Load Image
Advertisement

விநாயகர் புராணம் பகுதி-2

எமகிங்கரர்கள் அவனை எமதர்மராஜா முன்பு நிறுத்தினர். ராஜாதி ராஜா! இந்த மனிதன், பூலோகத்தில் செய்யாத அட்டூழியமே இல்லை. பல பெண்களின் கற்பை சூறையாடிய கயவன் இவன். இவனுக்கு என்ன தண்டனை வேண்டுமானா<<லும் கொடுக்கலாம். எனக்குத் தெரிந்து இவனால் பாதிக்கப்பட்டு இங்கே வந்து சேர்ந்த பெண்களைக் கொண்டே எண்ணெய் பானைக்குள் தூக்கிப் போட்டு கொதிக்க வைக்கலாம், என்றான் கிங்கரர் தளபதி. எமதர்மன் சிரித்தான். தளபதி! உயிர்கள் செய்யும் கொடுமைகளை மட்டுமல்ல! நன்மையையும் கருத்தில் கொண்டே தண்டனை நிர்ணயிக்கப்பட வேண்டும். இவன் தன் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம் கூட செய்யவில்லையா? என்றதும், காமந்தன் எமதர்மனின் கால்களில் விழுந்து பணிந்தான். ஐயனே! நான் கொடும்பாவி. நீங்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்கிறேன். ஆனால், கடைசி நேரத்தில் மனம் திருந்தி, அந்தணர்களுக்கு தானதர்மம் செய்ய எண்ணினேன். ஆனால், கொடியவனான என்னிடம் தானம் பெற்றாலே பாவம் என அந்தணர்கள் சொல்லிவிட்டனர். எனவே, ஒரு தபஸ்வியின் அறிவுரைப்படி, விநாயகப்பெருமானுக்கு கோயில் எழுப்பினேன். இது மட்டுமே, நான் பூலோகத்தில் செய்த நல்ல காரியம், என்றான். காமந்தா! தவறுகளை ஒப்புக்கொள்பவனாயினும், திருந்துபவனாயினும், தெய்வத்திற்குரிய அன்றாடக் கடமைகளை செய்தவனாயினும், வேறு ஏதோ தவறு செய்திருந்தால் மன்னிப்பு உண்டு. ஆனால், பெண்களைக் கொடுமை செய்பவனுக்கு மன்னிப்பும் கிடையாது. விமோசனமும் கிடையாது. இப்போது முடிவை உன் பொறுப்பிலேயே விடுகிறேன். நீ கடைசி நேரத்தில் மனம் திருந்தி, கையிலுள்ள பொருளை விநாயகருக்காக செலவிட்டாய். இங்கே தண்டனை முடிந்த பிறகு, நீ பூலோகத்தில் மீண்டும் பிறப்பாய். அங்கு சென்றதும், விநாயகர்கோயிலை கட்டியதற்குரிய நற்பலனை அனுபவிப்பாய். அந்த பலனை இளமையில் அனுபவிக்கிறாயா அல்லது முதுமையில் அனுபவிக்கப் போகிறாயா? என்றான். காமந்தன் எமதர்மனிடம், மகாபிரபு! இளமையில் இன்பங்களை ஏற்கிறேன், என்றான். சரி.. உன் இஷ்டப்படியே ஆகட்டும். ஒருவன் ஒரு பிறவியில் செய்த பாவம், நரகத்தில் துன்பங்களை அனுபவித்த பிறகும், பூலோகத்திலும் மீண்டும் தொடரும். நீ செய்த பாவங்களின் பலனை முதுமையில் அனுபவித்தாக வேண்டும், என்ற எமதர்மன், இவனை எந்தளவுக்கு கொடுமைப் படுத்த முடியுமோ அந்தளவுக்கு செய்யுங்கள், என உத்தரவிட்டு சென்றான். எமகிங்கரர்கள் அவனை வாட்டியெடுத்தனர். தண்டனை காலம் முடிந்ததும், பூலோகத்தில் சவுராஷ்டிரம் என்ற நாட்டில் பிறந்தான். செழிப்பு மிக்க அந்த நாட்டின் மன்னர் மகனாக பிறந்த அவனுக்கு சோமகாந்தன் என பெயரிட்டனர். அவன் பல இன்பங்களை அனுபவித்தான். சுதைமை என்ற அழகுமிக்க மனைவி வாய்த்தாள். ஏமகண்டன் என்னும் மகனைப் பெற்றான். செல்வம் கொழித்தது அவனது நாட்டில். பெற்றோருக்கு பிறகு நாடாண்டான். பல போகங்களை அனுபவித்தான். வயதும் ஏறியது. முற்பிறவி வினைகள் தாக்கும் காலம் நெருங்கியது. அவனை தொழுநோய் பற்றியது. கலங்கி அழுதான். தன் அமைச்சர்களை அழைத்து, நான் என் மகன் ஏமகண்டனுக்கு முடிசூட்டி விட்டு கானகம் சென்று தவவாழ்வில் ஈடுபடப்போகிறேன். தொழுநோய் வந்தவனை கட்டியவள் கூட ஏற்கமாட்டாள். புறப்படுகிறேன், என்றான். அமைச்சர்கள் வருந்தினர். அவனுக்கு வாய்த்த மனைவி மாதரசியான சுதைமை, இதனினும் கொடிய நோய் வந்தாலும் உங்களைப் பிரியேன், எனச்சொல்லி, ராமனைப் பின் தொடர்ந்த சீதையைப் போல உங்களுடன் வருவேன் எனச்சொல்லி கிளம்பினாள். பெற்றவர்கள் மீது அதிக பாசம் கொண்ட ஏமகண்டன், தானும் அவர்களுடன் வருவதாகவும், அரசை அமைச்சர்களிடம் ஒப்படைக்கும்படியும் சொன்னான். அமைச்சர்களும் மன்னர் மீது கொண்ட பாசத்தால் உடன் வருவதாகக் கூறினர். முற்பிறப்பில், ஒரு விநாயகர் கோயில் கட்டியதன் பலன் இது என்பதை சோமகாந்தன் உணரமாட்டான். நன்றாக வாழும் காலத்தில் காட்டும் பாசத்தை விட, கஷ்டப்படும் காலத்தில் ஒருவனுக்கு செய்யும் உதவியே மகத்தானது. கணபதியின் வரலாற்றை படிக்கும் வாசகர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது பெற்றோர் நம்மை வளர்த்து ஆளாக்க எவ்வளவோ சிரமப்பட்டிருப்பார்கள். ஆனால், வயதான காலத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்காமல், முதியோர் இல்லம் என்ற சிறைகளுக்குள் அவர்களை பூட்டி விடுகிறோம். இந்த நன்றி கெட்ட செய்கையை இத்தொடரை வாசிக்கும் எவரும் செய்யக்கூடாது. ஆன்மிகம் நன்மையை மட்டுமே போதிக்கவல்லது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மகனை அருகில் அழைத்த சோமகாந்தன், அவனை தழுவக்கூட முடியாமல், வருத்தத்தில், ஏமகண்டா ! என்ன கொடிய பாவம் செய்தேனோ புரியவில்லை. <உன்னைத் தழுவக்கூட இயலவில்லை. என் இதயம் வெடித்துக் கிடக்கிறது. நாடாளும் மன்னனுக்கு சில கடமைகள் உண்டு. அதில், தன்னை அடுத்து வரும் மன்னனும், தன்னைப் போலவே செங்கோல் ஆட்சி நடத்த வேண்டும் என்பது முக்கிய கடமை. அதற்கு தகுதியானவன் நீ மட்டுமே! நானும், உன் அன்னையும் கிளம்புகிறோம். நீ நாடாள வேண்டும். ஒன்றை மட்டுமே மறந்து விடாதே. எல்லாருக்கும் ஒவ்வொரு குலதெய்வம் இருக்கும். ஆனால், உலகத்திற்கே குலதெய்வம் விநாயகர். அவரை தினமும் வழிபடு. உன்னை எந்தக் கஷ்டமும் அணுகாது, என புத்திமதி சொல்லி புறப்பட்டான். காட்டிற்கு சென்ற அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். ஆடம்பர உடைகளையும், வகை வகையான உணவுகளையும் அனுபவித்த அவர்கள், இங்கே மரவுரிகளைத் தரித்தும், பச்சை காய்கறி, கிழங்குகளை சாப்பிட்டும் உயிர் வாழ வேண்டிய தாயிற்று. ஒன்றை இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். கணவன் கிளம்பியவுடனேயே மனைவியும் உடன் கிளம்பி விட்டாள். தம்பதியர் என்றும் பிரியக்கூடாது என்பது இங்கே சொல்லப்படும் தத்துவம். ஒரு பிறவியில் மனிதன் செய்யும் தவறு, மறுமையிலும் பின் தொடர்ந்து, அவனை மட்டுமின்றி, அவனைச் சார்ந்திருக்கும் எந்தப் பாவமும் செய்யாத அவனது மனைவி மக்களையும் தொடரும் என்பது இன்னொரு தத்துவம். இங்கே சுதைமை சோமகாந்தனுடன் கஷ்டப்பட்டாள். பெற்றவர்களைப் பிரிந்து அவன் வேறிடத்தில் வாழ வேண்டியதாயிற்று. இதற்காகத்தான் ஆன்மிகம், பாவம் செய்யாதே, பாவம் செய்யாதே என தலையில் அடித்து அடித்து சொல்கிறது. காட்டில் கஷ்டப்பட்ட இந்த தம்பதிகளை நோக்கி, ஒரு இளைய தபஸ்வி வந்து கொண்டிருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement