பதிவு செய்த நாள்
16
நவ
2019
12:11
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கார்த்திகையை முன்னிட்டு பேன்சி ரக தீபவிளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வேடபட்டி, நொச்சி ஓடைப்பட்டியில் மண் பாண்ட தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். பானைகள், சாமி சிலைகள், வீட்டு அலங்கார பொருட்கள், கார்த்திகை தீபங்களை தயாரித்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். கார்த்திகை தீப திருநாளுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பேன்சி ரக விளக்குகள்: பித்தளை, பீங்கான், மெழுகு விளக்குகளுக்கு போட்டியாக மண்ணால் செய்யப்பட்ட சிவன், ஆஞ்சநேயர், விநாயகர், யானை, மயில், அன்னம், குத்து விளக்கு, பஞ்சமுகம், உருளி, மனை, கோயில், மேஜிக், தேங்காய், அணையா மற்றும் வண்ண கற்கள், ஜிமிக்கி பொருத்திய விளக்குகள் என 30 க்கும் மேற்பட்ட விதங்களில் விளக்குகள் தயாராகி வருகின்றன.அன்பளிப்பு கொடுக்க கிப்ட் பேக் விளக்குகளும் விற்பனையாகிறது. சாதாரண அகல் விளக்கு ரூ.1 க்கும், பேன்சி ரக விளக்குகள் ரூ.30 முதல் ரூ.150 வரையும் விற்கப்படுகின்றன. ஓசூர், பெங்களூரு, கேரளா, ஆந்திரா வியாபாரிகள் அதிகம் வாங்கி செல்கின்றனர். தயாரிப்பாளர் கஜேந்திரன் கூறியது: மண் விளக்குகளுக்கு மக்களிடம் எப்போதும் மவுசு உள்ளது. வியாபாரிகள் மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்குவதால் மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.