Load Image
Advertisement

நடராஜர் அபிஷேகங்கள்!

தேவர்கள் நாளில் வைகறைக்குச் சமமானது மார்கழி, காலைச் சந்திக்குச் சமமானது மாசி. உச்சிக்காலத்திற்குச் சித்திரை, மாலைக்காலத்திற்குச் சமமானது ஆனி. இரவுக்கு ஆவணி, அர்த்தயாமத்துக்குப் புரட்டாசி, ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்திலன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் படும்.

தில்லையில் ஐந்து சபைகள்:

1. சித்சபை சிற்றம்பலம் நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் கருவறை. இதன் வலப்புறம் சிதம்பர ரகசியம். பொன் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜர் உருவம், சிதம்பர ரகசியம் அருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம் என மூன்று நிலைகள்.

2. கனகசபை சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் பெருமான் திருமஞ்சனம் கொள்ளும் இடம்.

3. தேவசபை பேரம்பலம் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.

4. நிருத்த சபை தேர் அம்பலம், நடராஜாவின் திருமுன்னர் கொடிமரத்தின் தென்புறம் உள்ளது. ஊர்த்துவ தாண்டவ மூர்த்திகள் காட்சி தரும் இடம்.

5. ராஜசபை ஆயிரங்கால் மண்டபம், மார்கழி, ஆனித் திருமஞ்சனம் நடக்குமிடம். ஆருத்ரா தரிசனம் கொடுக்குமிடம்.

நவதாண்டவம்

தஞ்சை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தில் நவதாண்டவ மூர்த்திகளான புஜங்க லலிதம், கால சம்ஹாரமூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுர சம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார் ஆகியயோரை சிற்ப வடிவில் காணலாம்.

மடவார் விளாகம் நடராஜர்

ஸ்ரீ வில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் பாண்டிநாட்டு கோயில்களில் காணப்பெறுவது போல ஒரே கல்லால் செய்யப்பெற்ற நடராஜரின் அற்புதக் கலைப் படைப்பு உள்ளது.

மேலைச் சிதம்பரம்

பேரூர் பட்டீஸ்வரர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டு தில்லைத் திருநடனத்தை காட்டியருளிமையால் இறைவனை குடகத்தில்லை அம்பலவாணன் என்று தேவாரத்தில் சுந்தரர் குறித்துள்ளார். பேரூர் மேலைச் சிதம்பரம் என வழங்குவதற்கு இந்நிகழ்ச்சியே காரணமாகும்.

மஞ்சனம் என்றால் நீராடல் என்பது பொருள். இறைவனின் நீராடலைத் திருமஞ்சனம் என்று குறிப்பிடுவர். ஆனிமாத உத்திர நட்சத்திர நாளில் இவ்விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி முக்கிய சிவாலயங்களில் பத்துநாள் விழா நடக்கும். ஒன்பதாம் நாள் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமி,சண்டிகேஸ்வரர் தேர்களில் வலம் வருவர். பத்தாம் நாள் நடராஜருக்கு திருமஞ்சனம் என்னும் சிறப்பு நீராடல் விழா நடக்கும். அபிஷேகத்துக்குப் பின் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறும். உச்சிவேளையில் (மதியம்) நடராஜர் ஆனந்த நடனம் ஆடியபடியே சித்சபையில் எழுந்தருள்வார். அவருடன் சிவகாமி அம்மையும் இருப்பாள். பின் மகாதீபாராதனை நடக்கும். அன்று இரவு கொடி இறக்கப்படும்.

உதயத்திற்கு முன்பே: தினமும் நடைபெறும் பூஜைக்கு நித்தியம் என்றும், விசேஷ கால பூஜைக்கு நைமித்திகம் என்றும் பெயர். நித்திய பூஜையில் உண்டாகும் குறைகள் நைமித்திக பூஜையில் நீங்குவதாக ஐதீகம். நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை விசேஷ அபிஷேகம் நடக்கும். இதில் இரண்டு அபிஷேகம் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அவை மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம். இந்த இரு நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே நடராஜருக்கு அபிஷேகம் செய்து முடிப்பர்.

இதயக்கோயிலில் ஆனந்த நடனம்: வியாக்ரபாதர், பதஞ்சலி இருவரும் சிதம்பரத்தில் ஈசனின் நடனம் கண்டு மகிழ்ந்தனர். நடராஜரின் திருப்பாதங்களில் வேதங்கள் சிலம்பாக ஒலிக்கிறது. வலக்கை டமருகம் இசைக்கிறது. இடக்கை அக்னியைத் தாங்கியிருக்கிறது. அவரின் சிவந்த இதழ்கள் புன்முறுவலைக் காட்டுகின்றது. பால் போல வெண்ணீறு காற்றில் நறுமணம் பரப்புகிறது. செஞ்சடை எட்டுத் திசைகளிலும் விரிந்தாடுகிறது. வலக்கால் அசுரனை மிதித்து நிற்கிறது. இடக்கால் குஞ்சித பாதமாக (தொங்கிய நிலையில்) நமக்கு அருள்செய்கிறது. இதயம் என்னும் கோயிலில் இறைவன் இடைவிடாமல் திருநடனம் ஆடிக்கொண்டே இருக்கிறார். இதை கண்டு தரிசித்தால் வாழ்வில் எப்போதும் நமக்கு ஆனந்தமே.

மூன்று வழிபாடு: சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் வழிபடப்படுகிறார். அருவம் என்பது உருவமற்றநிலை, உருவம் என்பது கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை, அருவுருவம் என்பது உருவமும் அருவமும் கலந்த நிலை. இம் மூன்று நிலைகளும் உள்ள தலமாக சிதம்பரம் உள்ளது. அருவநிலைக்கு சிதம்பர ரகசியமும், உருவநிலைக்கு நடராஜரும், அருவுருவ நிலைக்கு மூலவர் மூலட்டானேஸ்வர் லிங்க வடிவிலும் இங்கு அமைந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement