பதிவு செய்த நாள்
15
நவ
2019
11:11
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த, முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில், நடப்பாண்டு தேர்திருவிழாவில், கடந்த, 6ல் கம்பம் நடப்பட்டது. இதை தொடர்ந்து, அம்மனுக்கு தினமும் அபிஷேகம், ஆராதனை நடந்தது.
நேற்று முன்தினம் இரவு, கொமாரபாளையம், பனங்காட்டு புதூர் மக்கள், காவடி சுமந்து வந்து வழிபட்டனர். நள்ளிரவில் காளிக்காவலசு, முருங்கத்தொழுவு பகுதி பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை நடத்தினர். முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை, 7:50 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதை தொடர்ந்து, பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டு மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில், உடலில் சேறு பூசி, குழந்தைகள் ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். மாலை, 4:30 மணிக்கு தேர் நிலை சேர்ந்தது. இரவில் மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டத்துடன், 15 நாள் விழா நிறைவடைகிறது. முருங்கத்தொழுவு ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை தொடர்ந்து, சுற்று பகுதியில் உள்ள, 14க்கும் மேற்பட்ட கிராமங்களில், மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.