ஓதரிய ஐயைந்து தத்துவம் தாகியெவ்
வுலகுநின் செயலா வதென்(று)
உணரும்வகை யாதிசந் திரதாரி யாய்உலகின்
உறுசெனன துரித மாற்றி
ஆதியுமை யுடனிருந் துயிர்வகை புணர்த்திவிடை
யாரூட னாய்இ னிதுபேர்
அருள்புரிந் துயர்நடன மூர்த்தியாய்ப் பெரிதுவகை
யானந்த மயம தாக்கிக்
காதலியெ னக்கவுரி செங்கைதொட் டருள்பெருகு
கலியாண சுந்த ரனெனக்
காட்டிநல் வதுவைகொண் டாண்பெண்ணோ டுறைதரக்
கருதி யுயர்பிட் சாடனத்
தீதிலுரு வங்கொண்டே வர்க்குமெய்ஞ் ஞானமும்
சிறந்திட அளிப்பை யன்றோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.
காமனைக் காய்ந்தவடி வங்கொண் டுயிர்க்கெலாம்
காமநீத் திடநி னைத்துக்
காலாரி யாய்உயிர்ப் பயமொழித் தேமுனர்க்
கசடர்புர மூன்றெ ரித்துத்
தாமதம் இராசதம் சத்துவம் எனாவரும்
தக்க முக்குண மாற்றியே
சலந்தர வதஞ்செய்வடி வாகியுயர் மாதவர்
தவம்வளர்த் தருளை நல்கிப்
பூமிசை கிருத்திவா சத்திறைய தாகியே
பொங்குபா சங்க ழித்துப்
புகழ்தக்கன் மகம்அழித் திடுவீர னாகியே
பொருந்துஅற வினைய ளித்துத்
தீமைதவிர் நாரிபங் குடையனாய் உட்பகைகள்
தீர்த்திடப் புரிவை யன்றோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.
அம்பிகைமெய் பாதிகொண் டாண்பெண்பு ணர்ந்திட
அமைத்துக் கிராத வடிவாய்
அகமருவு மூர்க்கரை யொழித்தரிய கங்காள
னாய்உயிர்க் கோக ளித்துப்
பம்புசண் டேசர்க் கனுக்கிரக வடிவதாய்ப்
பத்தியன் பர்கள் எவர்க்கும்
பாலித்து விண்புரந் தருள்நீல கண்டனாய்ப்
பயிலுமும் மலமொ ழித்துக்
கம்புளணி மாயனுக் காழியருள் வடிவதாய்க்
கருதுபோ கங்கள் ஈந்து
கருணைதரு விக்கினப் பிரசாத னாயுட்
களங்கம தொழித்து முருகன்
செம்பரையி னோடமர்ந் துலகின்மனை சேயொடு
சிறந்திடப் புரிவை யன்றோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.
பகர்ஏக பாதனாய்ச் சரியைகிரி யாதிய
பயன்தந்து தருமம் உய்யப்
பரமசுக வாதனத்து இறையாகி வைகிமுறை
பயில்தெக்க ணாமூர்த் தியாத்
தகைகொள்குரு வருள்தந்து இலிங்கவுற் பவபீட
சத்தியொடு இருந்து புவனத்
தாய்தந்தை யெனவுறைந் தருளநீ ஐயைந்து
தத்துவப் படிவம் ஆனாய்
உகமுடிவில் அரியயன் உருத்திரன் அனந்தமறை
உம்பர்உயிர் பல்பு வனமும்
ஓங்குமுச் சுடர்ஆறு சமயமெனு மற்றதும்
ஒடுங்குவடி வங்கொள் தனியாய்ச்
செகமுடிவின் அரியசங் காரதாண் டவம்இடும்
சிற்பரா காச முதலே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.