பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று துவங்கியது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர்திருவிழா, ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று துவங்கியது. இதை முன்னிட்டு, சுவாமிக்கும், அம்பாளுக்கும் நடந்த திருக்கல்யாணத்தை பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து, விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரம்ணியர், கணபதி சுவாமிகள், அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களில் எழுந்தருளினர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைலாசபதே, மகாகணபதிக்கு ஜெய், சுப்பிரமணிய சுவாமிக்கு ஜெய் என பக்தி கோஷங்களை முழங்கியபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர். பக்தர்களுக்கு இழுப்பதற்கு உதவும் வகையில் புதுப்பள்ளி அர்ஜுன் என்ற யானை தேரை பின்னாலிருந்து முட்டுக்கொடுத்து தள்ளின. கல்பாத்தியின் நான்கு வீதிகளிலும் தேர்கள் பவனி வந்தன. தொடர்ந்து காலை 11:00 மணி அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாநில தலைமை போலீஸ் அதிகாரி ராவாடா சந்திரசேகர் விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதிப்பீடு செய்ய வந்திருந்தார்.
விழாவில், இரண்டாம் நாளான நாளை மந்தக்கரை மகா கணபதி கோவில் தேர், திருவீதிகளில் வலம் வருகிறது. நாளை மறுநாள்பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தேரோட்டமும், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவில் தேரோட்டமும் துவங்குகின்றன. அன்று மாலை, 6:00 பணியளவில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே, தேர் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான ஆறு தேர்களின் சங்கமம் நடக்கிறது. விழாவையொட்டி மாவட்ட எஸ்.பி., அஜித் குமார் மேல்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.