Load Image
Advertisement

விநாயகர் புராணம் பகுதி-6

கண்மூடியிருப்பது போல் நடித்த விபுதா, மரகதர் தன்னை நெருங்கட்டுமே என காத்திருந்தாள். மரகதர் அருகில் வந்ததும், மூச்சுக்காற்றின் வெப்பம் அவள் மீது பட, அப்போது தான் விழித்தவள் போல் நடித்த அவள், அவரது பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தாள். அவரது எண்ணம் அவளுக்கு முழுமையாக விளங்கி விட்டதால், பாதங்களில் இருந்து எழுந்த அவள், அவரருகே, நெருங்கி நின்று, சுவாமி! நான் தவம் செய்வதற்காக இங்கு வந்தேன். தங்களைக் கண்டதும், இது எனக்கு பாதுகாப்பான இடமாக இருக்குமென கருதி, இங்கேயே அமர்ந்து விட்டேன். நான் தவமிருக்க துவங்கிய போது, உங்களையே என் மணாளனாக அடைய வேண்டும் என்ற கோரிக்கையை தான் கடவுளிடம் வைத்தேன். முனி பத்தினியாகும் பேறு பெற்றாள், என்னிலும் கொடுத்து வைத்தவள் யாரும் இவ்வுலகில் இருக்க முடியாது, என்று ஆசை வார்த்தைகளைப் பேசினாள். மரகதமுனிவர், எதற்காக அவளை நெருங்கினாரோ, அது தானாகவே கனிந்து போனது கண்டு, அவள் மீது மேலும் மோகம் கொண்டார். அவளை அன்புடன் அணைத்துக் கொண்ட அவர், அவளைப் பற்றிய விபரங்களை விசாரித்தார். அவள், தன்னை அசுர குலத்துப் பெண்ணாக காட்டிக் கொள்ளாமல், யாரோ ராஜகுலத்தவள் போல சொல்லி வைத்தாள். மரகதர் அவளிடம், நீ யாராயினும் அழகு உன்னிடம் கொட்டிக் கிடக்கிறது. அது என்னை உன் மீது மோகம் கொள்ளச் செய்து விட்டது. இருப்பினும், தபஸ்விகளான நாம் மனித வடிவில் உறவு கொள்வது நியாயமல்ல. பிறர் பரிகசிப்புக்கு அது வகை செய்யும். அதோ பார்! தூரத்தில் இரண்டு யானைகள் மகிழ்ந்திருக்கின்றன அல்லவா! அதே போல், நாமும் யானைகளாக மாறி மோகிப்போம், என்றவர், தன் கமண்டல நீரை அவள் மீது தெளித்தார். அவள் பெண் யானையாக மாறினாள். மரகதரும் தன்னை ஆண் யானையாக மாற்றிக் கொண்டு, இருவரும் கூடி மகிழ்ந்தனர். அப்படி மகிழ்ந்திருந்த சில நிமிடங்களிலேயே யானையாக மாறிய விபுதாவின் கால்களில் இருந்து, ஆயிரக்கணக்கான அசுரர்கள் வெளிப்பட்டனர். அவர்களில் ஒருவன் யானை முகத்துடன் இருந்தான். பிறக்கும் போதே வாளை வீசிக்கொண்டு பிறந்த அவன், ஆங்காரமாக ஓசை எழுப்பினான். அதிபயங்கரமான அந்த சப்தம் கேட்டு, மோகத்தில் மூழ்கியிருந்த மரகதர் சுதாரித்தார். தன் சுயரூபத்துக்கு திரும்பினார். விபுதாவும் அவ்வாறே மாறினாள். இப்போது அவள், சுவாமி! நான் அசுரகுலத்தைச் சேர்ந்தவள். எங்கள் இனம் விருத்தியடைந்து, நீடித்த புகழுடன் விளங்க வேண்டுமானால், தவசீலரான தங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளால் தான் முடியும் என எங்கள் குலகுரு சுக்ராச்சாரியார் தெரிவித்தார். அதன்படியும், எங்கள் மாமன்னர் அசுரேந்திரனின் ஆணைப்படியும், தங்களைக் கவர்ந்தது, குழந்தைகளைப் பெற நினைத்து வந்தேன். வந்த வேலையை தாங்களே இனிதாக முடித்து விட்டீர்கள். பாருங்கள், நம் செல்வங்களை! பிறக்கும் போதே வாளுடன் பிறந்து, வீர கர்ஜனை செய்கின்றனர். தங்கள் பிள்ளைகள் வித்தைகளில் கை தேர்ந்தவர்களாக இருந்தால், எந்த பெற்றவர்கள் தான் மகிழ மாட்டார்கள்! நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். தாங்களும் அப்படியே