Load Image
Advertisement

சீரடி சாயி நாதா ஸ்மரணம்!

ஸாயிபாபா ஸர்வாந்தார்யாமி, (எங்கும் வியாபித்திருப்பவர்) முற்றும் அறிந்த ப்ரஹ்ம ஞானி, பஞ்ச பிட்சகர் (ஒரு நாளில் ஐந்து வீடுகளில் மட்டுமே பிட்சை வாங்குவார் என்பதால் இந்தப் பெயர்), நிரதாக்னி ஹோத்தரன் (ஷீர்டியில் அவரருகே துனி எப்பொழுதும் எரிந்துகொண்டே இருக்கின்ற காரணத்தால் அவரை இப்படியும் அழைப்பர்), அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர், தியான ஸ்வரூபி, அவரே பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரன், அப்படிப்பட்ட சாயிநாதரை ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து நாம் வழிபடுவோம். ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு சாயிநாத் மஹராஜ்கீ ஜய்!

தேவர்களும் பிறப்பெடுக்க விரும்பும் மானிட பிறப்பில், செய்வதற்கு எத்தனையோ இருக்கின்றது. இது தெரியாமல் மாயையில் திளைத்து பொறாமை, கோபம், துவேஷம், உதாசீனப்படுத்துதல் போன்ற செயல்களில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம்.

புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பது போல், இந்த லோகத்தில் பிறப்பதும், இறப்பதுமான சுழற்சி நடந்து கொண்டிருக்கிறது. இறப்பது மறுபடியும் பிறப்பதற்கா? எதற்காக இந்த மனித ஜென்மம் எடுத்திருக்கிறோம்? என்று கேட்கிறார் சாயிபாபா. ஒரு தடவை நிதானமாக யோசியுங்கள். நிரந்தரம் இல்லாத ஈனமான, அருவருப்பான ஒரு விநாடி சந்தோஷத்திற்கு அடிமையாகி இருக்கிறோமே தவிர, நிரந்தரமான சந்தோஷம் ஒன்று இருக்கிறது என்பதை அறியவில்லை. அதை முயற்சி செய்து அடைய இந்த மானிட ஜென்மத்தை உபயோகித்துக் கொண்டிருக்கிறோமோ?

க்ருதே ஜனார்த்தனோ, த்ரேதாயாம் ரகு நந்தன:
த்வாபரே ராம கிருஷ்ணௌச
கலௌ ஸ்ரீ ஸாயிநாத:

க்ருத யுகத்தில் சமதா (உள்ளம், உடல் இவற்றின் தனித்தன்மை) மூலமும், த்ரேதாயுகத்தில் யாகத்தின் மூலமும், த்வாபர யுகத்தில் பூஜை முறையிலும் தெய்வ வழிபாடுகள் நடைபெற்றது. தற்போது கலியுகத்தில் நாமஸ்மரணை மட்டும் போதும் என்கிறார் சாயி.

நாமஸ்மரணையிலும் குண நாமஸ்மரணம் விசேஷம். யாருடைய நாமத்தை ஸ்மரணை செய்கிறோமோ, அவர்களின் குணத்தையும் சேர்த்து பாராயணம் மூலம் கேட்பதினால் அதிக பலன் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல், ஸத்ஸங்கத்துடன் இதை செய்யும்போது, மனது பகவானுடன் ஐக்கியமாகிறது. இதன் மூலமே முழு பலன் அடைய முடியும். அதனால்தான், கலியுகத்தில் நாம ஸ்மரணை போதும் என்பது சாயிநாதரின் நோக்கம். அதனால்தான், நாம் அனைவருக்கும் நாதரான சாயிநாதரின் சரித்திரமான சாயி ஸத்சரித்திரத்தை இந்த சப்த சப்தாஹாவில் பாராயணம் செய்வது அவசியமாகிறது.

கண்மூடித்தனமாக இல்லாமல், எனது பக்தர்களாக இருக்கிறீர்கள் என்பதை நினைத்து, கவனத்தோடு மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு, எனது நாமத்தை ஸ்மரனை செய்தால் போதும் என்கிறார் பாபா. அதோடு பாபா கூறிய மற்றொரு உன்னதமான விஷயம். பலவகையில் வழி தவறி ஓடும் மனதை, அவர் மீது வைத்து கவலையில்லாமல் இருக்கும்படி கூறுகிறார். வழி தவறிய மனதை பாபாவிற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்றால், முதலில் நம் மனதை நாமே கட்டுப்படுத்தி, அதற்குப் பிறகு பகவானுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும்.

அவ்வாறு, நம் மனதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், அது பூரண விசுவாசத்துடன் செய்யப்படும் பூஜை, பஜனை, பாராயணம், ஸத்ஸங்கம் மூலமாக மட்டுமே முடியும்.

ஸத் ஸங்கத்வே நி: ஸங்கத்வம்
நி: ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச் சலதத்யம்
நிச் சலதத்வே ஜீவன் முக்தி

என்று ஆதிசங்கரர் கூறினாரென்றால் ஸத்ஸங்கத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நடக்கும் ஸத்சங்கங்களில் கலந்து கொண்டு, அங்கு சொல்லப்படும் கருத்துக்களை கவனமாக கேட்டு நடந்தால், குருவின் திருவருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement