வீடுகளில் ருக்மிணி கல்யாணம், சீதா கல்யாணம் நடத்துகிறார்கள். இவற்றைக் காண்பதை பெரும்பேறாக எண்ணுகிறோம். ஆனால், ஆண்டாள் கல்யாணம் தான் இவற்றையெல்லாம் விட உயர்ந்தது. திருமால், கிருஷ்ணனாக மானிட அவதாரம் எடுத்த போது, லட்சுமி ருக்மிணி என்ற மானிடப்பிறப்பாக வந்து அவரைத் திருமணம் செய்து கொண்டாள். அவர் ராமனாக அவதாரம் எடுத்த காலத்தில், சீதையாகப் பிறந்து திருமணம் செய்தாள். மானிடரும் மானிடரும் திருமணம் செய்வது புதுமையல்ல. ஆனால், ஆண்டாள் மனிதப் பிறப்பெடுத்தாள். அர்ச்சாவதார (சிலை) ரூபமான ரங்கநாதரை எழுந்து வரச் செய்து திருமணம் செய்து கொண்டாள். மனிதன் தெய்வத்தை திருமணம் செய்வதென்பது என்றால், அதற்கு எவ்வளவு கடுமையான பக்தி செலுத்தியிருக்க வேண்டும்! அதனால் ஸ்ரீதேவியான லட்சுமியை விட, பூதேவியான ஆண்டாள் உயர்ந்தவள். ஆண்டாள் கல்யாணமும் மிக உயர்ந்தது.