பதிவு செய்த நாள்
18
நவ
2019
12:11
சென்னை: பகவான் சத்ய சாய் பாபாவின், 94வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மயிலாப்பூரில் இருந்து சுந்தரம் வரை, நேற்று ரத உற்சவம் நடந்தது.சத்ய சாய் சமிதியின், சென்னை தலைமையகமான சுந்தரம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ளது. இதன் சார்பில், ஆண்டுதோறும், பகவான் சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, பாபாவின், 94வது பிறந்த நாள் விழா, 23ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு, நேற்று, மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாலை, 4:15 மணி முதல், வேத விற்பன்னர்களால் வேதம் ஓதப்பட்டது.தொடர்ந்து, செண்டை மேளம், பாலவிகாஷ் குழுவினர் பேண்டு வாத்தியம் முழங்க, வேத கோஷ்டியின், இளம் பஜனை கோஷ்டியினருடன், பகவான் சத்ய சாய்பாபாவின் ரதம், மயிலாப்பூர், லேடி சிவசாமி பள்ளியில் இருந்து புறப்பட்டது.தெற்கு மாட வீதி, செயின்ட் மேரி சாலை சந்திப்பு, பில்ராத் மருத்துவமனை சந்திப்பு, கிரீன்வேஸ் சாலை வழியாக, ரதம் சுந்தரத்தை வந்தடைந்தது.இரவு, 7:00 மணிக்கு, சுந்தரத்தில் பூரண கும்ப மரியாதையுடன், பாபாவின் ரதம் வரவேற்கப்பட்டது. பின், மங்கள ஆராத்தி நடந்தது. தொடர்ந்து ரத உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு, சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.