப்.30 வரை நன்மை அதிகரிக்கும். வருமானம் உயரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அதன்பின் 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் நன்மைகளை வழங்க முடியாமல் போகும். நெருக்கடி நிலை உண்டாகும் என்றாலும் தன் பார்வைகளால் வாழ்க்கையை வளமாக்குவார்.

சூரிய சஞ்சாரம்
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 - மே 13, ஜூலை 17 - ஆக.16, நவ.16 - டிச.31 வரையிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன.15 - பிப்.12, மே 14 - ஜூன் 14, ஆக.17 - செப்.16, டிச. 16 - 31 வரையிலும் சூரியன் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் மற்ற கிரகங்களால் ஏற்படும் சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பணவரவில் இருந்த தடைகளை விலக்குவார். உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தொழில், வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்குவார். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளில் இருந்து விடுவிப்பார். வழக்குகளில் சாதகமான நிலையை உண்டாக்குவார். லாபத்தை அதிகரிப்பார்.

பொதுப்பலன்
பிரதான கிரகங்கள் சாதகமான பலன்களை வழங்க முடியாத நிலையில் சஞ்சரிக்கும் செயல்களில் நிதானம் அவசியம். முயற்சி இழுபறியாகும். ஆரோக்கியத்தில் பின்னடைவு உண்டாகும். அதற்காக செலவு அதிகரிக்கும். குடும்பத்திலும் பிரச்னைகள் ஏற்படும். வர வேண்டிய பணம் வருவதற்கு தாமதமாகும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் மனம் குழப்பமடையும். வீண்செலவு அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் ஏற்பட்டு உங்களை சங்கடப்படுத்தும்.

தொழில்
தொழிலில் உழைப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட முயற்சிகள் லாபமாகும். விற்பனையில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஊழியர்களை நம்பி எந்தவொரு பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

பணியாளர்கள்
தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அலைச்சலும் வேலையில் சங்கடம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் போகும். அரசுத்துறையில் பணியாற்றுபவர்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரும்.

பெண்கள்
வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்வதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வேலை பளுவிற்கு ஆளாக நேரும். இருந்தாலும் எதிர்பார்த்த வருமானம் இருக்கும். சிலர், படிப்பிற்காக, வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வர்.

கல்வி
படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் அறிவுரை இக்காலத்தில் உங்களுக்கு அவசியம்.

உடல்நிலை
திடீர் திடீரென உடலில் சங்கடம் தோன்றும். இதுநாள்வரை மறைந்திருந்த நோய்கள் இப்பொழுது தலைக்காட்டும். சிலர் விபத்துகளிலும் சிக்க நேரும் என்பதால் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

குடும்பம்
குடும்பத்தில் ஒரு நேரம் இருப்பதுபோல் மறு நேரம் நிம்மதி இல்லாமல் போகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். தம்பதியருக்குள் சண்டை ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதால் நிம்மதி உண்டாகும். ஆடம்பர செலவு, வீண் பயணத்தை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். உறவினர்கள் உங்களுக்கு எதிராவர் என்பதால் அவர்களிடம் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சிகளில் யோசித்து செயல்படுவது நல்லது.

பரிகாரம்; குலதெய்வத்தை வணங்கி வழிபட்டு வருவதுடன் உணவு, உடை தானம் செய்ய நன்மை அதிகரிக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement