Load Image
Advertisement

கற்பக விநாயகர் வணக்கம்

மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா!
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே
சங்கரனார் தருமதலாய் சங்கடத்தைச் சம்கரிக்கும்
எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எமையாள வேண்டுமென
அப்பனவன் மடியமரும் அருட்கனியே கணபதியே!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்கும் உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தை உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றோம்
உள்ளியதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீஎழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியெனப் போற்றுகின்றோம்.

-துர்க்கை சித்தர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement