Load Image
Advertisement

திருவருட்பயன் பகுதி-6

92. வேறொன்றையும் விரும்பாமை

ஐந்தொழிலும் காரணர்கள் ஆம் தொழிலும் போகம் நுகர்
வெந்தொழிலும் மேவார் மிக.

பொருள் : படைத்தல் முதலிய ஐந்தொழில்கள் சிவனுக்கு உரியவை. அவனைப் போலத் தாமும் ஐந்தொழில் செய்தல் வேண்டும் என்ற விருப்பம் சிவனை அணைந்தோர்க்குச் சிறிதும் ஏற்படுவதில்லை. காரணக் கடவுளர் என்போர் சிவனது ஆணையைப் பெற்றுப் படைத்தல் முதலிய தொழில்களுக்குத் தலைவராய் நின்று செய்வர். அவர்களின் நிலையைத் தாமும் பெறவேண்டும் என்ற விருப்பமும் சிவனை அணைந்தோர்க்குச் சிறிதும் உண்டாதல் இல்லை. உலக போகங்களை நுகர வேண்டும் என்ற விருப்பமும் அவர்களுக்குச் சிறிதும் நிகழ்வதில்லை.

சொற்பொருள் :

ஐந்தொழிலும் - சிவனைப் போலவே தாமும் ஐந்தொழில் செய்தலையும்
காரணர்கள் ஆம் தொழிலும் - சிவனது ஆணையைப் பெற்று அவற்றுள் ஒவ்வொரு தொழிற்கு முதல்வராய் நின்று செய்தலையும்
போகம் நுகர் வெந்தொழிலும் - முன்னை வினையின் பயனாக வருகின்ற உலக போகங்களை விருப்பு வெறுப்புடன் அனுபவிக்கின்ற கொடிய செயலைச் செய்தலையும்
மிக மேவார் - சிவனை அணைந்தோர் சிறிதும் விரும்பார்.

விளக்கம் :

சிவசமவாத சைவர் என்பவரை முன்னே நாம் அறிந்துள்ளோம். முத்தியில் ஆன்மா சிவனது எண் குணங்களையும் பெற்றுச் சிவனோடு ஒப்ப நின்று, அவனது ஐந்தொழில்களையும் செய்யும் என்பது அவர் கொள்கை. சித்தாந்த சைவம் இதனை ஏற்பதில்லை. உயிர் எக்காலத்திலும் சிவனுக்குச் சமமாக முடியாது. உயிரினது அறிவு நிலை வேறு. சிவத்தினது அறிவு நிலை வேறு. உயிர் வேறொரு துணை அறிவிக்கவே அறிவது; ஒரு நேரத்தில் ஒன்றையே அறிவது. இவ்வாறு அறிவிக்க அறிதலும், ஒவ்வொன்றாய் அறிதலும் உயிரின் சிறப்புத் தன்மையாகும். இதுபோலன்றித் தானே அறிதலும், எல்லாவற்றையும் ஒருங்கே அறிதலும் முதலியவை சிவத்தின் சிறப்புத் தன்மையாகும். ஒரு பொருளின் சிறப்புத் தன்மை என்றும் மாறாது. ஒரு பொருளுக்குரிய சிறப்புத் தன்மையை மற்றொரு பொருள் பெறுதல் என்பதும் எக்காலத்திலும் நடவாது. ஆகவே, முத்திநிலையில் உயிர் சிவத்தினது சிறப்புத் தன்மையைப் பெற்று ஐந்தொழில் செய்யும் எனல் பொருந்தாது. இச்சிறப்புத் தன்மைகளினால் சிவம் என்றும் தலைமைப் பொருளாய் நிற்கும்; உயிர் என்றும் அதற்கு அடிமையாய் நிற்கும் என்பது விளங்கும். சிவபெருமான் படைத்தல் முதலிய ஐந்தொழில்களுக்கும் உரியன்; உயிர் சிவானுபவத்தைப் பெற்று நுகர்வதற்கு மட்டும் உரிமையுடையது என்பதனை வலியுறுத்தி,

உம்பர் பிரான் உற்பத்தி ஆதிகளுக்கு உரியன்;
உயிர் தானும் சிவானுபவம் ஒன்றினுக்கும் உரித்தே

என்று சிவஞான சித்தி கூறியிருத்தல் காணலாம். எனவே, சிவனை அணைந்தோர் சிவானந்தத்தில் மூழ்கியிருத்தலைத் தவிர ஐந்தொழில் செய்தல் போன்றவற்றைச் சிறிதும் விரும்பார் என அறியலாம். காரணக் கடவுளர் என்போர், விஞ்ஞான கலருள் பக்குவம் பெற்றுச் சிவ ஞானம் பெற்றவர்கள்; சுத்த மாயையில் தோன்றிய உலகங்களில் புவனபதிகளாய் இருப்பவர்கள். அனந்த தேவர், மந்திர மகேசுரர், அணு சதாசிவர் என்போர் அத்தகைய தலைவர்கள். மலம் நீங்கப் பெற்றவராயினும் மல வாசனை நீங்காமையால் அதிகாரத்திலும், போகத்திலும் சிறிது இச்சை உடையவராய் இருப்பர். இவர்கள் சிவபெருமானது ஆணையைப் பெற்றுத் தத்தம் அதிகார எல்லைக்கு உட்பட்டு வாழும் ஆன்மாக்களிடத்தில் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்வர். இவர்களெல்லாம் தாங்கள் செய்த புண்ணிய மிகுதியால் இப்பதவிகளைப் பெற்றவர்கள். கடவுளர் என்ற பெயரைப் பெறினும் இவர்களும் உயிர்க் கூட்டத்தைச் சேர்ந்தவரே என்பதை மறத்தல் கூடாது. இவர்களிடத்து நின்று அவ்வச் செயலைச் செய்வது சிவபிரானது அதிகார சத்தியே ஆகும். ஆதலால் உண்மையில் எல்லாவற்றையும் செய்பவன் சிவனே என்பதும், எல்லாச் செயல்களும் சிவன் செயல்களே என்பதும் இங்கு உணர்தற்குரியன.

சிவஞானிகள் மற்று எதிலும் பற்று இல்லாதவர் ஆதலால் காரணக் கடவுளராய் விளங்கும் நிலையையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஒரு விருந்திற்குச் செல்கிறோம். இலையில் சிலேபி வைக்கிறார்கள். அதன் தித்திப்பில் நாக்குத் திளைக்கிறது. மேலும் ஒன்று கேட்டு வாங்கி உண்ணுகிறோம். அதற்குப் பிறகு சேமியா பாயசம் வருகிறது. அதுவும் இனிமையானதுதான். ஆனாலும், முதலில் மிக இனிமையான சிலேபியை உண்ட பிற்பாடு பாயசம் சுவையாக இருப்பதில்லை. அதனால் மீண்டும் பாயசம் கொண்டு வந்தால் அதனை வேண்டாம் என்கிறோம். அற்பமான உணவிலேயே ஒன்று மிக இனியதானால் மற்றொன்று சுவையிழந்து விடுவதைப் பார்க்கிறோம். அப்படியிருக்க, அளப்பரிய சிவபோகத்தைத் துய்த்த ஞானிகளுக்கு உலக போகம் கைத்துப் போவதில் என்ன வியப்பு! ஆகவே போகம் நுகர் வெந்தொழிலையும் அவர் சிறிதும் விரும்பார். உலக போகம் என்பது விருப்பு வெறுப்போடு நுகரப்படுவது. அவ்விருப்பு வெறுப்புக்கள் புதுவினையாகிய ஆகாமியத்தைத் தோற்றுவிக்கும். ஆகாமியம் அடுத்தபிறவிக்கு வித்தாகும். இவ்வாறு உலக போகத்தை நுகர நுகர, அதனால் வினையும், வினை காரணமாகப் பிறவியும் தோன்றுமாதலின் உலக போகத்தை அனுபவித்தலை வெந்தொழில் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். எல்லையின்றிப் பெருகுகிற சிவானந்த வெள்ளத்தில் திளைத்த பெருமக்கள் வேறொன்றையும் விரும்பார் என்பது இதனால் விளங்கும்.

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு (திருவாசகம்)
போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி இன்பமும் (திருவாசகம்)
வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம்
வேண்டேன் மண்ணும் விண்ணும் (திருவாசகம்)
கொன்றைத் தொங்க லான் அடியவர்க்குச்
சுவர்க்கங்கள் பொருளலவே (சம்பந்தர் தேவாரம்)

என்பன போன்ற திருமொழிகளை அடியொற்றியே ஆசிரியர் இச் செய்யுளை அமைத்துக் கொண்டார் எனலாம்.

93. சிவனையன்றி வேறொன்றை அறியார்

எல்லாம் அறியும் அறிவுறினும் ஈங்கு இவர் ஒன்று
அல்லாது அறியார் அற.

பொருள் : எல்லாவற்றையும் அறியக்கூடிய சிவனது அறிவாகிய திருவருளைத் தாம் பெற்றாராயினும் அணைந்தோராகிய ஞானிகள் அவ்வறிவைக் கொண்டு சிவனைத் தவிர வேறு பொருள்களைச் சிறிதும் அறிய மாட்டார்.

சொற்பொருள் :

எல்லாம் அறியும் அறிவு - எல்லாவற்றையும் அறியக்கூடிய சிவனது அறிவாகிய திருவருளை
உறினும் - தாம் பெற்றாராயினும்
ஈங்கு - இம் முத்தி நிலையில்
இவர் - இவ் அணைந்தோர்
ஒன்று அல்லாது - ஒரு பொருளாகிய சிவத்தையன்றி
அற அறியார் - வேறொரு பொருளைச் சிறிதும் அறியார்.

விளக்கம் :
எல்லாம் அறியும் அறிவு :

எந்நிலையிலும் ஆன்மா ஒரு துணையைக் கொண்டே அறிவதாகும். கட்டு நிலையில் அதற்குத் துணையாய் இருப்பவை கருவிகள். ஐம்பொறி முதலிய கருவிகளின் வழியாகவே அது உலகத்தை அறிந்து வருகிறது. அக்கருவிகள் உலக அறிவைத் தருமேயன்றி மெய்யறிவைத் தரமாட்டா. உலக அறிவு என்பது மயக்க அறிவே. பொருள் அல்லவற்றைப் பொருளென்று அறிந்து பற்றுவதனால் அது மயக்க அறிவா யிற்று. இம்மயக்க அறிவு உள்ளவரையில் மெய்யறிவு தோன்றாது. எனவே மயக்க அறிவைத் தருகின்ற கருவிகளை விட்டு நீங்கும்போதே மெய்யறிவு உண்டாகும். சுத்த நிலையில் கருவிகள் நீங்கியபோது மெய்யறிவைப் பெறுவதற்குத் துணை செய்வது எது? அதுவே உயிர்க்குயிராய் என்றும் உடனாய் இருக்கும் சிவனது அறிவாகிய திருவருள். எல்லாம் அறியும் அறிவு என்று அதனைக் குறிக்கின்றார் ஆசிரியர் உமாபதி சிவம். கருவிகளை நீங்கிய நிலையில் திருவருளே கருவியாய் நின்று உயிருக்கு நேரே அறிவிக்கும். கட்டு நிலையில் உயிர் மலத்தில் மறைப்புண்டு சிறுமைப் பட்டிருந்தது. அந்நிலையில் சிறியவாகிய கருவிகள் அதற்குத் துணையாகச் சிற்றறிவைத் தந்தன. கருவிகளை நீங்கிய நிலையில் உயிர் தனக்கு இயல்பாய் உள்ள வியாபக நிலையைப் பெற்றுவிடும். இங்ஙனம் வியாபகமாகிய உயிருக்கு வியாபகமாய் உள்ள திருவருளே துணையாகி அதன் வியாபக அறிவை விளங்கச் செய்யும். சிறியவாகிய கருவிகளால் உயிர் அறிந்தது சிறுமையுடைய உலகத்தை. வியாபகமாகிய திருவருளால் உயிர் அறிவது வியாபகமாகிய சிவத்தையேயாம்.

ஆன்மாவின் இயல்பு :

எப்பொருளை அறிந்தாலும் அப்பொருளிடத்து அழுந்தி விடுவது ஆன்மாவின் இயல்பாகும். அழுந்தி விடுதல் என்றால், ஆன்மாவினது அறிவு அப்பொருளின் வயப்பட்டு விடுதல். அப்பொருளோடு ஒன்றிப் போதல் என்பது பொருளாகும். அங்ஙனம் ஆன்ம அறிவு ஒரு பொருளோடு ஒன்றிப் போகுமானால் அது அச்சமயத்தில் வேறொரு பொருளை அறியமாட்டததாய் நிற்கும். இதுபற்றியே ஆன்மா ஒரு நேரத்தில் ஒன்றையே அறியும் என்று சொல்லப்படுகிறது. ஆன்மாவின் இயல்பு இப்படிப்பட்டதாகையால், மலம் முழுவதும் நீங்கிச் சிவத்தை சார்ந்த பொழுது அதனறிவு சிவம் ஒன்றையே அறியும் அன்றி வேறொன்றையும் அறிய மாட்டாது. பளிங்கின் பக்கத்தில் மாணிக்கம் இருந்தால் அப்பளிங்கு மாணிக்கத்தின் ஒளியை முழுவதுமாகப் பெற்று நிற்கும். அந்நிலையில் அதன் அருகே வேறு பொருள்களை வைத்தாலும் அவற்றின் நிறங்களை அது கவராது விடும். அது போன்றதே ஆன்மா சிவத்தையன்றி வேறொன்றையும் அறியாத நிலை. எல்லாம் அறியும் அறிவாகிய திருவருளைப் பெற்றும் உயிர் சிவத்தைத் தவிர வேறு பொருளை அறியாது என்றால் அஃது ஒரு குறையாய் முடியாதோ என வினவலாம். திருவருள் கண்ணாகச் சிவத்தை இனிது உணர்ந்து நிற்றலால் ஆன்மாவிற்குச் சிறிதும் குறைவில்லாத இன்பமே உண்டாவதன்றித் துன்பம் சிறிதும் உண்டாகாமையால், பிறிதொரு பொருளை உணராமை பற்றி ஆன்மாவிற்கு ஒரு குறையும் இல்லையாம்.

பிறவற்றை அறிதல் பந்தம் :

சிவம் ஒன்றே ஆன்மா அறிதற்குரிய பொருள். சிவமல்லாத வேறு எப்பொருளை அறிந்தாலும் அஃது ஆன்மாவிற்குப் பந்தமாய் முடியும். அதுபற்றியே ஞானிகள் சிவத்தைத் தவிர வேறு பொருளை அறியார். அங்ஙனம் பிறவற்றை அறியாமை அறிய மாட்டாமையால் அன்று; அறிய விரும்பாமையினால் ஆம். பிறவற்றை அறிதல் பந்தமாய் விடும். அந்தப் பந்தம் முத்திப் பயனுக்கு இடையூறாய் விடும். ஆகவே, ஞானிகள் பிறவற்றை அறிதலைச் சிறிதும் விரும்பார்.

பொற்கொழு :

ஓர் உழவனுக்குக் கிடைத்தற்கரிய கொழு ஒன்று கிடைத்தது. கொழு என்பது நிலத்தை உழும் கலப்பையின் அடிமுனையில் பொருத்தப் பெற்றிருக்கும் கருவி. அது பொதுவாக இரும்பினால் செய்யப் பெற்றிருக்கும். இவனுக்குக் கிடைத்ததோ உலகினில் எங்கும் இல்லாத கொழு; பொன்னால் இயன்ற கொழு; அதனை எவ்வளவு மதித்துப் போற்ற வேண்டும்; ஆனால், அவன் அதன் மதிப்பை உணராமல் அற்பமான வரகினை விளைத்தற் பொருட்டு வன்னிலத்தை உழுதற்குப் பயன்படுத்தினானாம். அவனது பேதமையை என்னென்பது! பொற்கொழுக் கொண்டு வரகுக்கு உழுவது போன்றது திருவருளைப் பெற்ற பின்னும் அது கண்ணாக இறைவனையே உணர்ந்து அவனிடத்து அடங்கி நில்லாது, தற்போதத்தால் பிறவற்றை உணர்ந்து மீட்டும் உலக பந்தத்திற்கு ஆட்படுதல்.

94. ஆமையும் ஞானியும்

புலன் அடக்கித் தம்முதற்கண் புக்குறுவர் போதார்
தலன் நடக்கும் ஆமை தக.

பொருள் : ஆமை நிலத்தின் மேல் இயங்கும் பொழுது தனக்குத் துன்பந் தருவதொன்று எதிரில் வருவதாக உணர்ந்தால் அப்பொழுதே தனது ஐந்து உறுப்புக்களையும் தனக்குக் காவலாய் உள்ள ஓட்டினுள்ளே அடக்கிக் கொண்டு அசைவற்றுக் கிடக்கும். அதுபோல, அணைந்தோராகிய ஞானிகள் உலக ஆசை தம்மைத் தாக்குவதாக உணர்ந்தால், உலகை நோக்கிச் செல்கின்ற மனத்தை அவ்வாறு செல்லாமல் அடக்கித் தமக்கு முதலாய் உள்ள சிவனது வியாபகத்துள்ளே ஒடுங்கி உலகை நினையாதிருப்பர்.

சொற்பொருள் :

தலன் - நிலத்தில்
நடக்கும் ஆமை - இயங்கும் போது தனக்குத் தீங்குவரின் தன் உறுப்புக்களைச் சுருக்கி ஓட்டினுள் அடக்கிக் கிடக்கும் ஆமை
தக - போல,
புலன் அடக்கி - அணைந்தோர் ஐம்புல உணர்வை அடக்கி
தம் முதற் கண் - தம் அறிவிற்கு முதலாய் உள்ள சிவத்தினது வியாபகத்தினுள்ளே
புக்கு உறுவர் - ஒடுங்கி நிற்பார்
போதார் - அந்நிலையினின்றும் நீங்கிப் புறம் வாரார்; அஃதாவது, உலகை நினையார்.

விளக்கம் :

அவா ஞானியர்க்கு ஆகா :

வீட்டு நிலையில் உள்ள ஞானிகள் எப்பொழுதும் பரமே பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார். அவர்களிடத்திலும் ஆசை எழுமோ? என்று கேட்கலாம். உலகில் வாழும் போதே சிவத்தை அடைந்து அதனோடு ஒன்றி நின்ற பின்னும் பண்டைய பழக்கத்தால் உயிர்ச் சார்பு, பொருட்சார்பு ஆகியவற்றின் மேல் ஆசை நிகழ்தல் கூடும். திருவள்ளுவர் மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தை வைத்ததோடு நில்லாமல், அதன்பின் அவா அறுத்தலை வைத்துக் கூறியுள்ளமை கருதத் தக்கது. அவா என்பது, உள்ளது போதும் என்று அமையாமல், இது வேண்டும், அது வேண்டும், இன்னும் வேண்டும், இதற்கு மேல் வேண்டும் என மேலும் மே<லு<ம் பெற விரும்பும் வேட்கையாகும். திருவள்ளுவர் அதனை ஆரா இயற்கை அவா என்பார். ஆராமையாவது நிரம்பாமை; எவ்வளவு பெற்றாலும் அதனால் மனநிறைவு ஏற்படாமை. பிறப்பு நிலையில் உள்ள நம்மவரிடத்தில் இத்தகைய அவா இருத்தல் இயல்பு. ஆனால், ஞானத்தால் வீடுற்ற ஞானிகளிடத்தில் உலக ஆசை எழுமாயின் அவ்அவா அவரை மீட்டும் பிறவியிற் செலுத்தி விடும்.

ஆசையால் விளைந்த நிலை :

ஆசைக்கு இடங்கொடுத்தால் அஃது எதிலே போய் முடியும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சியினால் அறியலாம். துறவி ஒருவர் தன்னந்தனியாக நடுக்காட்டில் சிறு குடிசை போட்டுக் கொண்டு வாழ்ந்தார். அவருக்கு ஒரு குறையும் இல்லை. ஒரு தேவையும் இல்லை. ஆனால், ஒரு சிறு தொல்லை அவ்வப்போது ஏற்பட்டது. அத்தொல்லை எலியினால் வந்தது. அது அடிக்கடி அவரது கோவணத்தைக் கடித்துக் கிழித்தது. எலியின் தொல்லையைப் போக்க என்ன வழி? பூனை இருந்தால் எலி வராது என்று எண்ணிப் பூனை வளர்த்தார். பூனைக்குப் பால் வேண்டுமே. அதற்காகக் கறவை மாடு ஒன்று வாங்கிக் கனிவோடு வளர்த்தார். அதற்கு வைக்கோல் வேண்டுமே. அதற்காக ஒரு நிலத்தை வாங்கித் தானே உழுதார். இத்தனை வேலைகளையும் தனியொருவராக இருந்து எப்படிப் பார்ப்பது? துணையொருவர் வேண்டும் என்று ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். குழந்தைகளைப் பெற்றார். ஆசைக்கு இடங்கொடுத்த இந்தத் துறவியின் நிலை இப்படியாயிற்று. ஆதலால் ஆசை எழுந்த அப்பொழுதே அதனைக் களைந்தெறிவர் ஞானியர்.

சிவஞானத்துள் ஒடுங்குதல் :

ஆசையைக் களைவது எப்படி? நிலையாதவற்றின் மேல் அவாக் கொண்டு ஓடி இடைவிடாது அவற்றைப் பற்றி நிற்பது மனமேயாகும். அதனை அவ்வாறு முடிவின்றி ஓடவிட்டால், உலக ஆசை முடிவின்றித் தோன்றிக் கொண்டேயிருக்கும். எனவே, மன ஓட்டத்தை அடக்க வேண்டும். மனத்தை அடக்குவதற்கு உரிய வழி ஒன்றே ஒன்றுதான். ஒரு பொழுதும் உயிரை விட்டு நீங்கிச் சேய்மையில் இல்லாமல் எப்பொழுதும் உடனாக இருக்கின்ற சிவனை இடைவிடாது உணர்ந்து நிற்பின், ஐம்புலன்களை நாடி ஓடுகின்ற மனம் மெல்ல மெல்ல அதனை விடுத்து அவனிடத்தே சென்று ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கிய நிலை வாய்க்குமானால் உலக வாசனை தாக்காதொழியும். ஞானிகள் இம்முறையில் மனத்தை அடக்கிச் சிவ ஞானத்துள்ளே ஒடுங்கி உலகை நினையாதிருப்பர். இக் கருத்தையே புலனடக்கித் தம் முதற்கண் புக்குறுவர் எனக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

தலன் நடக்கும் ஆமையை உவமை காட்டி ஞானியர் நிலையை விளக்குகிறார். ஆமை எப்படித் தனக்குத் தீங்கு வருவதை உணர்ந்தவுடன் தன் உறுப்புக்களை உள்ளே இழுத்துக் கொள்ளுமோ, அப்படியே ஞானிகளும் தம் உணர்வைத் தாக்குகின்ற விடய சுகங்களைக் கண்டதும் புலனடக்கித் திருவருளுக்குள்ளே ஒடுங்கியிருப்பர் என்கிறார்.

ஒரு குறிப்பு :

மனம் மொழி மெய்களின் செயல் அடங்கி, ஐம்பொறிகளின் நுகர்ச்சியும் ஒடுங்கினால் அதனை ஒடுக்கம் என்பர். நமது திருமடங்களில் ஒடுக்கம் என்ற ஓர் இடம் உண்டு. ஆசாரிய மூர்த்திகள் இருக்கும் இடம் அது. இந்திரியங்கள் யாவும் ஒடுங்கித் தவம் செய்கின்ற இடம் ஆதலின் அதற்கு ஒடுக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. அங்கே உடனிருந்து பணிவிடை புரியும் அணுக்கத் தொண்டருக்கு ஒடுக்கத் தம்பிரான் என்பது பெயர். புலன்கள் ஒடுங்கியிருக்கும் தம்பிரான் என்பது அதற்குப் பொருளாகும்.

95. சிவனைப் போல எங்குமாய் நிற்றல்

அவனை அகன்று எங்கு இன்றாம்; ஆங்கு அவனா எங்கும்
இவனை ஒழிந்து உண்டாதல் இல்.

பொருள் : எந்த இடமும் சிவனை நீங்கியில்லை. அவ்வாறே, சிவமாம் தன்மை பெற்றுச் சிவனாகவே உள்ள இந்தச் சீவன் முத்தனை நீங்கி எவ்விடமும் இல்லையாம்.

சொற்பொருள் :

அவனை - சிவனை
அகன்று - நீங்கி
எங்கு - எவ்விடமும்
இன்றாம் - இல்லை
ஆங்கு - அவ்வாறே
அவனா இவனை - சிவமாந்தன்மை பெற்றுச் சிவனாக உள்ள இந்தச் சீவன் முத்தனை
ஒழிந்து - நீங்கி
எங்கும் - எவ்விடமும்
உண்டாதல் இல் - உளதாதல் இல்லை.

விளக்கம் :

சிவனை அணைந்தோர் உடம்பில் நின்றாராயினும் உடம்பு அளவில் நில்லார்; சிவனைப் போலவே அவரும் வியாபகம் உடையவராய், எங்குமாய் நிற்பர் என்பது கருத்து. அவனை அகன்று எங்கும் இன்றாம்; ஆங்கு (அது போல) அவனா இவனை ஒழிந்து எங்கும் உண்டாதல் இல் எனச் சொற்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

வியாபகப் பொருள் :

ஆன்மாவின் அளவு பற்றி இங்கே தெரிந்து கொள்ளுதல் வேண்டும். அஃது உடம்பினுள்ளே இருக்கின்ற சிறிய பொருள் என்றே பொதுவாக நினைக்கின்றனர். அந்த நினைப்புத் தவறு. உடம்பு என்ற இடத்திற்குள் மட்டும் இருக்குமானால் ஆன்மா இடம் என்ற எல்லைக்கு உட்பட்டதாகி விடுகிறது. இட எல்லைக்கு உட்பட்ட பொருள் எதுவாயினும் அதற்குத் தோற்றமுண்டு; அழிவுண்டு. நாம் பார்க்கின்ற சிறியனவும் பெரியனவும் ஆகிய பொருள்யாவும் இட எல்லைக்கு உட்பட்டவை. ஆகவே அவை தோன்றி அழிவனவேயாகும். இந்த உலகத்திற்கும் இது பொருந்தும். இதுவும் இடஎல்லைக்கு உட்பட்டதுதானே. அம்முறையில் ஆன்மாவும் உடம்பாகிய இடத்திற்கு உட்பட்டது என்றால் அதற்கும் அழிவு உண்டு என்று ஆகும். ஆன்மா அழியும் என்று கொண்டால், மறு பிறப்பு உண்டு என்பதும், வினை அதனைத் தொடர்ந்து சென்று பற்றும் என்பதும் ஏலாதன வாகிவிடும். ஆகவே ஆன்மாவுக்கு அழிவில்லை என்றே கொள்ள வேண்டும். அவ்வாறு கொண்டால் ஆன்மா இட எல்லைக்கு உட்படாது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே ஆன்மா எல்லையற்ற பொருள் என்பது விளங்கும். எல்லையற்ற பொருள் எங்கும் நிறைந்த பொருளாகவும் இருக்கும். அதனை வியாபகப் பொருள் என்பர். எனவே, ஆன்மா வியாபகப் பொருள் என்பது பெறப்படும்.

அடங்கிய வியாபகம் :

கடவுட் பொருளும் எல்லையற்றது. ஆன்மாவும் எல்லையற்றது என்றால் இரண்டிற்கும் வேறுபாடு இல்லையோ என்று கேட்கலாம். இரண்டும் வியாபகப் பொருளே என்றாலும் கடவுட் பொருள் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கி நிற்கின்ற பெரு வியாபகம் உடையது. ஆன்மா அதற்குள் அடங்கி நிற்கின்ற வியாபகம் உடையது. அடங்கி நிற்பதை வியாப்பியம் என்று குறிப்பிடுவர். எனவே ஆன்மா வியாபகப் பொருளாயிருப்பினும் கடவுளுடைய வியாபகத்தை நோக்க அது வியாப்பியமே என அறிதல் வேண்டும்.

மல மறைப்பு :

இப்படிப்பட்ட பெரும் பொருளாகிய ஆன்மாவை ஆணவ மலம் முற்றாக மறைத்து நிற்கிறது. இதனால் ஆணவ மலமும் ஆன்மாவைப் போல வியாபகப் பொருளே என்பது விளங்கும். வியாபகப் பொருள்தானே மற்றொரு வியாபகப் பொருளை மறைக்க முடியும். முதல் நிலையாகிய கேவல நிலையில் ஆன்மா இவ்வாறு மலத்தினால் மூடப்பட்டுத் தான் ஒரு பொருள் உண்டு என்பதையும் அறியாமல் கிடக்கிறது. இந்நிலை குளத்தில் பாசி படர்ந்து நீர்ப் பரப்புச் சிறிதும் தோன்றாதவாறு அதனை மூடியிருப்பது போன்றதாகும். நீர்ப் பரப்புப் போன்றது ஆன்ம வியாபகம். அதனை மறைத்துள்ள பாசி போன்றது ஆணவமலம்.

உடம்பு அளவில் விளங்கி நிற்றல் :

இந்த நிலையில் உள்ள ஆன்மாவுக்கு உடம்பு முதலியவற்றைத் தருகிறான் இறைவன். இது சகல நிலை. இறைவனால் தரப்பெற்ற உடம்பும், கருவிகளும் ஆணவ மலத்தின் மறைப்பைச் சிறிது நீக்கி ஆன்மாவின் அறிவைச் சிறிது விளக்குகின்றன. இப்பொழுது ஆன்மாவின் இருப்புச் சற்றே புலப்படுகிறது. பாசி மூடிய குளத்தில் ஒரு கல்லை எறிந்தால் கல்பட்ட இடத்தில் பாசி சிறிது விலக, நீரின் இருப்புச் சிறிது புலப்படுவதைப் போன்றது இது. ஆன்மாவுக்கு உடம்பு கிடைத்திருப்பது நீர்ப்பரப்பின் மீது கல்லெறிபடுவதைப் போன்றது. கல்லெறி பாசி முழுவதையும் நீக்கி விடவில்லை. சிறிது இடத்தில் மட்டுமே அதனை நீக்குகிறது. அதுபோல ஆன்மா <உடம்போடு பொருந்திய இந்த இடத்தில் மட்டும் மலமறைப்பு நீங்கி அறிவு புலனாகிறது. ஆன்மா வியாபகமானது. எங்கும் நிறைந்திருப்பது என்று பார்த்தோம். உடம்புக்கு அப்பாலும் ஆன்மா இருப்பினும் அங்கெல்லாம் மலம் மறைத்துக் கொண்டிருப்பதால் அதன் இருப்பு மற்ற இடங்களில் புலனாவதில்லை. இதனால், உடம்பு அளவிலேதான் ஆன்மா விளங்கி நிற்கும் என அறியலாம். உடம்பு அளவில் மட்டும் அறிவு நிகழ்வதால் ஆன்மா தன்னை உடம்பு அளவில் உள்ள சிறிய பொருளாக நினைக்கிறது. ஆனால், உண்மையில் அது வியாபகப் பொருளாகும். ஆன்மா என்ற சொல்லுக்கே வியாபகம் என்பது தான் பொருள்.

வியாபகத் தன்மையே இயற்கை நிலை :

குளத்தினுடைய விரிந்த நீர்ப்பரப்பு பாசியால் மூடப் பெற்றுக் கல் விழுந்த இடத்தில் சிறிய அளவில் விளங்கித் தோன்றுவது செயற்கை நிலையாகும். பாசி முழுதும் விலகி நீர்ப்பரப்பு முழுதும் உள்ளவாறு விளங்கித் தோன்றுவதே இயற்கை நிலையாகும். அதுபோல ஆன்மா ஆணவ மலத்தில் மறைப்புண்டு தனது வியாபகத்தை இழந்து உடம்பு அளவில் மட்டும் விளங்கி நிற்பது அதற்குச் செயற்கை நிலையாகும். மலம் முழுதும் நீங்கப் பெற்று ஆன்மா தனக்குரிய வியாபகத் தன்மையைப் பெற்று நிற்பதே அதற்கு இயற்கையாகும். முத்தி நிலையில் ஆன்மா மலத்தின் நீங்கிச் சிவத்தைத் தலைப்படும் காலத்தில் தனக்கு இயற்கையாய் உள்ள வியாபக நிலையை எய்தும். சிவத்தைப் போலவே அதுவும் எங்குமாய் நிற்கும்.

சீவன் முத்தியில் வியாபக உணர்வு :

உடம்போடு உள்ள சீவன் முத்திநிலையில், அம்முத்தரின் சீவ கரணங்கள் சிவகரணங்களாய் மாறி அவர்க்கு வியாபக உணர்வையே தந்து நிற்கும். அவ்வியாபக உணர்வினால் அவர் எல்லாவற்றிலும் சிவ முதற்பொருளையே கண்டு நிற்பர். எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி என வரும் அப்பர் சுவாமிகளின் வாக்கு இவ்வாறு கண்டு கூறியதாகும்.

பரமுத்தியில் எங்குமாய் நிற்றல் :

இனி, உடம்பு நீங்கிய பரமுத்தி நிலையில் அம்முத்தர் தமது வியாபகத்தை நேரே பெற்றுக் காலமும் இடமும் ஆகிய வரையறையின்றி, எங்குமாய், சிவனது வியாபகத்தில் கலந்து எப்பொழுதும் சிவானந்தத்தை இடையறாது நுகர்ந்து கொண்டிருப்பர். இந்நிலையை,

கண்ணுதல் தன் நிறைவதனில் கலந்து, காயம்
கழிந்தக்கால் எங்குமாய்க் கருது அரன்போல் நிற்பன்

எனச் சிவஞானசித்தி கூறும்.

96. உள்ளும் புறமும் சிவமே காணுதல்

உள்ளும் புறம்பும் ஒரு தன்மைக் காட்சியருக்கு
எள்ளும் திறம் ஏதும் இல்.

பொருள் : சிவஞானிகள் தம் அகத்தே சிவத்தைக் கண்டு நின்றாற்போலப் புறத்தேயும் எப்பொருளிலும் சிவத்தையே காண்பார்கள். இவ்வாறு அகம் புறம் என்னும் வேறுபாடின்றி ஒரே தன்மையாய்க் காணும் அவர்க்கு இகழ்தற்கு உரியதாக எப்பொருளும் இல்லை.

சொற்பொருள் :

உள்ளும் புறம்பும் - தம் அகத்தேயும், புறத்தே எப்பொருளிலேயும்
ஒரு தன்மைக் காட்சியருக்கு - சிவத்தையே காணும் ஒரு தன்மையாய உணர்வை உடைய சீவன் முத்தர்க்கு
எள்ளும் திறம் - இகழ்தற்கு உரியதான செயல்.
ஏதும் இல் - ஒன்றேனும் இல்லை. அஃதாவது, புறத்தே உள்ள பொருளிலும் அவர் சிவத்தையே காணுதலால் அப்புறப் பொருள் பற்றி வரக் கூடியதான காமம் வெகுளி மயக்கம் முதலிய குற்றங்கள் இல்லையாயின.

விளக்கம் :

தாயுமானவர் நிலை :

தாயுமானவர் வழிபாட்டிற்காகப் பூக்கொய்து வர நந்தவனம் சென்றார். அங்கே வெண்மையான நந்தியா வட்டை மலர்கள் மலர்ந்திருந்தன. அவற்றைப் பறிக்கக் கையைக் கொண்டு போனார். பார்க்கின்ற பொருள்களி லெல்லாம் இறைவனைக் காணுகிற பக்குவ நிலையை அடைந்து விட்டவர் தாயுமானவர். அதனால், பறிக்கப் போன மலர் ஊடும் அவன் இருப்பதைக் கண்டார். கண்டு, பரவச நிலையை அடைந்தார். அவனைக் கும்பிட எண்ணித் தமது இருகைகளையும் குவிக்கப் போனார். ஆனா<லும் அவ்வாறு செய்யவில்லையாம். ஏனெனில், அப் பனிமலர் இடையே இருந்த இறைவனை அவர்தம் அகமலரிலும் கண்டார். பனிமலரில் இருக்கும் இறைவனை வழிபடக் கைகுவிக்கும் போது அந்தக் கும்பிடு, குவித்த கைகளுக்குப் பின்னே அகமலரில் இருக்கும் இறைவனுக்குச் செய்யும் கும்பிடு ஆகாதே. உள்ளும் புறமும் உள்ள ஈசனை ஒரே நேரத்தில் கும்பிட்டால் அல்லவா அது முழுக்கும்பிடு ஆகும். அக மலரில் உள்ள ஈசனைக் கும்பிடாமல் புறமலரில் உள்ள ஈசனை மட்டும் கும்பிட்டால் அஃது அரைக்கும் பிடுதானே! இதனை எண்ணி நாணமுற்றார். பெருமானை எப்படி வழிபடுவது என்று திகைத்து நின்றார்.

பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி; அப்
பனிமலர் எடுக்க மனமும்
நண்ணேன்; அலாமல் இருகைதான் குவிக்க எனில்
நாணும் என் உளம் நிற்றி நீ;
நான் கும்பிடும் போது அரைக் கும்பிடு ஆதலால்,
நான் பூசை செய்தல் முறையோ?

எனத் தமக்கு ஏற்பட்ட அனுபவ நிலையைத் தாயுமானவர் பாடியுள்ளார். இதனால், பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரம்பொருள் ஆகிய சிவத்தை உள்ளும் புறமும் கண்டு இன்புற்றவர் அவர் என்பது விளங்கும்.

ஞான சம்பந்தர் நிலை :

ஞானசம்பந்தர் பூம்பாவையை எழுப்பிய அருள் வரலாறு நாமறிந்தது. என்பு நிறைந்த குடத்திலிருந்து அவள் எழுத வொண்ணாத எழிலோடு திருமகளைப் போல எழுந்து நின்றாள். அக்காட்சியினை ஞானசம்பந்தர் எப்படிக் கண்டிருப்பார்? சேக்கிழாரைத் தவிர வேறு யாரால் அதனைச் சொல்ல முடியும்? அவர் ஞான சம்பந்தரைப் பிரம தேவனோடு ஒப்பிட்டு, அவரது நிலை அவனால் எட்டமுடியாத ஞானப் பெருநிலை என்பதை எடுத்துக் காட்டுகிறார். பிரமதேவன் ஈடில்லா எழிலுடன் ஒரு பெண்ணைப் படைக்க எண்ணி அவ்வாறே திலோத்தமையைக் படைத்தான். அவள் அழகைப் பார்த்து அவனுக்கே ஆசை உண்டாகி விட்டது. அவனோ பல்லாயிரம் ஆண்டுகள் சென்ற படுகிழவன்; மேலும் வேதம் ஓதுபவன். அவனுக்கு வேதா என்ற பெயருண்டு. வேதம் ஓதியும் என்ன? தான் படைத்தவளைத் தனது மகளாகப் பார்க்கும் ஞானம் அவனுக்கு இல்லையே. அவன் காமத்தில் மூழ்கி அவளைத் தொடர, அவள் அஞ்சி ஓடி மறைந்தாள். அவளைத் தனது நான்கு முகங்களாலும் நான்கு திசையிலும் தேடினானாம்.

ஞானசம்பந்தப் பெருமான் சிவபெருமான் அருளால் பூம்பாவையைப் படைத்தார். அவருக்கு அப்போது வயது பதினாறு. உலகியலில் இந்த வயதுடைய எவருக்கும் இச்சை உண்டாவது இயல்பு. ஆனால், ஞானசம்பந்தர் அதனைக் கடந்த பெருமான். அவர் பதினாறு வயது நிரம்பியவராயினும் அந்தப் பதினாறு ஆண்டுகளும் வினைவயத்தால் உலக இச்சைக்கு ஆட்பட்டு அவமே கழிந்த ஆண்டுகள் அல்ல. அவை புண்ணியப் பதினாறு ஆண்டுகள். அதனால் அவருள்ளத்தில் பூம்பாவையின் உருவம் எந்த ஆசையையும் ஏற்படுத்தவில்லை. பிரமன் தன் படைப்பை எப்படிக் கண்டான் என்பதை முதலில் காட்டிய சேக்கிழார் அடுத்து ஞான சம்பந்தர் தான் படைத்த பூம்பாவையை எப்படிக் கண்டார் என்பதைச் சொல்லுகிறார்.

எண்ணில் ஆண்டு எய்தும் வேதா
படைத்து அவள் எழிலின் வண்ணம்
நண்ணு நான் முகத்தால் கண்டான்
அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினாறாண்டு பேர்பெறும்
புகலி வேந்தர்
கண்ணுதல் கருணை வெள்ளம்
ஆயிர முகத்தாற் கண்டார்.

அவர் பூம்பாவையிடம் மாயா காரியமாகிய உருவ அழகைக் காணவில்லை. எந்த வேட்கைக்கும் அவர் ஆட்படவில்லை. காமனை எரித்த கண்ணுதலுக்கு ஆட்பட்டவர் அல்லவா, அவர்? ஞானத்தின் முன் வேட்கை எங்ஙனம் தோன்றும்? அவர் பூம்பாவையின் வடிவத்தில் இறைவனது கருணை வெள்ளத்தையே கண்டாராம்.

பிரமன் தனது நான்கு முகங்களால் கண்டான். சம்பந்தரோ ஒரு முகம் உடையவர்தாம் என்றாலு<ம் ஆயிரம் முகம் கொண்டு கண்டாராம்! பிரமன் கண்டது எழிலின் வண்ணம். சம்பந்தர் கண்டதோ கருணை வெள்ளம்! பிரமதேவனின் இழிந்த நிலை எங்கே! ஆளுடைய பிள்ளையாரின் ஞானநிலை எங்கே! நமது அறிவு சிற்றறிவு ஆகும். வரம்புடைய இவ்வறிவினால் வரம்புடைய உலகப் பொருள்களையே அறிய இயலும். எங்கும் நீக்கமற நிறைந்த, வரம்பில்லாத சிவ பரம்பொருளை உணர்தற்குச் சிற்றறிவு உதவாது. வரம்பில்லாத ஞானத்தாலேயே வரம்பில்லாத அப்பெரும்பொருளை அறிய முடியும். ஞானசம்பந்தப் பெருமான் சிற்றறிவு ஒழிந்து, வரம்பில்லாத ஞானத்தை - பேருணர்வைப் பெற்றவர். அப்பேருணர்வால் அவர் பார்க்கின்ற பொருளிலெல்லாம் சிவ முதற் பொருளையே கண்டார். அது பற்றியே சேக்கிழார் ஆயிரம் முகத்தாற் கண்டார் என்று வியந்தும் நயந்தும் கூறினார். மெய்யுணர்ந்தார் உள்ளும் புறம்பும் ஒரு தன்மைக் காட்சியராய் விளங்குவர் என்பதை ஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் வாழ்வில் வைத்து அனுபவமாகக் காணலாம்.

எள்ளும் திறம் இல்லை :

மலம் நீங்காத நமக்கு நிலையற்ற பொய்ப் பொருளாகிய உலகப் பொருள்களே புலப்படும்; அப் பொருள்களின் ஊடே கலந்திருக்கும் மெய்ப் பொருளாகிய சிவம் தோன்றுவதில்லை. பொய்ப் பொருளைக் காணாது அதிற் கலந்திருக்கும் மெய்ப் பொருளாகிய இறைவனைக் காணுதல் வேண்டும். அதுதான் அறிவு என்று தெளிவுறுத்துகிறார் திருவள்ளுவர்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

அம்முறையில் சீவன் முத்தர் மாயா காரியமாகிய பொய்ப் பொருளைப் பற்றாது, அவற்றில் கலந்திருக்கும் சிவம் ஒன்றையே கண்டு நிற்பர். அவர்க்கு உலகமே சிவமயமாய்த் தோன்றும். ஆதலால் எப்பொருளிடத்தும் அவர்க்கு விருப்பேனும் வெறுப்பேனும் நிகழ்தல் இல்லை. அவர்கள் எவரையும் வெறுக்க மாட்டார்கள். பிறர் தமக்குத் தீங்கு செய்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். விரல் தவறுதலாகக் கண்ணைக் குத்தி விடுகிறது. அதற்காக விரலை நறுக்கி எறிகிறோமா? சில சமயம் பல் நாக்கைக் கடித்து விடுகிறது. அதற்காகப் பல்லைத் தட்டி எறிகிறோமா? நாம் அப்படிச் செய்வதில்லை. கண்ணும் விரலும், நாவும் பல்லும் ஒரே உடலைச் சேர்ந்தவை. அது போல ஞானிகளும் எல்லோரையும் தம்மவராக நினைப்பவர்; எல்லோர் மீதும் கருணை காட்டுவர். மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும் செல்வக் கடவுள் தொண்டர் அவர்கள்.

97. உறுந்தொழிலும், வறுந்தொழிலும்

உறுந்தொழிற்குத் தக்க பயன் உலகம்; தத்தம்
வறுந்தொழிற்கு வாய்மை பயன்.

பொருள் : உலகர் எச்செயலையும் பற்றோடு செய்வர். பற்றோடு கூடிய அச்செயலுக்குப் பயன் உலகமாகும். அணைந்தோர் அருள் வழியில் நின்று, எச்செயலையும் பற்றின்றிச் செய்வர். அவர் செயலு<க்குப் பயன்மெய்ப் பொருளாகிய சிவமேயாகும்.

சொற்பொருள் :

உறும் தொழிற்கு - உலகர் முனைப்போடு பொருந்திப் பற்றோடு செய்யும் தொழில்களுக்கு
தக்க பயன் - ஏற்ற பயன்
உலகம் - இன்ப துன்பமாகிய உலக நுகர்ச்சியாகும்.
தம் தம் வறும் தொழிற்கு - அணைந்தோர் அங்ஙனம் முனைந்து செய்யாது, திருவருள் செ<லுத்திய வழியிலே சென்று, பற்றில்லாமல் செய்யும் தொழில்களுக்கு
பயன் - ஏற்ற பயன்
வாய்மை - மெய்ப் பொருளாகிய சிவமேயாகும்.

விளக்கம் :

உறுந்தொழில், வறுந்தொழில் - பொருள் :

தொழிலை உறுந்தொழில் எனவும், வறுந்தொழில் எனவும் இரண்டாக வகுக்கின்றார் ஆசிரியர். உறுந்தொழில் என்பது பற்றோடு பொருந்திச் செய்யும் செயல். வறுந்தொழில் என்பது பற்று இல்லாது செய்யும் தொழில். வறுமை என்பது இன்மை எனப் பொருள்படும். பொதுவாகப் பொருளின்மையே வறுமை எனப்படும். இங்கே பற்றின்மையே வறுமை எனப்பட்டது. எனவே பற்றின்மையோடு செய்வது வறுந்தொழிலாயிற்று. உலகோர் செய்வதெல்லாம் உறுந்தொழில். ஞானிகள் செய்வதெல்லாம் வறுந்தொழில்.

வறுந்தொழிலுக்கு எடுத்துக்காட்டு :

வறுந்தொழில் என்பதனை விளக்கும் நிகழ்ச்சி ஒன்றைக் குறிப்பிடுவோம். வலைத்தொழில் புரியும் பரத குலத்தில் வந்தவர் அதிபத்தர் என்ற அடியார். அவர் மெய்யுணர்வு பெற்றுச் சிவபத்தியில் மேலோங்கி நின்றார். மீன் பிடித்தலின் ஊடாகவே அவர் சிவத் தொண்டுக்கும் வழிவகை கண்டு அதனை நாடோறும் செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் தம் ஏவலர்கள் கடலிற் போட்டு இழுக்கும் வலையில் அகப்படும் மீன்களில் முதன்மையானதொன்றை இது நட்டம் ஆடிய நம்பருக்கு என்று கூறி விடாத அன்புடன் அதனை மீளவும் கடலில் விட்டுவிடும் நியமம் பூண்டிருந்தார்.

திருவருட் செயலால் ஒரு கால கட்டத்தில் பல நாட்கள் தொடர்ந்து ஒரே ஒரு மீன் மட்டும் அவர் வலையிற் படுவதாயிற்று. அதனையும் சிவனுக்கென்றே கடலில் மீளவும் விட்டு வந்தார். இதனால் அவரது வருமானம் குறைந்தது. உணவுக்கும் வழியில்லாத நிலை வந்துற்றது. அவரும் அவரது சுற்றத்தாரும் பசியால் வாடினர். இங்ஙனம் தளர்ந்து வாடும் நிலை எய்திய போதும் அவர் தமது தொண்டு நிலையில் சிறிதும் தளரவில்லை. ஒருநாள் பொன் மீன் ஒன்று அவர் வலையில் அகப்படுவதாயிற்று. அவ்வற்புத மீன் அவரிடத்தில் எத்தகைய பற்றுதலையும் ஏற்படுத்தவில்லை. அதனைக் கொண்டு தமது வாழ்வை வளப்படுத்திக் கொள்ளலாம் என்ற ஆசை சிறிதும் எழவில்லை. இந்த அரிய மீன் சிவனுக்கே உரியது எனக் கொண்டு சென்று சேர்க சிவன் கழற்கே என்று கூறி அதனை அலை கடலில் விட்டார். இவ்விடத்தில் உலகத்தாரின் நிலையை எண்ணிப் பாருங்கள். பெரும்பாலான மக்கள் மதிப்பது பொருள் ஒன்றைத்தான். பொருள் இருந்தால் பல காலத்திற்குக் கவலையின்றி வாழலாம் என்ற எண்ணத்தினால் பொருளை மேலும் மேலும் சேர்க்கிறார்கள். நன்றாக வாழ்கிறவர்கள் என்று பொருள் படைத்தவர்களைச் சொல்கிறார்கள். பொருள் இல்லாதவர்களை வாழத் தெரியாதவர்கள் என்கிறார்கள். பொருள் இருந்தால் போதும். எல்லா வகையான போகங்களையும் பெறலாம். பதவியும் மதிப்பும் பாராட்டும் அவர்களைத் தேடிவரும். இக்காலத்தில் மட்டும்தான் இப்படி என்று எண்ண வேண்டாம். இந்நிலை எல்லாக் காலத்திலும் உண்டு. அகிலலோகமும் பொருள் முதற்றாம் என்று சேக்கிழாரும் சொல்லுகிறார்.

பற்றுகிற பற்றுக்கள் பலவற்றுள்ளும் தலைப்பற்றாகப் பொருட்பற்றையே பற்றும் இவ்வுலகில் அதனைத் தூக்கியெறிந்தவர் அதிபத்தர் என்பதை மேற்கூறிய வரலாறு புலப்படுத்தும். உலகமெலாம் விலை போகக் கூடிய பொன் மீன் கிடைக்கவும் சிறிதும் பற்றுதல் இல்லாமல் அதனைப் போகவிடுத்த அவர் செயல் வறுந்தொழில் என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாய் அமைகிறது. வறுந்தொழில் செய்ய மாட்டாது உறுந்தொழிலே செய்வது உலகர்நிலை. அவர்க்கு உலகமே பயனாகும். அஃதாவது அவர் உலகில் மீளமீளப் பிறந்து இன்ப துன்பங்களை மாறிமாறி நுகர்வர் என்பது கருத்து. அணைந்தோர் ஆகிய அடியவர்கள் புறத்தே உலகர் போலவே வாழ்ந்தவராயினும் பிற தொழில்களைச் செய்து ஒழுகினாராயினும், அவர்க்குச் சிவமே நுகர்ச்சிப் பொருளாகும் என்பது கூறப்பட்டது.

குறிப்பு : இச் செய்யுளில் வாய்மை என்றது மெய்ப் பொருளாகிய சிவத்தைக் குறிக்கும்.

98. வினை நீங்கும் முறைமை

ஏன்றவினை உடலோடு ஏகும்; இடையேறும் வினை
தோன்றில் அருளே சுடும்.

பொருள் : இப்பிறப்பில் நுகர்தற்கு என்று முகந்து கொண்டு வந்த பிராரத்த வினைகள் சீவன் முத்தர்க்கு இவ்வுடம்பு இருக்கும் வரையில் இருந்து, அவரால் பற்றின்றி நுகரப்பட்டு இவ்வுடம்பு நீங்குங் காலத்தில் முடிந்தொழியும். அவர் பிராரத்த வினையை நுகரும்போது புது வினையாகிய ஆகாமியம் தோன்றுமாயின் அதனைத் திருவருளே எரித்துவிடும்.

சொற்பொருள் :

ஏன்ற - (இப்பிறப்பில் நுகர்தற் குரியனவாக முகந்து கொண்டு வந்த)
வினை - பிராரத்த வினைகள்
உடலோடு ஏகும் - சீவன் முத்தர்க்கு இவ்வுடம்பு நீங்கும் காலத்து நுகரப்பட்டுக் கழியும்
இடை - அவர் அப் பிராரத்த வினையை நுகரும்போது இடையில்
ஏறும் வினை - புதிதாய் உண்டாகக் கூடிய ஆகாமிய வினை
தோன்றில் - தோன்றுமாயின் (அது வளர்ந்து சஞ்சிதமாய் முற்றாதவாறு)
அருளே சுடும் - திருவருளே அதனை விரைய அழிக்கும்.

விளக்கம் :

வினை தோன்றி வளரும் முறை :

இப்பிறப்பில் நாம் நல்லனவும், தீயனவும் ஆகிய செயல்களைச் செய்கின்றோம். அச்செயல்களைச் சில பயன்களை விரும்பிச் செய்கின்றோம். நன்மைகளை வருவித்தற்காகச் சில செயல்களை செய்கின்றோம். தீமைகளைப் போக்கிக் கொள்வதற்காகச் சில செயல்களைச் செய்கின்றோம். இப்படிச் செய்யும் செயல்கள் ஆகாமியம் எனப்படும். அவை உடனே அழிந்து விடுவதாக நாம் நினைக்கிறோம். அப்படியன்று. அவை நிகழும் பொழுது கண்ணுக்குப் புலப்படுகின்ற நிலையில் உள்ளன. பின், புலப்படாத நிலையை அடைந்து நிற்கின்றன. எனவே அவை அடியோடு இல்லாமல் அழிந்து போய் விடவில்லை. புலப்படுகின்ற தூல நிலையிலிருந்து நீங்கிப் புலப்படாத சூக்கும நிலையில் உள்ளன என்பதே உண்மையாகும். புலப்படாத அந்நிலையில் அவை சஞ்சிதம் எனப் பெயர் பெறுகின்றன. பலப்பல பிறப்புக்களில் செய்யப்பட்டுக் கிடக்கும் வினைகளின் தொகுப்பே சஞ்சிதம் ஆகும்.

சஞ்சிதம் முழுதும் ஒரே பிறப்பில் பயனாய் வருதல் இல்லை. அத்தொகுப்பிலிருந்து ஒரு சிறு பகுதியை முகந்து கொண்டு ஒரு பிறப்புத் தோன்றும். அவ்வாறு பழவினையினின்றும் முகந்து கொண்ட வினைகள் பிராரத்தம் என்ற பெயரைப் பெறும். அவை இன்பத் துன்பமாகிய பயனை விளைவிக்கும். இவ்வாறு வினைகள் ஆகாமியமாய்த் தோன்றி, சஞ்சிதமாய்க் கிடந்து, பிராரத்தமாய் வந்து பயன் கொடுக்கும்.

பிராரத்தம் இப்பிறப்பில் நன்மையாகவோ, தீமையாகவோ வந்து பொருந்தும் பொழுது, நாம் முன்பு செய்த செயலே இவ்வாறு பிராரத்தமாய் விளைகிறது என்று யாரும் எண்ணுவதில்லை. அதனை இறைவன் ஊட்டுகிறான் என்றும் எண்ணுவதில்லை. அந்த நேரத்தில் அதற்குக் காரணமாய் நிற்பவர் யாரோ அவர் மேல் விருப்போ வெறுப்போ கொள்ளுதல் மாந்தர் இயல்பு. அவ்விருப்பு வெறுப்புக்கள் சொல்லாய் வெளிப்படும். செயலாய் நிகழும். அவையே ஆகாமிய வினையாய்ப் பின் சஞ்சிதமாகும். இவ்வாறு வினைகள் ஏறிக் கொண்டே போகும். பிராரத்தத்தை விருப்பு வெறுப்போடு அனுபவிக்கின்ற நிலையில் ஆகாமியம் தோன்றும் என அறிந்தோம். இங்கே ஓர் ஐயம் எழலாம். ஞானிகளாகிய சீவன் முத்தர்க்கு உடம்பு <உள்ள வரையில் பிராரத்த வினை இருக்கும். அஃது இருக்கின்ற வரையில் அதனது தாக்கமும் இருக்கும். அங்ஙனம் பிராரத்த வினை தாக்கும்பொழுது அதனை அனுபவிக்கின்ற நிலையில் ஆகாமியம் தோன்றவே செய்யும். அவ்வாறாயின் ஞானிகள் வினைத் தொடர்பிலிருந்து எங்ஙனம் நீங்க முடியும் என்பதே அவ்ஐயம். அவர்கள் தமக்கு வரும் பிராரத்தத்தை எப்படி அனுபவிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால் இதற்கு விடை கிடைத்து விடும்.

பிராரத்த வினையின் தாக்கம் :

இங்கே ஒன்றைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். பிராரத்தம் நேரே உயிரைத் தாக்குவதில்லை. அஃது உடலில் நோய் முதலியவற்றைத் தோற்றுவித்து உடல் மூலமாகவே உயிரைத் தாக்கும். ஒருவர் ஒழுக்கமாக வாழ்க்கை நடத்துகிறார். ஒழுங்கான உணவுப் பழக்கம் வைத்திருக்கிறார். எந்தத் தீய பழக்கமும் அவரிடம் இல்லை. ஆயினும் அவருடலில் எப்படியோ நோய் வந்து பற்றுகிறது; அவரை வாட்டி வருத்துகிறது. முன்னை வினையாகிய பிராரத்தம் இப்பொழுது இவ்வாறு வந்து தாக்குகிறது என்று சொல்வதைத் தவிர வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? பட்டினத்தார் அவ்வாறுதான் நினைத்தார். அவர் அறிய எந்தத் தவறும் செய்யவில்லை. ஆயினும் அவர்மேல் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டது. அந்தத் துன்பத்தை அனுபவிப்பதற்குரிய எந்தச் செயலையும் இந்தப் பிறவியில் அவர் செய்ததாகத் தெரியவில்லை. ஆகவே முந்திய பிறவியிற் செய்த வினையே இதற்குக் காரணமாக இருக்கவேண்டும் என்று தெளிந்தார். இறைவனே, என் செயலென ஒன்றும் இல்லை. எல்லாம் உன் செயல் என்று உணர்ந்து கொண்டேன். இந்த உடம்பு எடுத்த பிற்பாடு நான் செய்த தீவினை ஒன்றும் இல்லையே. நான் முன் பிறவியிற் செய்த தீவினையே இப்படி வந்து மூண்டது போலும் என்று கூறினார்.

உயிர் ஊழாய்க் கழிதல் :

முன்னை வினையாகிய பிராரத்தம் இவ்வாறு உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொழுது உடம்பே நாம் என்று மயங்கியிருப்பவர்களே உடலு<க்கு வந்த துன்பத்தை உயிராகிய தமக்கு வந்ததாகக் கருதித் துவண்டு போவார்கள். பிராரத்தம் உடல் வழியாக இப்படி உயிரைத் தாக்குகிறது. இங்ஙனம், வினைகள் உயிரைத் தாக்கித் தம் பயனைக் கொடுத்து நீங்குதலை உயிர் ஊழாய்க் கழிதல் என்பார்கள்.

உடல் ஊழாய்க் கழிதல் :

சீவன் முத்தராகிய ஞானிகள் உடல் நாமல்ல எனத் தெளிந்து, உடலில் பற்றின்றி யிருப்பர். அதனால் பிராரத்தம் அவரது உடலை நலிகின்ற போது அவர் கவலையற்றிருப்பர். மேலும் அவர் பிராரத்தம் விளையும் போது நன்மையைக் கண்டு விரும்புதலும் இல்லை; துன்பத்தைக் கண்டு வெறுத்தலும் இல்லை. அப்படிப்பட்ட அவரைப் பிராரத்தம் எப்படித் தாக்கும்? இங்ஙனம் பிராரத்தம் உயிரைத் தாக்க மாட்டாது அவரது உடல் அளவில் பயனைக் கொடுத்து நீங்குதலை உடல் ஊழியாய்க் கழிதல் என்பார்கள்.

மூவகை வினையும் ஒழிதல் :

இவ்வாறு ஞானிகள் பிராரத்தவினை தோன்றினால் அதனை அவனது அருளாகவே கருதி அனுபவிப்பதல்லது இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் வாட்டமோ கொள்வதில்லை. இங்ஙனம் பற்றின்றி அனுபவிக்கவே, அஃது உடல் ஊழாய்க் கழியும். அஃது அவர்களது உணர்வைத் தாக்காது உடல் அளவாய் ஒழிதலால், ஆகாமியத்தை உண்டாக்காது. எப்போதாயினும் சோர்வு காரணமாக விருப்பு வெறுப்புத் தோன்றி அது காரணமாக ஆகாமியம் தலையெடுக்குமானால், அருளே அதனைச் சுட்டழித்து விடும். மூவகை வினையுள், சஞ்சிதமாகிய கிடைவினை முழுதும், முன்னே ஞானகுரு நிருவாண தீக்கை செய்து ஞானத்தை அளித்த காலத்தில் அவரது அருட் பார்வையால் எரிக்கப்பட்டு ஒழிந்தது. சஞ்சிதம் போக, பிராரத்தமும் ஆகாமியமும் உள்ளன. அவ்விரண்டின் நிலை என்ன என்பதை இச் செய்யுளில் கூறியுள்ளார் ஆசிரியர். ஏன்றவினை என்றது பிராரத்த வினையே. இடையேறு வினை என்றது ஆகாமியத்தை. பிராரத்தம் அனுபவத்தால் தீரும். அதனை விருப்பு வெறுப்பின்றி அனுபவிப்பதனால் ஆகாமியம் தோன்ற வழியில்லை. ஒருக்கால் தோன்றுமாயின் அருளே அதனைச் சுட்டழிக்கும் என்பது இச்செய்யுளில் கூறப்பட்டது. வினையினால் உண்டாவதே பிறப்பு. சீவன் முத்தர்க்கு மூவகை வினையும் மேற்கூறியவாறு தீர்தலின், அவர்கள் உடம்பு நீங்கிய பின் அடைவது வீடு பேறேயன்றிப் பிறவி யன்று என்பது இதனால் விளங்கும்.

99. அந்நிலையை இந்நிலையில் அடைதல்

மும்மை தரும் வினைகள் மூளாவாம் மூதறிவார்க்கு;
அம்மையும் இம்மையே யாம்.

பொருள் : வினைகள் இம்மை, அம்மை, மறுமை என்னும் மூவகைப் பயனையும் தருவன. அவ்வினைகள் உயர்ந்த ஞானம் உடையவரிடத்தில் மூண்டு வளர்தல் இல்லை. அதனால் அவர்க்கு இவ்வுடம்பு நீங்கிய பின் எய்தும் பேரின்ப நுகர்ச்சியாகிய பரமுத்தி நிலை இவ்வுடம்பு உள்ள இப்பொழுதே உண்டாவதாகும்.

சொற்பொருள் :

மும்மை - உடம்போடு இவ்வுலகில் வாழும் நிலையாகிய இம்மை, இறந்த பின் சுவர்க்கம், நரகம் ஆகிய உலகங்களிற் செல்லும் நிலையாகிய அம்மை, மீள இந்நிலத்திற் பிறக்கும் நிலையாகிய மறுமை ஆகிய மூவகைப் பயனையும்
தரும் - நம் போல் வார்க்குத் தரக்கூடிய
வினைகள் - வினைகள்
மூதறிவார்க்கு - உயர்ந்த ஞானம் உடையவரிடத்தில்
மூளா - வளரமாட்டா
(அதனால்)
அம்மையும் - அவர்களுக்கு உடம்பு நீங்கிய பின் எய்தும் பேரின்ப நிலையாகிய பரமுத்தி நிலை
இம்மையே - உடம்பு <உள்ள இப்பொழுதே
ஆம் - உண்டாகும்.

விளக்கம் :

முகந்து வந்த வினை தம் பயனைத் தந்து முடிவெய்தும் வரையில் இவ்வுடம்போடு இவ்வுலகில் வாழும் நிலை இம்மை எனப்படும். இறந்த பின் வேறுடல் கொண்டு சொர்க்கம் நரகம் ஆகிய உலகங்களில் சென்று, வினைக்கேற்றபடி அங்குள்ள இன்ப துன்பங்களை அனுபவிக்கும் நிலை அம்மை எனப்படும். அவ்வாறு அனுபவித்த பின் எஞ்சியுள்ள வினைக்கேற்ப மீளவும் இந்நிலத்தில் வந்து பிறக்கும் நிலை மறுமை எனப்படும்.

துறக்கப் படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு
இறப்பன்; இறந்தால் இருவிசும்பு ஏறுவன்; ஏறி வந்து
பிறப்பன்; பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன் கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே (4:113:8)

என்பதில் இம்மை, அம்மை, மறுமை ஆகிய மூன்றும் ஒருவாறு கூறப்பட்டுள்ளமை காணலாம். இம் மூவகைப் பயனையும் தருவனவாகிய வினைகள் உடம்பின் மேல் பற்றுடையார்க்கே மூளும்; அவருணர்வையே தாக்கும். சீவன் முத்தராகிய சிவஞானிகளுக்கு உடலின் கண் பற்று இன்மையால் வினைகள் மூள்வதில்லை. அவருணர்வை வேறுபடுத்தவதில்லை; அவர் நுகரும் சிவானந்த நுகர்ச்சிக்கும் தடையில்லை. அது பற்றியே அம்மையும் இம்மையே யாம் என்றார் ஆசிரியர்.

அம்மை என்பதற்கு வேறு உலகங்களிற் செல்லும் நிலை என்று மேலே பொருள் கூறினோம். அதுவே அச் சொல்லு<க்குரிய நேரான பொருள். ஆயினும் அம்மையும் இம்மையே யாம் என்ற தொடரில் அம்மை என்பது வேறு உலகங்களில் செல்லு<ம் நிலையைக் குறிக்காமல் பரமுத்தி நிலையைக் குறிக்கும் வகையில் ஆளப்பட்டுள்ளது. இம்மை என்பது சீவன் முத்தி நிலையைக் குறிப்பதாகும். சீவன்முத்தி நிலையும் பரமுத்தி நிலையும் ஒன்றேயாம் என்பது அத் தொடரின் கருத்தாகும். பரமுத்தி என்பது உடம்பை விட்டு இறைவனோடு கலந்து முத்தியின்பத்தை நுகர்ந்து கொண்டிருக்கும் நிலையாகும். சீவன் முத்தி என்பது உடம்பு உள்ள போதே முத்தியின்பத்தை நுகரும் நிலையாகும். பரமுத்தியில் உடம்பு இல்லை; சீவன் முத்தியில் உடம்பு உண்டு. அவ்வளவே வேறுபாடு. பேரின்ப நுகர்ச்சியின் தன்மையில் இவ்விரண்டிற்கும் வேறுபாடு என்பது அறவே இல்லை. இதனால் பரமுத்தியை அடைந்தோர் உடம்பு நீங்கிப் பெறும் இன்பத்தைச் சீவன் முத்தர் உடம்போடு நின்றே பெறுகின்றனர் என அறியலாம். சீவன் முத்தர்க்குப் பிராரத்தவினை உள்ள வரையில் உடம்பு இருக்கும். பிராரத்தவினை முடிந்தால், உடம்பு வீழ்ந்து விடும். உடம்பின் வீழ்ச்சி, மேலும் வினையுடைய <உலகர்க்கு இறப்பு எனப்படும். வினையில்லாத சீவன் முத்தர்க்கு வீடுபேறு அல்லது பரமுத்தி என்று சொல்லப்படும்.

100. உலகின்மேல் கருணை

கள்ளத் தலைவர் துயர் கருதித் தம்கருணை
வெள்ளத்து அலைவர் மிக.

பொருள் : உலக மாந்தர் இறைவனை மறந்து தம்மையே தலைவராகக் கருதி நான் எனத் தருக்கி வாழ்வர். அத்தருக்கினால் விளைவது வினையாகும். அவ்வினையினால் விளைவது துன்பமே யாகும். இவ்வாறு மாந்தர் தம் அறியாமையினால் படும் துன்பத்தைக் கண்டு ஞானிகள் அவர் மீது இரக்கம் கொள்வர். அவ்இரக்க மிகுதியால், அவர் கேட்பினும் கேளாது போயினும், அவர்க்கு உண்மையினை எடுத்துரைக்க முற்படுவர். கனிவாகவும் சில சமயங்களில் கடுமையாகவும் அறிவுரை கூறுவர். இவ்வாறு சிவனை அணைந்தோர் சிவனைப் போலவே பேரருள் உடையவராய் இருந்து உலகிற்கு உய்யும் நெறி காட்டுவர்.

சொற்பொருள் :

கள்ளத் தலைவர் - எச்செயலுக்கும் தம்மையே தலைவராகக் கருதி, இறைவனுக்குரிய தலைமையைத் தமதாக்கித் கொள்ளுகின்ற அறியாமையை உடைய <உலக மாந்தர்
துயர் கருதி - அவ்வறியாமை காரணமாகப்படும் துன்பத்தை எண்ணி
தம் கருணை வெள்ளத்து - (சிவனை அணைந்தோராகிய ஞானிகள்) தமது இரக்க மிகுதியால்
மிக அலைவர் - மிகவும் பரிவுகொண்டு உய்யும் நெறியைக் காட்ட முற்படுவர்.

விளக்கம் :

சிவத்தை அணைந்து இன்புறுபவர்கள் மற்ற மாந்தரைப் போலவே உடம்புடன் உலகில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று, இந்த உலகையும் உடலையும் மறந்து இன்பத்தில் தோய்ந்திருக்கும் நிலை. மற்றொன்று, அந்த நிலையிலிருந்து மீண்டு உலக நினைவுக்கு வரும் நிலை. முன்னைய நிலை பேசாத மோன நிலை; ஆனந்த நிலை. பின்னைய நிலை அருள் நிலை; உலக நினைவுக்கு வந்து பேசும் நிலை. பேசுகிற நிலைக்கு வரும் போது அவர்கள் தாம் பெற்ற சொல்லொணாத இன்ப அனுபவத்தினை உலகத்திற்கு உணர்த்தி நிற்பர். மேலும் உலகத்தார் நிலையைக் காணும்போது அவர்கள் மேல் கருணை கொண்டு அறிவுறுத்த முற்படுவர். அவர்கள் உள் முகமாக ஒன்றி நுகர்ந்த அனுபவத்தை வெளிமுகத்துக்கு வந்து கூறும்போது தாம் பெற்ற இன்பத்தைப் பெருமித உணர்ச்சியோடு பேசுவார்கள். பருந்து தன் இரு சிறகுகளையும் விரித்து எல்லையற்ற வானத்தில் எந்தப் பறவையும் செல்லாத உயரத்தில் பறந்து மிதப்பதைப் போன்றது அந்த நிலை. இனி உலகத்தார் படுந்துன்பங்களை உளங்கொண்ட போது அவர்கள் உள்ளத்தில் கருணை பிறக்கும். அப்போது மக்களைப் பார்த்துப் பயனற்ற வழியில் செல்லாதீர்கள்; இப்படிச் செல்லுங்கள் என்ற உபதேசம் பிறக்கும்.

புகழும் செல்வமும் சேர்த்த மருத்துவர் ஒருவர் நோயாளிக்கு என்று பெரிய மருத்துவமனை கட்டியிருப்பார். தனக்கு என்று தனியே ஒரு மாளிகையை அமைத்துக் கொண்டிருப்பார். தன்னுடைய வளமனையில் இருக்கும்போது அவர் அங்குள்ள வசதிகளை அனுபவித்துக் கொண்டு கவலையின்றியிருப்பார். அவரைப் பார்த்தால் மருத்துவர் என்றே சொல்ல முடியாது. அவரிடம் மருத்துவருக்குரிய கோலத்தைப் பார்க்க முடியாது. கழுத்திலே கருவியை மாட்டியிருக்க மாட்டார். கையிலே மருந்துச் சீட்டு வைத்திருக்க மாட்டார். ஒரு செல்வரைப் போலத் திகழ்வார். அவரே மருத்துவமனைக்கு வந்து விட்டால் அவர் நிலையே வேறாக இருக்கும். அவரது கருத்தெல்லாம் நோயாளிகளின் மீதே இருக்கும். நோயின் தன்மையைக் கண்டறிந்து அவரவர் நிலைக்குத் தகுந்தபடி மருந்து எழுதிக் கொடுப்பதிலேயே அவர் மூழ்கியிருப்பார். அந்த மருத்துவரைப் போலச் சீவன் முத்தராகிய ஞானிகளும் திருவருள் இன்பமாகிய மாளிகையிலேயே எப்பொழுதும் திளைத்திருக்க மாட்டார்கள். உலகமாகிய மருத்துவமனையில் நடமாடும் நோயாளிகளைக் குணப்படுத்த வருவார்கள். அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற கருணையினால் உபதேசம் என்ற நன் மருந்தினைத் தருவார்கள்.

ஞானசம்பந்தப் பெருமான் அப்படிப்பட்டவர். இம்மையிலே இன்பமாய் வாழலாம் என்பதைப் பல இடங்களில் வலியுறுத்தி மக்களுக்கு நம்பிக்கை யூட்டியவர். உங்களுக்கு உடற் பிணி தீர வேண்டுமா? திருக்கானப்பேர் என்ற தலத்திற்குச் சென்று வழிபாடு செய்யுங்கள் என்கிறார் அவர். யார் போனாலும் உறுபிணியைப் போக்கிக் கொள்ள முடியுமா? எனில், போய் வழிபடுகிற முறையிலே வழிபட்டால் பயன் உண்டாகும். கைகளிலே வெறும் மலர்களை எடுத்துச் சென்றால் போதாது. உள்ளத்தில் ஞானமாகிய மலரை ஏந்திச் சென்று பூசிக்க வேண்டும். ஞான மலர் என்பது என்ன? திருக்கானப் பேர் இறைவனே நமக்கு எல்லாம் தருபவன் என்ற உறுதி வரவேண்டும்; அவன் பிறவி நோயையே போக்கவல்ல பெருமான். அவன் உடம்பில் உற்ற பிணியையும் கெடும்படி செய்வான் என்ற தெளிவு வரவேண்டும். இந்தத் தெளிந்த அறிவே ஞானம். அதுவே ஞானமலர். அந்த மலரோடு சென்று, மனம் பொருந்திச் செய்யும் வழிபாடே நற்பயனைத் தரும்.

மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்
கானமார் கடகரி வழிபடும் கானப்பேர்
ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெட எண்ணின்
ஞானமா மலர் கொடு நணுகுதல் நன்மையே.

அணைந்தோராகிய பெருமக்கள் உலகின் மேல் கருணை கொண்டு அறிவுறுத்த முற்படுவர் என்பதனை இது போலும் திருமொழிகளான் உணரலாம்.

-திருச்சிற்றம்பலம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement