Load Image
Advertisement

குலசேகர ஆழ்வார்

பயோடேட்டா பிறந்த இடம்:திருவஞ்சைக்களம் (கோழிக்கோடு அருகில்)
பிறந்த நாள்:எட்டாம் நூற்றாண்டு, பராபவ ஆண்டு மாசி மாதம்
நட்சத்திரம்:புனர்பூசம், (வளர்பிறை துவாதசி திதி)
கிழமை:வெள்ளி
தந்தை:திட விரதன்
எழுதிய நூல்:பெருமாள் திருமொழி
பாடிய பாடல்:105
சிறப்பு:மன்னனின் மகனாய் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர்.
குலசேகரனுக்கு இல்வாழ்வின் மீது வெறுப்பு ஏற்பட்டது. இத்தனை நாள் வீண்பொழுது போக்கிவிட்டேன் என்று உணர்ந்தார். திருமால் மீதும், திருமாலடியவர்கள் மீதும் நாட்டமும், திருவரங்கம் செல்லவேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டது. பரந்தாமனின் அவதாரங்களில் பற்று மிகுந்தது. குறிப்பாக, தசாவதாரங்களில் ராமன், கிருஷ்ண அவதாரங்கள் மீது பக்தி ஏற்பட்டது. தினமும் ஒரு பெரியவரைக் கொண்டு ராமாயண காவியத்தின் விளக்கத்தை ஆர்வமாகக் கேட்டு வந்தார். ராமனுக்கு ஒரு கஷ்டம் என்றபோது தான் சென்று உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

ராமகாதையை பத்துப் பாசுரங்களில் இயற்றி, திருசித்ரகூடப் பெருமானுக்கு (சிதம்பரம்) அர்ப்பணித்தார். ஏழுமலையான் மீதும் இவருக்கு அபார பக்தியுண்டு. திருமலையில் ஒரு புழுவாகவோ, பூச்சியாகவோ, மரமாகவோ, திருக்குள நீராகவோ, மீனாகவோ பிறவி எடுக்கவேண்டும் என்றும், குறைந்தது ஏதாவது ஒரு வஸ்துவாக திருமலையில் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் எம்பெருமான் பொன்மலையில் ஏதேனுமாவேனே என்றும் வேண்டுகிறார். திருமலைவாசன் சன்னதியில் படியாய் இருந்து அவன் பவளவாயை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று விரும்பி, படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே! என்கிறார்.

ஒரு சமயம் ராமன் போரிடச் செல்கிறான் என்ற உபன்யாசகர் கூறும்போது, குலசேகரன் தன்னை மறந்து ராமனுக்கு உதவ தானே படையுடன் புறப்பட ஆயத்தமாகிவிட்டார். உபன்யாசரும் அவரின் உள்ளத்தைப் புரிந்துகொண்டு சமயோசிதமாக குலசேகரரிடம் ராமபிரானே தனியொருவனாக கரன், தூஷணன் முதலான அரக்கர்களை அழித்தான். நீவிர் அண்ணலுக்குத் துணை போகத் தேவையில்லை என்று ராமபட்டாபிஷேகம் வரைச் சொல்லி சமாதானப்படுத்தினார்.

இவர் திருமால் மீது கொண்ட பக்தியால் அவரது அடியார்களுக்குத் தொண்டு செய்தே காலத்தைக் கழித்து வந்ததால் அரசு காரியங்கள் முடங்க ஆரம்பித்தன. இதை உணர்ந்த அவரின் மந்திரிகள் ஒரு திட்டம் போட்டனர். குலசேகரரின் திருவாராதனப் பெருமானின் விலைமதிக்க முடியாத நவமணி மாலையை ஒளித்து வைத்துவிட்டு, அதனை யாரோ ஒரு திருமாலடியார்தான் திருடிச்சென்று விட்டார் என்று அவரிடம் சொல்லினர்.

குலசேகரனோ, அவர்கள் அப்படிச் செய்திருந்தால் எனக்குத் தீங்கு நேரட்டும் என்று கூறி, ஒரு குடத்தில் பயங்கர விஷ நாகங்களைக் கொண்டு வரச்சொல்லி, அதில் தன் கையை விட்டார். ஆனால் அவை அவரைத் தீண்டவில்லை. அவரது அளப்பரிய பக்தியைப் புரிந்துகொண்டனர் மக்கள்.

குலசேகரன் தன் மைந்தரிடம் அரசுப்பணிகளை ஒப்படைத்துவிட்டு ஆண்டவன் சேவையை ஏற்றார். ஸ்ரீரங்கம், காஞ்சி, திருப்பதி முதலான திவ்யதேசங்களுக்கு யாத்திரை செய்தார். தன்னுடைய குமாரத்தியின் மனம் குளிர அரங்கனுக்கே அவனை மணமுடித்தார். இதனால் பெரியாழ்வாரைப் போல இவருக்கும் திருமாலுக்கு மாமனார் என்ற ஸ்தானம் ஏற்பட்டது. இன்றும் திருவரங்கத்தில் அரங்கனும் சேரகுலவல்லியும் இணைந்து காட்சியளிக்கும் சன்னதி அமைந்துள்ளதைக் காணலாம்.திருமாலின் திருவருளால் சேர மன்னன் திடவிரதன் என்பவனுக்கு கவுஸ்து அம்சமாக குலசேகராழ்வார் அவதரித்தார். தனது தந்தைக்குப்பின் சேரநாட்டை மிகவும் சிறப்பான ஆட்சி செய்தார். இவரது சிறப்பான ஆட்சி கண்டு பொறாமைப்பட்டு இவருடன் போருக்கு வந்த சோழ, பாண்டிய மன்னர்களை வென்று, தமிழகத்தை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். இவரது வீரத்தை கண்ட பாண்டியமன்னன் தன் மகளை இவருக்கு திருமணம் செய்து வைத்தார். வீரம், போர், நான், எனது என்ற அகங்காரத்துடன் இருந்த குலசேகராழ்வாரின் மனதில் திருமால் புகுந்து, மாயையை விலக்கி தன் மீது மட்டும் நேசம் உடையடவராக மாற்றினாõர். இதனால் மனம் மாறிய குலசேகராழ்வார் இது நாள் வரை தான் செய்து வந்த அற்பத்தனமான செயல்களை நினைத்து வருந்தினார். அத்துடன் நாளுக்கு நாள் நாராயணன் மீது அளவுகடந்த அன்பும் பக்தியும் மிகுதியானது. இந்த அன்பையும் பக்தியையும், செந்தழலே வந்து அழலைச்
செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெம்கதிரோறரு
அல்லால் அலராவால்; வெம்துயம் வீட்டாவிடினும் விற்
றுவக் கோட்டு அம்மானே ! உன்
அந்தம் இல்சீர்க்கு அல்லால்
சுகம் குழைய மாட்டேனே என்று பாடி அதன் படி வாழ்ந்தும் வந்தார். அத்துடன் நாள்தோறும் வைணவப் பெரியவர் மூலம் ராமாயணக் கதைகளை கேட்டும் வந்தார். ராமாயணக்கதை கேட்ட போது ராமர் சீதையைக் மீட்க அரக்கர்களுடன் போர் புரிந்தார் என்பதை கேட்ட போது உணர்ச்சிவசப்பட்டு அந்த அரக்கர்களுடன் சண்டை போ தன் படையை தயார் செய்தவர். இப்படி பெருமாள் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த மன்னர், ஒருநாள் திடீரென தன் நாட்டை ஆளும் பொறுப்பை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு பெருமானை தரிசிப்பதற்காக ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் போன்ற திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். இவர் பெருமாள் மேல் பாடிய பாசுரங்களுக்கு பெருமாள் திருமொழி என்று பெயர், இவர் தன் வாழ்நாள் முழுவதும் பெருமாளை பூமாலையாலும் பாமாலையாலும் பூஜை செய்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோயில் சென்று பெருமாளை தரிசித்து நிற்கும் போது இறைவன் பேரருளால் இவ்வுலகை விட்டு வைகுண்டம் சேர்ந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் குலசேகர ஆழ்வார் தனியாக சென்று 1 கோயிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 7 கோயில்களையும் என மொத்தம் 8 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். குலசேகர ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில் - 1 1. திருவித்துவக்கோடு (அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு,பாலக்காடு, கேரளா மாநிலம்) குலசேகர ஆழ்வார் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மங்களாசாசனம் செய்த கோயில் - 7 குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் (2) 1. திருச்சித்ர கூடம் (அருள்மிகு கோவிந்த ராஜ பெருமாள் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)
2. திருவாழித் திருநகரி, (அருள்மிகு லட்சுமி நரசிம்மர், தேவராஜன் திருக்கோயில், திருவாழித் திருநகரி, நாகப்பட்டினம்) குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் (1) 1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்) குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1) 1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி) குலசேகர ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2) 1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல் குலசேகர ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1) 1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement