தென்மாவட்ட மக்கள் ஐயப்பனை சாஸ்தாவாக வழிபடுகிறார்கள். சாத்தா என்றும், சாத்தான் என்றும் பேச்சுவழக்கில் சொல்வதுண்டு. சாத்து என்றால் கூட்டம் எனப்பொருள். ஐயப்பன் கோயில் மட்டுமின்றி சாஸ்தா கோயில்களும் காடு சார்ந்த பகுதியில் அமைந்திருக்கும். எனவே கோயிலுக்கு தனித்து வராமல் கூட்டமாகத்தான் வருவார்கள். குறிப்பாக ஐயப்பன் பிறந்த தினமான பங்குனி உத்திரத்தன்று சாஸ்தா கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு காலத்தில் சபரிமலைக்கு 60 முதல் 70 பேர் வரை மட்டுமே சென்றனர். எனவே காட்டிற்குள் விலங்குகளை சமாளிக்க கோடரி, ஈட்டி ஆகிய ஆயுதங்களையும் எடுத்துச் செல்வார்கள். அப்படிச் சென்றாலும்கூட மிருகங்களிடம் சிக்கி பலரும் இறந்துவிடுவதுண்டு. 15 பேர்தான் திரும்பி வருவார்கள். அப்படித் திரும்பி வருபவர்களை பக்தியுடன் ஏற்று குருசாமியாகக் கொள்ளும் பழக்கம் பழங்காலத்தில் ஏற்பட்டது.