திருப்பதி: திருமலை பிரம்மோற்சவத்தில், மூன்றாம் நாளில் காலை, யோக நரசிம்மர் அவதாரத்தில் சிம்ம வாகனத்திலும், இரவு, முத்துபந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடனும், மலையப்ப சுவாமி வலம் வந்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பிரம்மோற்சவத்தின் முதல் நாளில், ஏழுமலையானை தர்ம தரிசனம், விரைவு தரிசனம், ஆர்ஜித சேவைகள், சுதர்சன தரிசனம், பாதயாத்திரை தரிசனத்தில், 69,545 பேர் தரிசித்தனர். இதில், 51,705 பேர் ஏழுமலையானுக்கு, தங்கள் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினர்.
மேலும், ஏழுமலையானுக்கு, உண்டியல் மூலம், 1.68 கோடி ரூபாய்; ஆர்ஜித சேவைகளில், 50,700 ரூபாய்; பிரசாத விற்பனையில், 43 லட்சம் ரூபாய்; அறை வாடகையில், 17.55 லட்சம் ரூபாய் என, நேற்று முன்தினம், 2.29 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. திருமலையில் மலையப்ப சுவாமிக்கு வாகன சேவை முடிந்த பின், மாலை, 3:00 மணிக்கு, மூலிகை கலந்த நீரால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சனத்தின் போது மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு, உலர் பழங்களால் தயார் செய்யப்பட்ட மாலைகள், கிரீடங்கள், ஜடைகள் அலங்கரிக்கப்பட்டது. இதை தயார் செய்ய, தமிழகத்தில் இருந்து, 20 பேர் கொண்ட குழு வரவழைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.