Load Image
Advertisement

ஷிர்டி பாபா பகுதி - 9

நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்த பாபா, திடீரென விறகிற்குப் பதிலாகத் தம் கரத்தையே நெருப்பின் உள்ளே வைத்தது ஏன்? பக்தர்கள் கண்ணீருடன் விம்மினார்கள். புன்முறுவலோடு பதில் சொல்லலானார் பாபா... நெருப்பின் உள்ளே கையை விடாமல் வேறு நான் என்ன செய்திருக்க முடியும்? அந்தக் கொல்லனின் மனைவி என் பக்தை அல்லவா? அவள் குழந்தையல்லவா நெருப்பில் விழுந்துவிட்டது? கணவனுக்கு உதவியாக நெருப்பு நன்கு வளரும் வகையில் துருத்தியை இயக்கிக் கொண்டிருந்தாள் அவள். கண்மூடி என்னையே நினைத்தவாறிருந்தாள். தன் குழந்தை பளபளவெனப் பிரகாசிக்கும் நெருப்பை நோக்கி நகர்வதையோ, அதில் விழுவதையோ அவள் கவனிக்கவே இல்லை. என் மேல் கொண்ட பக்தியால் தானே தன் குழந்தையை கவனிக்க மறந்தாள்? அப்போது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு ஆகிறதல்லவா? நெருப்பில் கையைவிட்டுக் குழந்தையைச் சடாரென எடுத்துவிட்டேன். நல்லவேளை, குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அதன் உயிர் காப்பாற்றப் பட்டுவிட்டது. என் கரம் கொஞ்சம் கருகிவிட்டது. அதனால் பாதகமில்லை!.

பாபாவின் விளக்கத்தைக் கேட்ட அடியவர்கள் உருகினர். எங்கோ இருக்கும் தன் பக்தையின் குழந்தையை இங்கிருந்தே காப்பாற்றத்தான் பாபா தன் கரத்தைச் சுட்டுக் கொண்டார் என்றறிந்து அவர்களின் நெஞ்சம் விம்மியது. மாதவராஜ் தேஷ்பாண்டேயிடமிருந்து இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டார் பாபாவின் அடியவரான நானா சாஹேப் சாந்தோர்கர். கடவுள் மனித உடல் எடுத்தால், அந்த உடலின் உபாதைகள் அவருக்கும் இருக்குமே! வெந்துபோன கரத்தின் வேதனையை பாபா தாங்கவேண்டி இருக்குமே! என் தெய்வமே! ஏன் இப்படி உன்கரத்தையே நீ சுட்டுக் கொண்டாய்! அவர் உள்மனம் அழுது அரற்றியது. பரமானந்த் என்ற மும்பையைச் சேர்ந்த மருத்துவரை அவருக்குத் தெரியும். நெருப்புக் காயங்களுக்குச் சிகிச்சை செய்வதில் வல்லவர் அவர். அவரிடம் விஷயத்தைச் சொல்லி பாபாவுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக உடனே அவரை அழைத்து வந்தார் சாந்தோர்கர். நெருப்புச் சுட்ட கையின் மேல் தடவுவதற்கான களிம்பு, கையைச் சுற்றிக் கட்டுவதற்கான துணி போன்ற மருத்துவ உபகரணங்களோடு மருத்துவர் பரமானந்த், ஷிர்டி வந்து சேர்ந்தார். பாபாவின் தீய்ந்த கரத்திற்கு மருந்திட வேண்டி கையைக் காட்டுமாறு பாபாவிடம் பக்தியோடு விண்ணப்பித்தார். ஆனால், பாபாவிடமிருந்து கலகலவென ஒரு சிரிப்புத்தான் எழுந்தது.

அவர் மருத்துவரிடம் கையைக் காட்டவில்லை. பக்தர்களின் பிறவிப் பிணியையே தீர்க்கும் பாபாவுக்குத் தன் உடல் பிணி ஒரு பொருட்டாகப் படவில்லை போலும்! பக்தர்களின் நோயையெல்லாம் தீர்க்கும் பாபா விரும்பியிருந்தால் தன் கைக் காயத்தையும் உடனே சரி செய்துகொண்டிருக்க முடியும். ஏனோ அதையும் அவர் விரும்பவில்லை. அன்பர்களே! மனித உடல் நிலையில்லாதது. ஆன்மா மட்டுமே நிலையானது. முழு உடலும் ஒருநாள் அழியத்தானே போகிறது! ஒரு கரம் நெருப்பில் கொஞ்சம் காயம் அடைந்தால், அதனால் என்ன இப்போது? நான் வேதனைப் பட்டாலும் அதில் தவறில்லையே? ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும்போது, இந்தச் சாதாரண உடல் வேதனை பெரிதா என்ன? நிலையற்ற உடலை மறந்து நிலையான ஆன்மாவைச் சிந்தியுங்கள். கடவுளே நம் அனைவருக்குமான மருத்துவர். நம் உடலில் வரும் நோய்கள் ஒன்றுமே இல்லை. உள்ளத்தில் வரும் காமம் கோபம் போன்ற நோய்களை கடவுள் மேல் கொண்ட பக்தியால் குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள்!. கற்கண்டைப் போல் தித்திக்கும் பாபாவின் அருள்மொழிகளைக் கேட்டு பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள். பாபாவின் அடியவர்களில் ஒருவர் பாகோஜி ஷிண்டே. அவர் ஒரு குஷ்டரோகி. முன்வினை குஷ்டரோகமாக வந்து அவரைப் பீடித்திருந்தது. பாபாவின் சந்நிதியில் தன் வேதனைகளை மறந்து அவர் வாழ்ந்து வந்தார்.