இருப்பீர்கள் என்று தான் நம்புகிறேன், என்றதும், பிறந்த அசுரவீரர்கள் எல்லாரும், வாள்களை சுழற்றிக்கொண்டு, மரகதரை வலம் வந்தனர். அவர் நடுங்கினார். அப்போது யானை முகத்துடன் பிறந்த வீர மைந்தன் அவர் முன்னால் வந்தான். தந்தையே! ஏனிந்த கலக்கம்! இத்தனை வீர மைந்தர்களைப் பெற்ற தாங்கள் மகிழ்ச்சியுடன் அல்லவா இருக்க வேண்டும், உங்கள் பிள்ளையான எனக்கு உங்கள் வாயாலேயே பெயர் வையுங்கள், என்றதும், பயந்து நடுங்கிக் கொண்டிருந்த மரகதர் வாயேதும் திறக்கவில்லை. விபுதா தன் மகனை அருகில் அழைத்து, மகனே! நீ யானை முகத்துடன் பிறந்தவன் என்பதால், கஜமுகாசுரன் எனப்படுவாய், என பெயர் சூட்டி ஆசியளித்து, வரிசையாக ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கும் பெயர் வைத்தாள். மரகதர் தன் விதியை எண்ணி வருந்தி, விபுதாவை அழைத்தார். பெண்ணே! நீ ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவள் போல் பொய் சொன்னாய். இப்போது, அசுரகுலத்தினள் எனச்சொல்கிறாய். எப்படியிருப்பினும், என் தவவலிமை, காமத்தின் மிகுதியால் பறிபோனது. நான் செய்த தவறுக்குப் பரிகாரமாக , மீண்டும் தவம் செய்து வலிமை பெறப்போகிறேன். நீ பொய் சொன்னதால், என்னுடன் தொடர்ந்து வாழும் தகுதியை இழந்து விட்டாய். உன் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு அரண்மனைக்குப் போய் சேர், என்று கோபமாகச் சொல்லிவிட்டு, அவளை நடுக்காட்டிலேயே விட்டுச் சென்றார். விபுதா அதுபற்றி கவலைப்படவில்லை.வந்த வேலை வெற்றிகரமாக முடிந்ததும், அவள் தன் பிள்ளைகள் புடைசூழ அசுரேந்திரனின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். அசுரேந்திரன் மகிழ்ந்து, அவளுக்கு புதிய மாளிகை ஒன்றையே பரிசாகக் கொடுத்தான். சுக்ராச்சாரியார், கஜமுகன் உள்ளிட்ட அரக்கர்களைக் கண்டு அதிர்ந்தே போய்விட்டார். அவரே எதிர்பார்க்காத வகையில் பலம் மிக்கவர்களாக அந்த அசுரர்கள் திகழ்ந்தனர். அவர்களை ஆசிர்வதித்து, வித்தைகள் பல கற்றுத்தந்தார். இதன்பிறகு, கஜமுகாசுரன் உலகின் பல பகுதிகளுக்கும் சென்றான். மனிதர்கள் மிருகங்களையெல்லாம் இஷ்டம் போல் பிடித்து தின்றான். முனிவர்கள் யாகம் நடத்தும் இடங்களுக்குச் சென்று, யாக குண்டங்களை பெயர்த்தெறிந்தான். இதனால், தேவர்கள் தங்களுக்குரிய அவிர்பாகம் கிடைக்காமல் சக்தியிழந்தனர். சுக்ராச்சாரியார் இதைக் கண்டு மகிழ்ந்தார். இருப்பினும் கஜமுகா சுரனை அழைத்து, கஜமுகா! உனது இந்த சந்தோஷம் தற்காலிகமானதே! தேவர்களை நிரந்தரமாக வெற்றி கொள்ள வேண்டுமானால், உனக்கு சிவனின் அருள் வேண்டும். நீ அவரை நினைத்து தவமிரு. அசுரகுலம் அழியாத அளவுக்கு வரங்களைக் கேட்டுப் பெறு, என்றார். கஜமுகனும், 4 ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து சிவதரிசனம் பெற்று, அசுரகுலத்தின் அழியாத் தன்மைக்குரிய பல வரங்களைப் பெற்றான். இதன் பிறகு, அசுரேந்திரன் பதவி விலகி, கஜமுகாசுரனை அரக்கர்களின் தலைவனாக்கினான். இந்நேரத்தில், அதே கஜமுகத்துடன் சிவலோகத்திலும் ஒரு குழந்தை பிறப்பதற்குரிய அறிகுறி தென்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement