Load Image
Advertisement

விநாயகர் புராணம் பகுதி-4

பிருகுவின் தவவலிமைக்கு அந்த பூதம் மதிப்பளித்து, முனிவரே! நான் ஒரு அந்தணன். முற்பிறவியில், இந்த சோமகாந்தனால் கொலை செய்யப்பட்டேன். கொடூர மரணமடைந்தவர்களுக்கு சொர்க்கம் இல்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே, பிரம்மஹத்தியாக வடிவெடுத்து, இவனைப் பழிக்குப் பழி வாங்க இவனது உடலிலேயே வசித்தேன். தாங்கள், புனித நீரை இவன் உடல் மீது தெளித்ததால் வெளிப்பட்டேன். இவன் ஒரு காலத்தில் சக்தியற்ற என்னைக் கொன்றான். இப்போது, என்னை எதிர்க்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். பாவம் செய்தவன் அதற்குரிய தண்டனையை அனுபவித்தாக வேண்டும். தாங்களும் இதற்கு உடன்பட வேண்டும். இவனை இப்போதே கொன்று தின்ன வேண்டும். இவனது மனைவியும் எனக்கு இரையாக வேண்டும், என பணிவுடன் கேட்டது. பிருகுமுனிவர் அந்த பூதத்திடம், நான் சொல்வதைக் கேள். அதோ தெரிகிறதே, மரம். அதிலுள்ள புதருக்குள் மறைந்திரு. நான் சற்று நேரம் கழித்து உன்னை அழைப்பேன். வெளியே வந்து இவர்களை உணவாக எடுத்துக் கொள், என்றார். பூதமும் தலை வணங்கி மரப்பொந்தில் நுழைந்தது. உடனே முனிவர் சக்தி வாய்ந்த தன் கமண்டல நீரை மரத்தை நோக்கி தெளித்தார். அந்த மரம் தீப்பற்றி எரிந்தது. அதனுள் புகுந்த பூதம், மீண்டும் முந்தைய அந்தணன் போல் சுயரூபம் பெற்று வெளிவந்தது. முனிவரின் பாதத்தில் அந்த அந்தணர் விழுந்தார். நன்றிப்பெருக்குடன் கண்ணீர் சிந்தினார். அப்போது விநாயகப்பெருமான் ஒரு வான ஊர்தியை அனுப்பி வைத்தார். புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த ஊர்தியில் சில தேவர்கள் இருந்தனர். அவர்கள் அந்தணரை அழைத்துக் கொண்டு சொர்க்கம் சென்றனர். சோமகாந்தனுக்கு ஏதோ ஒரு புத்துணர்வு ஏற்பட்டது. ஆனால் தொழுநோய் மட்டும் அப்படியே இருந்தது. பிருகு முனிவர் சோமகாந்தனிடம், மன்னா! உன்னைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விட்டது. அந்தணர்களைக் கொல்பவர்கள், பசுக்களை வதைப்பார்கள் இந்த கொடிய தோஷத்தை அடைவர். தோஷம் நீங்கிய கையோடு, உனக்கு விநாயகர் சரிதம் சொல்கிறேன். அதைக் கேட்டால், இந்த நோயும் நீங்கிவிடும். நீ மீண்டும் உன் ராஜ்யத்துக்கு செல்லலாம், என்றார். சோமகாந்தனுக்கு பிருகுமுனிவர் அருளிய அந்த அருள் தெய்வத்தின் கதையைப் படிக்கும் நாமும் நிச்சயமாக துன்பங்கள் நீங்கி இன்பம் அடைவோம். கைலாயத்தில், பார்வதி சமேதராக சிவபெருமான் வலம் வந்து கொண்டிருந்தார். ஒரு கலை மண்டபத்தில், ஒரு ஆண் யானையும், பெண் யானையும் மகிழ்ச்சியாக கூடியிருக்கும் ஓவியம் ஒன்றைக் கண்ட பார்வதி, அதுபற்றி சிவனிடம் விளக்கம் கேட்டாள். பார்வதி! யானைகள் கூடிக்களித்தால் ஒரு குட்டி யானை பிறக்கும். அதுபோல், நமக்கும் ஒரு மகன் பிறக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது, என்றதும், பார்வதிதேவி, என்ன அந்தச்சூழ்நிலை? என ஆர்வமாய் கேட்டாள். அவளது குரலில் இருந்த அவசரத்தை ரசித்த சிவபெருமான், தேவி! இன்று