மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஜென்ம நட்சத்திர தினமான வைகாசி பூரட்டாதி முன்னிட்டு நேற்று திருவாவடுதுறை ஆதீனம் தலைமை மடத்தில் கணபதி ஹோமம், ஆயுஸ்ய ஹோமம், குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
தொடர்ந்து கலைமகள் சுவடிப்புலம் மற்றும் ஆவண காப்பகத்தை திறந்து வைத்த குரு மகா சன்னிதானம் சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோமுக்தீஸ்வரர் கோவிலில் கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் மற்றும் உலக நன்மை வேண்டி ருத்ர அபிஷேகம், சிறப்பு ஹோமம் பூர்ணஹுதியுடன் நடந்தது. பின்னர் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சன்னதியில் ஆதீன புலவர் குஞ்சுதபாதம் எழுதிய சங்க இலக்கியங்களில் சமயக் கொள்கைகள் எனும் நூலை குருமகா சன்னிதானம் வெளியிட்டார். பூசை ஆட்சிலிங்கம் தொகுத்தளித்த ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை எளிய உரையுடன் கூடிய நூல் வெளியிடப்பட்டது. திருவிடைமருதூர் ஆதீனம் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அருட்கொடை வழங்கப்பட்டது.
மாலை நிகழ்ச்சியில் நாகவேல், வடிவேல் ஓதுவார்கள் திருமுறை பாடினர். ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார். சென்னை பாடநூல் நிறுவன உதவி இயக்குனர் சரவணன் தண்டமிழ் துறைசை ஆதீனமும் தமிழ் தாத்தாவும் என்னும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார். விழாமலரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய அம்பலமான தேசிய கலம்பகம் குறித்து திருப்பரங்குன்றம் பன்னிரு திருமுறை ஆய்வு மையம் சிவதனுஷ் பேசினார். சங்க இலக்கியங்களில் சமய கொள்கை எனும் நூல் குறித்து ஆதீனப்புலவர் குஞ்சிதபாதம் பேசினார். தொண்டு உள்ளத்துடன் சேவை பணியில் ஈடுபடுவோர் கௌரிவிக்கப்பட்டனர் திருவிடைமருதூர் ஆதீனம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானமூர்த்தி நன்றி கூறினார். இரவு குரு முதல்வர் பூஜை நிறைவில் தமிழ்நாடு பாடநூல் நிறுவன உதவி இயக்குனர் சரவணன் தமிழ் பணியை பாராட்டி உ வே சா விருதாக செந்தமிழ் பதிப்பு செம்மல் எனும் விருதும் பொற்கிழி ரூ 5000, திருப்பரங்குன்றம் சிவதனுஷ் சைவ பணியை பாராட்டி ஆறுமுக நாவலர் விருதாக சைவ நூல் பதிப்பு சதுரர் எனும் விருதும் ரூ 5000 பொற்கிழியும் ஆதீனம் 24 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சூரியனார் கோவில் ஆதீனம் 30-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், நாச்சியார் கோவில் ஆதீனம் இளைய குருமகா சன்னிதானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.