வயலோரம் புரள்கின்ற கயல்கள் எல்லாம்
வடிவுடையாள் கயல் விழியின் வடிவம் காட்ட
அயல்நிற்கும் தென்னையெலாம் எங்கள் அன்னை
அம்பிகையின் அருள்காட்டி அமுதம் ஊட்டப்
புயல்காட்டும் கூந்தலுடன் பிறைபோல் நெற்றி
பூத்தநிலா முகம் காட்டப் பொழியும் அன்பால்
செயலெல்லாம் காட்டிவிழி நடத்துகின்ற
செகன்மாதா! வடிவுடையாள் பாதம் காப்பே!