உலகில் என்ன நடக்கிறது என்பதை லோகநாயகியான நீயும் அறியாமல் இருக்க மாட்டாய். தேவர்கள் சிரமப்படுகின்றனர். வேதங்களை மறந்து, மக்கள் ஆடம்பரங்களில் மூழ்கி கிடக்கின்றனர். செல்வம் நிலையானதென்றும், ஆண், பெண் உறவு நிரந்தர இன்பம் தரக்கூடியதென்றும் கருதி, அவர்கள் அதனை அடைவதற்காக செய்யும் பாவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பாவம் செய்தவர்கள் அசுரர்களுக்கு சமமானவர்கள். அசுரத்தனத்தை அசுரத்தனத்தாலேயே கையை இப்போது ஓங்கச் செய்திருக்கிறேன்... என அவர் சொல்லவும், இடைமறித்த பார்வதி, சுவாமி! இதென்ன விந்தை. அபாயத்தை ஒழிக்க அபாயத்தையே பயன்படுத்துவதா? தாங்கள் அவர்களுக்கு அபயமளித்து நற்கதியல்லவா அருளியிருக்க வேண்டும், என்றதும், பார்வதி! நீ சொல்வதும் சரியே. இருப்பினும், தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நடந்ததை முழுமையாக கேட்டால், உனக்கு எல்லா விபரமும் புரியும், என்ற சிவன் கதையைத் தொடர்ந்தார். அரக்கர் தலைவனான அசுரேந்திரன், தேவர் தலைவனான தேவேந்திரனிடம் பலமுறை அவமானப்பட்டான். தேவர்களுக்கு துன்பம் தந்து அவர்களின் ராஜ்யத்தைக் கவர அவன் நினைத்த போது, இந்திரன் பெரும் படையுடன் சென்று அசுரேந்திரனை தோற்கடித்தான். அவமானமடைந்த அசுரேந்திரன் தன் குருவான சுக்ராச்சாரியாரிடம் ஓடினான். அவர் அவனிடம், அசுரேந்திரா! நீயும் உன் படைகளும் தேவர்களை எதுவுமே செய்ய முடியாது. யாக தியானங்களால் அவர்கள் சிவபெருமானை அன்றாடம் வணங்கி பெரும் பலம் பெற்றுள்ளனர். அவர்களைப் போல, நீயும் சிவனை தியானித்தால், தேவர்களையும் விட உயர்ந்த பலம் பெறலாம். உன்னை ஒடுக்க யாராலும் முடியாது என்றார். அசுரேந்திரனும் குரு சொல் ஏற்று, நாலாயிரம் ஆண்டுகள் காட்டில் தவமிருந்தான். சிவபெருமான் மகிழ்ந்தார். வரம் கொடுக்க வந்தார். திருமால், பிரம்மா உள்ளிட்ட எந்த தெய்வத்தாலும், பிற தேவர்களாலும் அழிவு வரக்கூடாது, என்ற வரத்தை கேட்டான். சிவபெருமான் வரம் தர ஒப்புக்கொண்டாலும், அசுரேந்திரா! உலகில் பிறந்தவர்கள் யாராயினும் அழிவைச் சந்திக்க வேண்டும். நீயும் மரணம் அடைவாய், என்றதும், அப்படியானால், வரம் கொடுத்த உமது சக்தியைத் தவிர வேறு எதனாலும் அழிவு வரக்கூடாது, என்ற உறுதிமொழியை கேட்டுப் பெற்றான். இதையறிந்த சுக்ராச்சாரியார் மகிழ்ந்தார். அசுரர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டுமானால் ஏராளமான அசுரப்பிள்ளைகளை உருவாக்க திட்டமிட்டார். இந்த திட்டம் நிறைவேற வேண்டுமென்றால் மரகத முனிவரால் மட்டுமே செய்ய முடியும் என்று கணக்கிட்டார். தனது திட்டத்தை அசுரேந்திரனிடம் சொன்னார். யார் அந்த மரகதமுனிவர்? என அசுரேந்திரன் கேட்கவே, அவர் வசிஷ்டரின் வழித்தோன்றல் என்ற சுக்ராச்சாரியார், காட்டில் கண்ணே திறக்காமல் பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருக்கும் அவருக்கு திருமண ஆசையைத் தூண்டினால் அசுரகுலத்தை வாழ வைக்க ஒரு வீரமகன் வருவான், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement