சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியில் மழை வேண்டி மரங்களுக்கு கல்யாணம் செய்து வைத்து கிராமத்தினர் வினோத வழிபாடு நடத்தினர். திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது கம்பிளியம்பட்டி கிராமம். இப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. விவசாயம் பாதித்ததோடு, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டது. மரங்களுக்கு திருமண சடங்கு: இந்நிலையில் மழை வேண்டியும் தொற்று நோயிலிருந்து மக்களை காக்கவும் மரங்களுக்கு திருமண சடங்கு நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து காளியம்மன் கோயில் பகுதியில் அருகருகே இருந்த அரசு மற்றும் வேப்ப மரங்களை கழுவி சுத்தம் செய்தனர்.
ஆணாக பாவித்த அரச மரத்திற்கு பட்டு வேட்டியும், பெண்ணாக பாவித்த வேப்ப மரத்திற்கு புடவையும் கட்டப்பட்டது. இதையடுத்து வேதமந்திரங்கள் முழங்க வேப்ப மரத்திற்கு தாலி கட்டி கல்யாண சடங்கு செய்யப்பட்டது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளானோர் இந்த வினோத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பழங்காலத்தில் கடும் வறட்சி நிலவும் சமயத்தில், இங்கு இது போன்ற சடங்குகள் செய்வது வழக்கமாக இருந்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.