சபரிமலைக்கு சென்றதும் பக்தர்கள் எப்படி பூஜை செய்ய வேண்டும் என்ற விபரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். சபரிமலை கோயிலில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஏற்றுதல், பாயாசம் வைத்தல், வெள்ளை நைவேத்யம், திரிமதுரம், பஞ்சாமிர்தம், அப்பம், எள்ளுருண்டை, பழம், பானகம், இளநீர் வழங்குதல், நெய்விளக்கு, புஷ்பாஞ்சலி, சந்தனம் சாத்துதல் ஆகியவை முக்கிய வழிபாடுகளாக உள்ளன. இவற்றில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஆகியவை தினமும் செய்யப்படும் வழிபாடுகள். நெய் அபிஷேகம்: சபரிமலை சென்றதும் கோயிலின் அருகில் இருக்கும் பஸ்மகுளத்திற்கு சென்று, தலையில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும். இருமுடி கட்டைப்பிரித்து, அதிலிருக்கும் நெய்த்தேங்காயை உடைத்து, நெய்யை ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெற வேண்டும். மேல்சாந்தி நெய்யை பகவானுக்கு அபிஷேகம் செய்து, சிறிதளவு நெய்யை பக்தருக்கு கொடுப்பார். அதை பிரசாதமாக எடுத்து வரலாம். மகரபூஜைஅன்று நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள். இந்த ஒரு நாள் மட்டும்தான் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து நெய் அபிஷேகம் நடக்கும். இந்த நாளில் ஏராளமானோர் அபிஷேகம் செய்ய முடியாமலே திரும்பிவிடுவர். இவர்கள் கொண்டு செல்லும் நெய்யை தீவட்டி, விளக்கு எரிக்க கொடுத்து விடுகிறார்கள். ஐயப்பன் கோயிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான். இந்த நெய் அப்பம், அரவணை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. நெய் அபிஷேகம் நடத்தியபிறகு ஐயப்ப சுவாமிக்கும், நெய்த்தேங்காயின் ஒரு பகுதியை அக்னி குண்டத்தில் இடுவார்கள்.