பதிவு செய்த நாள்
18
நவ
2019
12:11
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில் நடத்தப்படும், தமிழ் ஸ்லோகம், திருப்புகழ் வகுப்பின் இரண்டாம் பகுதி துவக்கப்பட்டுஉள்ளது.
ஆர்வமுள்ள சிறார்கள் வரவேற்கப்படுகின்றனர்.இளம் சிறார்கள், ஆன்மிக பக்தியுடன், நல்லொழுக்கங்களை கற்று வளர வேண்டும் என்ற நோக்கத்தில், சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், தமிழ் ஸ்லோகம், திருப்புகழ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இதில், 10 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு, நான்கு பகுதிகளாக, ஓராண்டிற்கு, ஸ்லோகம், திருப்புகழ், நல்லொழுக்க சிந்தனைகள், சாஸ்திர -விஞ்ஞான பிணைப்பு உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒரு வகுப்பில், 25 மாணவ - மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த ஆன்மிக பயிற்சி, முதல் பகுதி மே மாதம் துவங்கி, அக்டோபரில் நிறைவு பெற்றது. பயிற்சி நிறைவு செய்த சிறார்களுக்கு, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், சான்றிதழ்கள், பை, எழுது பொருட்கள் ஆகியவற்றை வழங்கி பாராட்டி, ஊக்கப்படுத்தினார். ஆண்டிற்கு, 500 சிறார்களுக்கு, ஆன்மிக வகுப்புகள் நடத்தி, நல்லொழுக்கத்தை வளர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடத்தப்படும் இந்த வகுப்பின், இரண்டாம் பகுதி சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு வாரமும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை, 4:30 மணி முதல், 6:00 மணிவரை நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில், தங்கள் பிள்ளைகளை சேர்க்க நினைக்கும் பெற்றோர், ஆர்வமுள்ள சிறார்கள் வரவேற்கப்படுகின்றனர்.