நோயுற்ற உடல் காரணமாக அவர் துரதிர்ஷ்டசாலி என்றாலும், இன்னொரு வகையில் அவர் பெரும் அதிர்ஷ்டசாலி. பாபாவை அடிக்கடி தரிசிக்கவும், பாபாவின் அருள் மொழிகளைக் காதாரக் கேட்கவும், அவர் பாக்கியம் பெற்றிருந்தார். அவர் தன்னால் இயன்ற பணிவிடைகளைச் செய்யும் பொருட்டு பாபாவின் திருக்கரத்தை அணுகினார். வெந்திருந்த அதில் நெய்பூசி நன்றாகத் துடைத்துவிட்டார். பாபா மலர்ந்த முகத்துடன் அவர் செய்யும் பணிவிடைகளை ஏற்றுக் கொண்டார். ஒரு வாழை இலையை அந்தக் கரத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டார். இது ஏதோ அவருக்குத் தெரிந்த எளிய சிகிச்சை முறை. மருத்துவர் பரமானந்திடம் கையைக் காட்ட மறுத்த தெய்வம், தம் தீவிர அன்பரான ஷிண்டேயின் எளிய சிகிச்சையை ஏற்றுக் கொண்டது. தொடர்ந்து பக்தர்கள் விண்ணப்பித்ததன் பேரில், பாபா தம் கரத்தையும் குணப்படுத்திக் கொண்டார். பாபா முழுமையான ஒரு சித்தர். அவர் விரும்பியிருந்தால் தம் கரத்தை ஒரு நொடியில் சரிசெய்து கொண்டிருக்க முடியும். ஆனால், தம் பக்தர்கள் சுயநலத்தைத் துறந்து பிறரின் பொருட்டாக வேதனைகளைத் தாங்க முன்வரவேண்டும் என்று போதிக்க விரும்பினார். வார்த்தைகளால் அல்லாமல், ஒரு நிகழ்ச்சி மூலமே அந்த போதனையை நிகழ்த்திக் காட்டி விட்டார்.

பாபாவின் அடியவர்கள், சுயநலத்தைத் துறந்து பிறர் நலனுக்காக வாழவேண்டும் என்ற படிப்பினையைப் பெற்றார்கள். அருட்சோதி தெய்வம் என்னை ஆண்டுகொண்ட தெய்வம் என்ற பாடலில் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம் என அருட்பெரும் ஜோதியின் தனிப்பெருங் கருணையைப் பாடிப் பரவுகிறார் வள்ளலார். அடியவர் எண்ணியதை எண்ணியவாறு நிறைவேற்றிக் கொடுப்பதல்லவா கடவுளின் கருணை! அப்படி அடியவர்கள் வேண்டிய வரத்தை அவர்களுக்கு வழங்கும்போது இறைவன் புரியும் லீலைகள் பல. அத்தகைய ஒரு லீலை பாபாவால், நானா சாஹேப் சாந்தோர்கரின் வாழ்வில் நிகழ்த்தப்பட்டது. திடீரென சாந்தோர்கருக்கு பண்டரிபுரத்திற்கு மாற்றலாகும் உத்தரவு வந்து சேர்ந்தது. அவரைப் பொறுத்தவரை அவருக்குக் கைலாயம், வைகுண்டம் எல்லாம் ஷிர்டிதான். இப்போது பண்டரிபுரம் போக வேண்டியிருக்கிறதே? பகவான் பாபாவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு போகலாம். அவர் எண்ணப்படித் தானே எல்லாம் நடக்கிறது? பாபா, தாம் பண்டரிபுரம் போக வேண்டும் என்று விரும்புகிறாரா! இல்லையா? இந்த ஊர் மாற்றம் எனக்கு நல்லதுதானா? நான் என்ன செய்ய வேண்டும்? உடனே பண்டரிபுரம் புறப்பட வேண்டியதுதானா? எதுவும் முடிவுசெய்ய இயலாத அவர் ஷிர்டி நோக்கி நடக்கலானார். ஷிர்டியிலிருந்து சில மைல் தொலைவில் உள்ள நீம்காவன் என்ற ஊரை அவர் அடைந்தார். சாந்தோர்கர் ஷிர்டியை நெருங்கிக் கொண்டிருந்த அந்த வேளையில், பாபா தங்கியிருந்த ஷிர்டி மசூதியில் திடீரென ஒரு பரபரப்பான சூழல் தோன்றியது. மகல்ஸாபதி, அப்பாஷிண்டே, காஷிராம் உள்ளிட்ட அடியவர்களோடு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்த பாபா, சட்டெனப் பேச்சை நிறுத்தினார். அடியவர்கள் வியப்போடு பாபாவை கவனிக்கத் தொடங்கினார்கள்...

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement