சபரிமலை பாதையில் யானைகள் கண்காணிக்க 3 பறக்கும் படைகள்!
சபரிமலை: சபரிமலை பாதைகளில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, துணை வனகாப்பாளர் பிரசாத் கூறினார். அவர் கூறியதாவது: சபரிமலை சீசனையொட்டி, பம்பை மற்றும் சன்னிதானத்தில் வனத் துறையின் 2 கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப் பட்டுள்ளது. அதில் 2 பிரிவுகளாக 16 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், காடுகளில் போதை பொருட்களை பதுக்கி வைப்பது, கழிவு பொருட்களை கொட்டுவது, விறகுக்காக மரக்கிளைகள் வெட்டப் படுவது போன்றவற்றை தடுக்கும் பணிகளை மேற்கொள்வர். பம்பை, சன்னிதானத்தில் பக்தர்கள் வரும் பாதையில் திரியும் பாம்புகளை பிடித்து காட்டுக்குள் கொண்டு விட பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, வனத்துறையின் கால்நடை அதிகாரி தலைமையில் பம்பை, சன்னிதானம், புல்பாறை மற்றும் சபரிமலை பாதைகளில் ரோந்து சுற்றி வர 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.