Load Image
Advertisement

ராமானுஜர் பகுதி-5

ராமானுஜருக்கு உள்ளுக்குள் சற்று நடுக்கம். ஏனெனில், எதிரே நின்றவரின் தோற்றம் அப்படி. ஆனால், அவரோடு ஒரு பெண்ணும் நின்றாள். வேடர்குல பெண்மணி. கண்ட நகைகளையும் உடலில் வாரி இறைத்திருந்தாள். ஆனால், முகத்தில் மட்டும் லட்சுமி களை. லட்சணமாக இருந்தாள். குரல் மட்டும் என்னவோ போல் இருந்தது. குழந்தே! இந்த காட்டுக்குள்ளே எப்படி வந்தே? இங்கே திருட்டு பயம் அதிகமாச்சே! நீ யாரு? எங்கே போய்கிட்டு இருக்கே, உன்னைப் பார்த்தா பிராமணர் போல் தெரியுதே, என்றாள் அப்பெண்மணி. மீசைக்காரரும் அவரிடம் இதையே திருப்பிக்கேட்டார். வரை ஆசுவாசமாக தடவிக் கொடுத்தார். ராமானுஜர் வேறெதுவும் சொல்லவில்லை. ஆனால், தான் காஞ்சிபுரம் போவதை மட்டும் கூறினார்.நல்லது...நல்லது...நாங்க இந்த விந்தியமலை அடிவாரத்தில் தான் வசிப்பவங்க தான். வயசும் ஆயிடுச்சு. எம்பெருமான் திருவடியை நல்லபடியா அடைய காஞ்சிபுரம் வழியாத்தான் ராமேஸ்வரம் யாத்திரை போறோம். எங்களோட வந்தா உன்னை காஞ்சிபுரத்திலே விட்டுட்டு கிளம்புறோம், என்றார் வேடன். ராமானுஜருக்கு மகிழ்ச்சி. நம்மை பாதுகாப்பாக காஞ்சியில் விட்டுச் செல்ல எம்பெருமானே இவர்களை அனுப்பியிருக்கிறார் போலும் என எண்ணியவராய் அவர்களுடன் புறப்பட்டார். இதற்குள் மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. தம்பி! கொஞ்சம் வேகமா நடந்தா இருட்டுறதுக்குள் பக்கத்தில் இருக்கிற ஆத்தங்கரைக்கு போய் சேர்ந்திடலாம். அங்கேயிருந்து காலையிலே புறப்படுவோம், என்றார் கடாமீசைக்காரர். அவர்கள் கிளம்பினர். ஆற்றங்கரையும் வந்தது. குளிர் அதிகமாக இருந்ததால் சுள்ளிகளைப் பொறுக்கி வந்து வேடன் தீ மூட்டினார். நடந்த களைப்பில் அப்பெண்ணுக்கு கடும் தாகம் ஏற்பட்டது. இருளில் ஆற்றில் இறங்குவது அபாயம். எனக்கு தண்ணீர் வேண்டுமே, என்றாள். அவர், பேசாம படு. இந்த பக்கத்துலே ஒரு கிணறு இருக்கு. காலையில் அங்கே போய் தண்ணீர் குடிச்சுக்கலாம், என்றார். எப்படியோ அவர்கள் உறங்கி விட்டனர். மறுநாள் வேடன் குறிப்பிட்ட கிணற்றின் பக்கமாகச் சென்றார் ராமானுஜர். படிக்கட்டின் வழியாக உள்ளே இறங்கினார். கை, கால்களை அலம்பி விட்டு, ஒரு குடுவையில் தண்ணீர் மொண்டு வந்தார். வேடன் மனைவிக்கு கொடுத்தார். அவளுக்கு தாகம் அடங்கவில்லை. திரும்பவும் கொண்டு வந்து கொடுத்தார். இப்போதும் தாகம் அடங்கியபாடில்லை. மீண்டும் கொண்டு வந்து கொடுத்தார். தம்பி! இன்னும் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாயேன், என்றாள். ராமானுஜர் மீண்டும் தண்ணீர் எடுத்து வந்தார். வேடனையும், அவர் மனைவியையும் எங்கே? அவர்களைக் காணவில்லை. சுற்றுமுற்றும் தேடிப்பார்த்தார். பக்கத்தில் அவர்கள் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. இடமே வித்தியாசமாக தெரிந்தது. தெருக்கள், மாடமாளிகைகள் தெரிந்தன. ஒரு பெரியவர் அந்தப்பக்கமாக வந்தார். அவரிடம், ஐயா! இது எந்த ஊர்? என்றார் ராமானுஜர். ஓய்! சரியான ஆளைய்யா நீர். உம்முடைய ஊரையே யாருடைய ஊர் என்று கேட்கிறீர். உம்மை யாதவப்பிரகாசரின் மாணவர் என்று இந்த ஊரே சொல்லும். சரியான ஆள் தான். காஞ்சிபுரத்திற்குள் நின்றுகொண்டு காஞ்சிபுரம் அடையாளம் தெரியாமல் பேசுகிறீர். இது சாலக்கிணறு என்பதை நீர் அறியமாட்டீரோ?, என்றவாறு, ராமானுஜரின் விளக்கத்திற்கு காத்துக் கொண்டிராமல் அவர் போய்க் கொண்டே இருந்தார். ராமானுஜருக்கு ஆச்சரியம். ஆ... நேற்று விந்தியமலைச் சாரலில். இன்று காஞ்சி நகரில். இது எப்படி சாத்தியம்? அப்படியானால், என்னோடு வந்த அந்த தம்பதியர் ஸ்ரீமன் நாராயணனும், தாயார் லட்சுமிதேவியுமா? அவர்களால் மட்டும் தானே இது சாத்தியமாகும்? அந்த நபர் சொன்னது உண்மை தானா? அவரது சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில், தூரத்தில் காஞ்சிபுரத்து பெண்கள் சிலர் குடத்துடன் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க வந்தனர். ராமானுஜர் அப்படியே பரவசித்துவிட்டார். ஸ்ரீமன் நாராயணனை துதித்தார். லோகநாயகா! உலக மக்களுக்கு இது போன்ற சோதனைகள் வந்து கொண்டே இருக்கட்டும். அப்படியானால் தான் உன் தரிசனம் அடிக்கடி கிடைக்கும். பிறவியென்ற தொல்லை நீங்கும், என்று மனதாரச் சொன்னார். இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏ இறைவா! எனக்கு பணத்தை தா, சுகத்தை தா, வீடு வாசலைத்தா, அழகான மனைவியைத் தா, அந்த ஆணழகனை என் கணவனாக்கு, என்றெல்லாம் வேண்டினால், இறைவன் வரவும் மாட்டான். நாம் கேட்டதை தரவும் மாட்டான். ஏற்கனவே விதிக்கப்பட்ட விதியை அனுபவிக்கவே பூலோகம் வந்துள்ளோம். அவன் தரும் துன்பத்தை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டால் இறைக்காட்சி நிச்சயம் கிடைக்கும். அப்படியே நடந்து வீட்டுக்கு வந்து விட்டார் ராமானுஜர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement