சபரிமலை: பம்பை- நிலக்கல் இடையே செயின் சர்வீஸ் தொடங்கப்பட்டது. இதற்காக 100 பஸ்கள் பம்பை வந்துள்ளது. சபரிமலை வரும் வாகனங்களில் வேன், பஸ் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் அனைத்தும் நிலக்கல்லில் பார்க்கிங் செய்யப்படுகிறது. தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் பம்பையிலிருந்து கேரள அரசு பஸ் மூலம் நிலக்கல் செல்கின்றனர். இதற்காக கேரள அரசு போக்குவரத்துக்கழகம் செயின் சர்வீஸ்களை நடத்துகிறது. பம்பையில் இருந்து நிலக்கல் செல்ல கட்டணம் 22 ரூபாய். இதுபோல பக்தர்கள் பம்பை திருவேணி சந்திப்பிலிருந்து பஸ்ஸ்டாண்ட் செல்லவும் பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் கட்டணம் ஐந்து ரூபாய். பம்பை வரும் பஸ்களுக்கு டீசல் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு பஸ்களுக்கு தற்போது தனியார் பங்குகளில் டீசல் பிடிக்கப்படுகிறது. ஆனால் வடசேரிக்கரை கடந்த பின்னர் எந்த தனியார் பெட்ரோல் பங்குகளும் இல்லாததால் தனியார் பங்குக்கு வரும் டேங்கரை பம்பைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயின் சர்வீசுக்கு வரும் பஸ்களுக்கு மட்டுமே பம்பையில் டீசல் பிடிக்கப்படும். இதர பஸ்கள் அனைத்தும் அந்தந்த இடங்களில் தனியார் பங்குகளில் டீசல் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.